மலாவி வாழ்க்கை ஆரம்பம்!
மலாவியில் 13.08.15 அன்று குடும்பத்துடன் வந்து இறங்கினோம். தொடரப்போகும் ஒரு வருடத்திற்கு மலாவி வாழ்க்கை. வேறுபட்ட சூழல், புதிய மனிதர்கள், புதிய வேறுபட்ட வேலைத்தளம் என்று மலாவியில் வாழ்க்கை ஆரம்பித்தாயிற்று. புதிய அனுபவங்களுடன், வாழ்க்கை நன்றாகப் போகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இரு வாரங்கள் எனக்கு தென்னாபிரிக்காவில் ஒரு பயிலரங்கம் இருப்பதனால், நான் மட்டும் தென்னாபிரிக்கா வந்துள்ளேன்.
இந்த மலாவி வாழ்க்கை எனது வேலையுடன் தொடர்புடையதாகவும், குறிப்பிட்ட ஒரு செயல்திட்டத்துடன் இணைந்ததாகவும் இருப்பதால், கூடப் பணிபுரிபவர்களும் வாசிப்பதற்காக, இது தொடர்பான விடயங்களை ஆங்கிலத்தில் ஒரு வலைப்பதிவில் எழுத எண்ணியுள்ளேன்.
இணைப்பு https://kalainmalawi.wordpress.com/
மலாவியில் ஓராண்டு வாழ்க்கைக்கு ஆயத்தம்!
15.07.15
நான் வேலை செய்யும் மருத்துவமனைக்கும், மலாவியில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குமிடையில் இருக்கும் ஒரு திட்டத்தில் ஓராண்டுக்கு அங்கே போய் வேலை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. குடும்பத்தினரையும் அழைத்துப் போகலாம். எனவே மலாவிப் பயணத்திற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன. வருகின்ற ஆகஸ்ட்டில் அங்கே போகப் போகின்றோம்.
வேறுபட்ட சூழல், கலாச்சாரம் கொண்ட ஒரு இடத்தில் வேலை செய்வது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். மகளுக்கும் இப்படியான புதிய அனுபவங்களைப் பெறுவதில் ஆர்வம் இருப்பதனால், அவளும் மிகவும் ஆர்வத்துடன் பயணத்தை எதிர்நோக்கியிருக்கின்றாள்.
* மகளுக்கு மருத்துவமனைக்கு அண்மையிலேயே இருக்கும் International School ஒன்றில், IB DP க்கு நுழைவு அனுமதி பெற்றுக் கொண்டாயிற்று.
* மலாவியைப்பற்றிய தகவல்களைத் தேடித்தேடிப் படிக்கின்றேன் :).
* அங்கே போவதற்காக நாம் பெற வேண்டிய தடுப்பூசிகள் அனைத்தும் எடுத்தாயிற்று.
* போவதற்கு முன்னால் ஆயத்தம் செய்ய வேண்டிய ஆவணங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
* அங்கே போவதற்கு முன்னால்ஆராய்ச்சிப் பணியை முடித்துக் கொடுக்க விரும்பியதால், வேலையில் அதிக நேரம் செலவளிக்க வேண்டியிருந்தது.
* மலாவிப் பயணத்திற்கு முன்னர் இலங்கை போய் வரவிருப்பதால், அவசரம் அவசரமாக எல்லா வேலைகளும் நடைபெறுகின்றன.
விரைவில் அங்கிருந்து அடுத்த பதிவை இடுவேன் என நினைக்கின்றேன் :).
12.08.15
மேலுள்ள விடயங்களை எழுதிவிட்டு பதிவேற்றாமல் விட்டுவிட்டேன். இன்று பயணம் ஆரம்பித்துவிட்டது.
இலங்கைப் பயணம் முடிந்து திரும்பிய பின்னர், நேற்றுவரை வேலைக்குப் போய்விட்டு இன்று மலாவிப்பயணம் ஆரம்பித்தாயிற்று. சுவீடன் விமான நிலையத்தில், அடுத்த விமானத்திற்காகக் காத்திருக்கின்றோம். இங்கே இலவச இணைய இணைப்பே மிக நிறைவாக வேலை செய்கின்றது. எனவே விடயங்களை இற்றைப்படுத்துகின்றேன் :).
என் உயிர்ச் சினேகிதி!
எனது மகள் என்னிடம் “யார் உங்களுடைய best friend?” என்ற கேள்வியைக் கேட்கும்போது, நான் உடனே சொல்லும் பதில் ‘ஜெயமணி’. அவளை நான் சந்தித்தது இலங்கையில் தாதியர் பயிற்சிப் பாடசாலையில். பல்கலைக்கழக அனுமதி கிடைக்க முதல் (நாங்கள் பரீட்சைகள் எழுதி முடித்துவிட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பல்கலை அனுமதிக்காகக் காத்திருந்தோம். அந்த இடைவெளியில், தாதியர் பயிற்சிக்குச் சென்றிருந்தேன். அங்கே பழக்கமானவள்தான் இந்த ஜெயமணி. அவளுக்கு நான் வைத்திருந்த பெயர் ‘ஜெசி’. அவளது பெயரின் முதலெழுத்தையும், தகப்பனார் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து வைத்த பெயர்.
எப்படி நாம் சினேகிதிகள் ஆனோம் என்று யோசித்துப் பார்க்கின்றேன். அவளும் நானும் அறைத் தோழிகளும் இல்லை. ஆனால் வகுப்பில் அருகருகே அமர்ந்திருப்போம். உயரத்தின்படி அமர்த்தினார்களா, அல்லது பெயர் முதலெழுத்துப்படி அமர்த்தினார்களா என்பது சரியாக நினைவில் இல்லை. பெயர் ஒழுங்கில் என்றால் J, அடுத்தது K என்றபடியால் அருகருகே அமர்ந்ததாக நினைவு. மேலும், மருத்தவமனைக்குப் பயிற்சிக்குப் போகும்போது, ஒரே பிரிவுக்குப் போய் வருவோம். இதனால் நெருக்கமான நண்பிகள் ஆனோம்.
எனக்குப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்தபோது, நான் தாதியர் பயிற்சியை விட்டு விலகிப் போவதா வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருந்தபோது, அவளும், வேறு பலரும், ஏன் அனைவருமே பல்கலைக்கழக படிப்பை இழக்க வேண்டாம் என்று அறிவுறித்தியதால், விட்டுவிட்டுப் போய் விட்டேன். ஆனால் எங்களிடையேயான அன்பு மட்டும் என்றும் மறையாமல் இருந்து வருகின்றது. நாட்டுச் சூழ்நிலை காரணமான அவளது இடமாற்றத்தால், சிலகாலம் தொடர்பேயில்லாமல் போயிருந்தோம். ஆனால் அன்பு இருந்தால், அது எப்படியும் எம்மை மீண்டும் இணைக்குமல்லவா? அவள் கனடாவிற்கும், நான் நோர்வேக்கும் வந்த பின்னர், ஒரு மாதிரி எப்படியோ தொடர்பை மீண்டும் பெற்று விட்டோம்.
நான் பல்கலைக்கழகத்திற்குப் போன புதிதில், இருவரும் ஒவ்வொருநாளும் கடிதப் பரிமாற்றம் செய்து கொள்வோம். “From Jesy” என்று கடித உறையில் எழுதி மடல்கள் வரும்போது (ஒருவேளை ஜெசி என்பது ஆண்பெயர்போல் தெரிந்ததோ என்னவோ), பலருக்கும் எனக்கு காதலர் உண்டோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது :). பல்கலைக்கழகத்தில் நடக்கும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவளுக்கு எழுதுவேன். அவளும் தாதியர் பயிற்சிப் பாடசாலையில் நடக்கும் விடயங்களை எனக்கு எழுதுவாள்.
நாளொன்றுக்கு அனுப்பப்பட்ட மடல்கள், இரண்டு நாட்களுக்கு ஒன்றாகி, மூன்று நாட்களுக்கு ஒன்றாகி, கிழமைக்கு ஒன்றாகி, மாதத்துக்கு ஒன்றாகி, ஒரு கட்டத்தில் நின்றே போனது :(. அவளுக்கு வந்த காதல்தான் இதற்குக் காரணமோ என்று, கொஞ்சம் வருத்தமாகக் கூட இருந்தது :). பின்னர் நாட்டுச் சூழலில் அவள் இந்தியா போய்விட, தொடர்பை இழந்தோம்.
இந்த உயிர்ப்புப் பக்கத்தில் ஏதோ ஒரு பதிவில் இவளைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் எந்தப் பதிவில் என்பது நினைவில் இல்லை. இப்போ இவளைப்பற்றி எழுதக் காரணம் உண்டு :). 33 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்த அவளை இந்த முறை கனடாப் பயணத்தில் கண்டு வந்தேன். கண்டதில் எனக்குண்டான மகிழ்ச்சி அளவில்லாதது :).
தாதியர் பயிற்சிக் காலத்தில் சாப்பிடப் போவது, வகுப்புகளிற்குப் போவது, மருத்தவமனைக்குப் போவது என்று ஒன்றாகவே செய்து வந்தோம். மிக வேகமாகச் சாப்பிடும் பழக்கம் கொண்ட நான் அவளுடன் சேர்ந்து மிக மெதுவாக உண்ண ஆரம்பித்தேன். இப்போது அவளை விடவும் மெதுவாக உண்ணுகின்றேன் என்று நினைக்கின்றேன் :).
நான் எனது அன்பை வெளிப்படையாகக் காட்டும் இயல்பு கொண்டிருந்தேன். எனவே அவளை விட்டுப் பிரிந்து பல்கலைக்குச் செல்ல நேர்கையில் மிகவும் கவலைப்பட்டேன். ஆனால் அவள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எனவே சிலசமயம் எனக்கு அவள் மேல் இருக்கும் அன்பு, அவளுக்கு என்னிடம் இல்லையோ என்றும் எண்ண வைத்ததுண்டு. ஆனால் நான் செல்லும் நாளிற்கு முதல் நாள் அவளது கவலையையும் அறிய முடிந்தது. நான் விலகிப் போகும் நாளன்று நன்றாக அழுது தீர்த்துவிட்டு வெளியே போய் விட்டேன். அதுவரை அவள் அழவில்லையென்றே நினைவாக உள்ளது. ஆனால், ஏதோ ஒன்றை மறந்துவிட்டு நான் திரும்பி வர வேண்டி இருந்தது. அப்போது வந்து பார்த்தால் அவள் அழுது கொண்டிருந்தாள். சினேகிதி அழுகின்றாளே என்ற கவலையையும் மீறி, அவளுக்கும் என்னைப் பிரிவதில் கவலைதான் என்பதை எண்ணி ஒரு மகிழ்ச்சி மனதுக்குள் வந்து போனதை மறுக்க முடியாது :).
நேர வேறுபாடு காரணமாக அடிகக்டி பேசிக் கொள்வது இல்லையென்றாலும், இருவரும் நமது பிறந்த நாளன்று மட்டும், அது என்ன நாளாக இருந்தாலும், எப்படியும் நேரத்தைச் சரிப்படுத்தி, பேசிக் கொள்வோம். இந்த ஏப்ரல் மாதம் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது, அவள் பெரிய இரு குழந்தைகளுக்குத் தாய். நானும் ஒரு பெரிய குழந்தைக்குத் தாய். அவளின் குடும்பத்தினரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
அதைவிட மகிழ்ச்சி, எனது நினைவுகளை அவள் சேகரித்து வைத்திருந்து, மறக்காமல் என்னிடம் காட்டியது. ஆம், அவளது கையொப்ப ஏட்டை (autograph) கவனமாக வைத்திருந்து காட்டினாள். அதன் முதல் பக்கத்தைத் திறந்தபோது, ‘என்ன இது, அவளது வரவேற்புச் செய்தியில், அவளுடைய கையெழுத்து, என்னுடையது போலவே இருக்கின்றதே’ என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது, அது என்னுடைய கையெழுத்தேதான். நான்தான் எழுதிக் கொடுத்திருக்கின்றேன் என்று.
இவை தவிர, அவளது இந்தக் கையொப்ப ஏட்டில் 5 பக்கங்களில் எனது அன்பைக் கொட்டி, கையொப்பமிட்டிருக்கின்றேன். தவிர ஒரு பக்கத்தில் ஏதோ கொஞ்சம் கோவத்தில்வேறு எழுதி வைத்திருக்கின்றேன். ஆனால் அது எந்த சந்தர்ப்பத்தில், என்ன கோவத்தில் எழுதியது என்று இருவருக்கும் நினைவில் இல்லை. அதுவும் நல்லதுதான். மகிழ்ச்சியான தருணங்களை மட்டும் நினைவில் கொள்வதும், ஏனையவற்றை மறந்துவிடுவதும் நல்லதுதானே? 🙂
எனது உயிர்ச் சினேகிதிக்காக ஒரு தனிப்பதிவு போட வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியிருக்கின்றது இன்று.
நண்பர்களின் ஒன்றுகூடல்!
கடந்த மாதம் மிகவும் நல்ல ஒரு நிகழ்வு நடந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளின் பின்னர், பழைய பல்கலைக்கழக நண்பர்களைச் சந்தித்து ஒன்றுகூடிய நிகழ்வுதான் அது.
2014 நவம்பர் மாதமளவில், நண்பர்கள் சிலரிடையே திடீரெனத் தோன்றிய ஒரு எண்ணத்தில், பல்கலைக்கழகத்தில் கூடப்படித்த தமிழ் நண்பர்களைத் தொடர்பு கொண்டு ஒன்றுகூடலுக்கான தயார்ப்படுத்தலைத் தொடங்கினோம். நான்கு ஆண்டுகள் ஒன்றாகவே படித்த 100 க்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்த நமது குழுவில், 22 பேர் தமிழர்கள். நாட்டு சூழ்நிலை காரணமாக, அதில் அனைவரும் குறிப்பிட்ட படிப்பைப் படித்து முடிக்கவில்லை. சிலர் வெவ்வேறு படிப்புத் துறையைத் தேர்ந்தெடுத்து போய் விட்டார்கள். ஒரு சிலர் தொடர்பற்றும் போய் விட்டார்கள். ஆனாலும், 19 பேரைத் தொடர்புகொள்ள முடிந்தது. வெவ்வெறு பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டாலும், நாம்தான் 4 ஆண்டுகள் கூடப் படிக்கவில்லையே என்ற எண்ணம் சிறிதுமின்றி, விட்டுப் போனவர்கள்கூட எம்மில் ஒருவராய் உணர்ந்து நம்முடன் சேர்ந்திருந்தது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. நம் அனைவரையும் அத்தனை நெருக்கமாக வைத்திருந்தது, நமது பல்கலைக்கழக வாழ்க்கையின் ஆரம்பத்தில் மகா இலுப்பல்லம என்ற இடத்தில் ஆறு மாத காலம் தங்கியிருந்து பயிற்சிப் படிப்புப் படித்ததுதான். சிறிய குழுவாகவும், வெளி மக்களுடன் பெரிதாக தொடர்புகளற்று, பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்ததுமே காரணம் என நினைக்கின்றேன். அனைவரும் அந்த ஆறுமாதம் ஒரு குடும்பம்போல ஒன்றாகவே இருந்தோம். வெவ்வேறு பாதையில் பயணமானது அதன் பிறகுதான்.
பல உரையாடல்களைத் தொடர்ந்து, அதிகமானோர் கனடாவில் இருப்பதால், கனடாவில் ஒன்றுகூடலைச் செய்வதெனத் தீர்மானித்தோம். “பின்போடும் காரியம் கைகூடாமல் போகச் சாத்தியம் உண்டு” என்று சிலர் அபிப்பிராயம் கொண்டதால் ஏப்ரல் ஆரம்பத்தில் ஒன்றுகூடலை வைப்பதெனத் தீர்மானித்தோம். கனடாவில் காலநிலை மிகப் பெரிதாக நன்றாக இருக்காதெனத் தெரிந்தாலும், அந்தக் காலத்தையே தெரிவு செய்தோம். குறிப்பிட்ட காலம் நமது குடும்பத்தை அழைத்துச் செல்வதற்குப் பொருத்தமற்றுப் போனதால், வெளிநாடுகளிலிருந்து சென்ற 6 பேரால், குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியவில்லை. ஏனைய கனடாவில் இருந்தோர் அனேகமாக குடும்பத்தையும் அழைத்து வர முடிந்தது. 13 பேரும் (6 பெண்கள், 7 ஆண்கள்), சிலரது குடும்பங்களும் என 26 பேரானோம். கிழக்கிலிருந்து மேற்கு, தெற்கிலிருந்து வடக்கு என ஒன்றுக்கூடலுக்கு வந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அவுஸ்திரேலியாவிலிருந்து ஒருவர், இலங்கையிலிருந்து ஒருவர், நோர்வேயிலிருந்து ஒருவர் (வேறு யார், நான்தான்), பிரித்தானியாவிலிருந்து இருவர், அமெரிக்காவிலிருந்து ஒருவர், மற்ற எல்லோரும் கனடாவில் இருப்பவர்கள்.
எமது சந்திப்பின்போது, மிக அழகான நயகரா நீர்வீழ்ச்சி அருகே ஏற்பாடு செய்யப்படும் ஒரு தங்குமிடத்தில் 3 நாட்கள் ஒன்றாகத் தங்கியிருப்பதாக முடிவு செய்யப்பட்டது. அந்த மூன்று நாட்கள் வருவதற்கு, 4 நாட்களுக்கு முன்னராகவே கனடா சென்று, உறவினர்கள் சிலரையும், வேறு சில நண்பர்களையும் (பல்கலைக்கு முன் + பல்கலைக்குப் பின் கிடைக்கப்பெற்ற நண்பர்கள்) சந்திக்கலாம் என முடிவெடுத்தேன். எனவே ஒரு கல்லில் இரண்டு மாங்காயாக, பலரையும் சந்தித்து மகிழ முடிந்தது.
எமது பல்கலைக்கழகப் பயணத்தில் இரண்டாம் ஆண்டிலேயே எம்மை விட்டுப் பிரிந்து சென்று மருத்துவப் படிப்பை முடித்து, மருத்துவராக இருக்கும் ஒருவர் வீட்டில் எமது முதல் சந்திப்பை மேற்கொண்டோம். அவர் வீட்டில் இரவுணவும் ஏற்பாடு செய்திருந்தார். நீண்ட காலத்தின் பின்னர்தான் சில முகங்களைப் பார்க்க நேர்ந்தது. சிலரால், ஒரு சிலரை அடையாளம் கண்டுபிடிக்கக் கூட முடியவில்லை. அதுவே ஒரு கலகலப்பான சூழலை உருவாக்கித் தந்தது.
மறுநாள் நயகரா நீர்வீழ்ச்சி நோக்கி அனைவரதும் பயணம் செய்தோம். அங்கே மூன்று நாட்கள் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு… அனைவரும் 30 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று, அந்தப் பழைய நாட்களை மீண்டும் ஒரு தடவை வாழ்ந்து வந்தது போன்றதொரு உணர்வு. 30 வயது குறைந்து போனதாகவே உணர்ந்தோம். அங்கிருந்தபோது, நிகழ்வுக்கு வர முடியாமல் போன 4 பேருடன் ஸ்கைப்பிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு அனைவரும் பேசினோம். சமைத்துச் சாப்பிட்டு, சிரித்து மகிழ்ந்திருந்தோம்.
30 ஆண்டுகள் முன்புகூட இத்தனை மனம்விட்டுப் பேசிக்கொண்டோமா என்றே எண்ணத் தோன்றியது. மிக அருமையான ஒரு ஒன்றுகூடல். அருமையான, மறக்க முடியாத ஒரு அனுபவம்.
உவர்நீர் மீன் தொட்டி!
(March 2015 இல் எழுதி, draft இல் போட்டு வைத்த ஒரு பதிவு இது.)
வீடு புதிதாகியதில் ஏற்பட்ட மகிழ்வில், உவர்நீர் மீன் தொட்டி (Salt water aquarium) ஒன்று வாங்கி வைத்தாயிற்று. இதனை பவளப் பாறைகள் நீர்த்தொட்டி (Coral Reef aquarium) என்றும் கூறலாம் என நினைக்கின்றேன். முன்னர் நன்னீர் மீன் தொட்டி ஒன்று வைத்திருந்து, நாம் விடுமுறைக்குப் போய் வந்த ஒரு தருணத்தில், அனைத்து மீன்களும் இறந்த கவலையில், மீன் தொட்டி வேண்டாம் என்று விட்டு விட்டு இருந்தோம்.
அன்றொரு நாள் வீடும், அதிலுள்ள பொருட்களுக்கான கண்காட்சி ஒன்றுக்குப் போயிருந்தபோது, உவர்நீர் மீன் தொட்டியைப் பார்த்து ஆசைப்பட்டு, அதனை வாங்கலாம் என்று முடிவெடுத்துப் பின்னர் அவர்களைத் தொடர்பு கொண்டு வாங்கியாயிற்று. வாங்கும்போது கூட, அந்த மீன் தொட்டியைப் பார்த்துக் கொண்டிருப்பது இத்தனை மகிழ்வாக இருக்குமென எண்ணியிருக்கவில்லை. ஆகா, என்ன அழகு, என்ன அழகு……
இந்தத் தொட்டியானது உயிர்ப் பாறைகளுடன் (Live Rocks) பல நிறங்களில், பல் வேறு வகையான பவளங்கள் (Corals), கடற் சாமந்திகள் (Sea anemones) என்பவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதற்குள் முதலில் இறால் (shrimps) வகையைச் சேர்ந்த 3 உயிரினங்கள், 5 சிறிய நத்தைகள் (snails) , மற்றும் விண்மீன் உயிரியுடன் (star fish) நெருங்கிய தொடர்புடைய Brittle star என அழைக்கப்படும் ஒரு உயிரினம் எல்லாம் முதலில் விடப்பட்டது.
Brittle star மண்ணிற, கறுப்புப் பட்டிகளாலான உடலையும், 5 மிக நீண்ட வெளிநீட்டங்களையும் கொண்டிருக்கின்றது. அவர் அனேகமாக கற்களின் கீழாகவே இருப்பதனால், அவரை முழுமையாகப் பார்ப்பது அபூர்வம். இடை இடையே வெளிநீட்டங்களை அங்கேயும் இங்கேயுமாகக் காணலாம். அரிதாகவே வெளியே வந்து கற்களின் மேல் படுத்திருப்பார்.
நத்தைகள் சிறியவையாகவும், கூரான ஓட்டை முகத்தில் சுமப்பனவாகவும் இருந்தன. அவற்றை ஒன்றிலிருந்து ஒன்று வேறு பிரித்தறிய முடியவில்லையாதலால், ‘நந்து’கள் என்று பொதுவான ஒரு பெயரில் அழைத்தோம்.
இறால் வகையில் இரண்டு ஒரே மாதிரியான சிவப்பு நிற உயிரினங்கள். அவற்றுக்கு ‘Jack and Jill’ என்று பெயர் வைத்தோம். Jack உம் Jill உம் அனேகமான நேரங்களில் பாறைகளின் நடுவே ஒளிந்தபடியே இருப்பார்கள். ஒரு சில நேரங்களில் வெளியே வந்து போவார்கள். மூன்றாவது இறால் சிவப்பு வெள்ளை பட்டிகளைக் கொண்ட உடலையும், கால்களையும், மிகவும் நீண்ட உணர் கொம்புகளையும் கொண்டிருப்பதுடன், வெளிச்சம் போன பின்னர் மிகவும் உற்சாகத்துடன், சுறுசுறுப்பாக அங்குமிங்குமாக உலாவித் திரிபவராகவும் இருந்தார். அவர் உணவை எடுத்து உண்பதே பார்க்க அழகாக இருக்கும்.
பவளங்கள், கடற் சாமந்திகளும் மிகவும் அழகாக இருக்கின்றன. அவை வெளிச்சம் இருக்கையில் ஒரு தோற்றத்திலும், வெளிச்சம் போனதும் வேறொரு தோற்றத்துக்கு மாறுவனவாகவும் உள்ளன. சில சடுதியான மாற்றங்களுக்கு, சில தொடுகைகளுக்கு, தமது உணர் கொம்புகளை குழாய்ப் பகுதிக்குள் சடுதியாக உள்ளே இழுப்பதும், சில நேரங்களில் மெதுவாக உள்ளே இழுப்பதும், வெளியே வருவதும், சுருங்கிக் கொள்வதும், விரிந்து வருவதும் என்று பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலுள்ளது.
ஒரு கிழமையின் பின்னர் பாசிகளை உணவாகக் கொண்டு மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருக்க உதவும் குட்டி நண்டு (crab) ஒன்றும், குட்டி மீன் ஒன்றும் விடப்பட்டது. நண்டுக்கு ‘முத்து’ என்றும், குட்டி மீனுக்கு ‘ராமு’ என்றும் பெயரிடப்பட்டது. நண்டு மிகவும் சுறுசுறுப்பாக தானும் உணவை உண்டு, தொட்டியையும் சுத்தம் செய்து கொண்டு திரிகின்றார்.
…………………………………………
May 2015 இல் தொடர்ந்து எழுதுவது….
அதன் பின்னர் Clown fish இரண்டு வாங்கி விட்டோம். அவைக்கு ‘பாலு’, ‘மணி’ என்ற பெயர்கள் இடப்பட்டன. எம்மிடமிருந்த இரு முயல்களின் நினைவாக இந்தப் பெயர் :). பின்னர் இன்னுமொரு நண்டு வாங்கி, அதற்கு ‘சுப்பு’ என்று பெயர் வைத்தோம். பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக இரு மீன்கள் வாங்கி விட்டிருக்கின்றோம். அழகான நீலம், மஞ்சள் கலந்த மீனுக்குப் பெயர் ‘கீது’, வெள்ளை கலந்த மஞ்சள் நிறமும், ஒரு கறுப்புப் புள்ளியும் (beauty dot) கொண்டமீனுக்கு ‘மீனு’.
நத்தைகள் ஒவ்வொன்றாய்க் காணாமல் போயின. என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை. அதேபோல் சிறிய இரு இறால்களும் காணாமல் போயின. மீண்டும் இரு நத்தைகள் கொண்டு வந்து விட்டோம். அப்போதுதான் தெரிந்தது, அவற்றையெல்லாம் கபளீகரம் செய்தது நண்டுகளில் ஒன்றுதான் என்று. அவர் பருமனில் கூடிச் செல்லும்போது, தனக்குப் புது ஓடு தேடி இந்த வேலையைச் செய்கின்றாராம். எனவே அவருக்கு ஒரு பெரிய ஓடு கொண்டு வந்து போட்டோம். மிக இலகுவாக ஒரு ஓட்டிலிருந்து வெளிவந்து, அடுத்த ஓட்டிற்குள் தன்னை நுழைத்துக் கொள்வார்.
புதிய கடற்சாமந்திகள் தோன்றும். சில அழிந்துபோகும். இப்படியே ஏதாவது மாற்றங்களுடன், எமது மீன்தொட்டிச் சூழல் போய்க் கொண்டிருக்கின்றது.
புத்தம் புதிதாகிய வீடு!
இந்த ஆண்டு எமது வீட்டைக் கொஞ்சம் திருத்தலாம் என்று எண்ணி வேலையைத் தொடங்கினோம். அது கொஞ்சம் அதிகமாகி, வீடே மாறிப் புதிதாகிய தோற்றத்தைத் தருகின்றது இப்போது.
பொதுவாகவே வீட்டிற்குள், இங்கிருப்பதை எடுத்து அங்கே வைப்பதும், பொருட்களை இடம் மாற்றி இடம் வைப்பதுமாக அமைப்பை மாற்றுவது வழமைதான் எனினும், இப்போது ஒரே நேரத்தில் பல மாற்றங்கள்.
சமையலறையை முழுமையாகப் புதிப்பிப்பதுதான் நோக்கமெனினும், அது அப்படியே ஏனைய அறைகளுக்குமாகப் பரவி, அப்படியே வெளியேயும் கொஞ்சம் போய் வீட்டுக்குப் புதுப் பொலிவைத் தந்திருக்கின்றது.
கலிபோர்னியா பயணம்!
பெப்ரவரி மாதத்தில் செய்த இந்த கலிபோர்னியா பயணம் வித்தியாசமாக இருந்தது. நாங்கள் மூவர் மட்டுமல்லாமல், எங்கள் மருமகன்கள் மூவரும் இந்த முறை எங்களுடன் வந்திருந்தார்கள். இரு வருடங்கள் முன்னர் புளோரிடா மாநிலம் போனபோது, ஒரு மருமகன் வந்தார். இந்த முறை மூவர். மிகவும் மகிழ்ச்சியாகப் பயணம் நிறைவேறியது.
3 வருடங்கள் முன்னர், பல உறவினர்கள் ஒரே நேரத்தில் சிங்கப்பூர், மலேசியா போய் வந்ததுபோலவே மிகவும் கலகலப்பாகப் பயணம் கழிந்தது.
முதலில் சான் பிரான்சிஸ்கோ சென்று அங்கே மூன்று நாட்கள் தங்கிய பின்னர் லொஸ் ஏஞ்சல்ஸ் சென்று அங்கே 4 நாட்கள் நின்று திரும்பினோம். அங்கிருந்த நேரங்களில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளையும், மிதிவண்டி (bicycle) ஐயும் பயன்படுத்தியதனால், இலகுவாக நகரத்தை அறிந்து கொள்ள முடிந்தது. முக்கியமாக அந்த நோக்கத்திலேயே போக்குவரத்துக்கு இந்த முறைகளைத் தேர்ந்தெடுத்தோம்.
ஒரு தடவை பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஒன்றான அமிழ் தண்டூர்தியில் (Tram) சென்றபோது, மிகவும் சுவாரசியமான அனுபவம் கிடைத்தது :). அந்த வண்டியின் ஓட்டுநர், ஒவ்வொரு நிறுத்துமிடம் வரும்போதும், சுவாரசியமான தகவல்களை, மிகழும் நகைச்சுவை கலந்து அறிவித்துக்கொண்டே வந்தார். எடுத்துக்காட்டாக, Alcatraz island க்குப் போக வேண்டிய நிறுத்தம் வரும்போது, “Here you get down if you want to go to jail, not to be bailed” என்றார். மீன் பிடித்தலுக்கான இடம் வரும்போது, “If you get down here, you can go fishing for a mermaid” என்றார். ஒவ்வொரு வசனமும் சொல்லிவிட்டு, விதம் விதமான ஒலிகளை எழுப்பி, அனைவரையும் நன்கு சிரிக்க வைத்தார். உண்மையில் அந்த வண்டியில் செல்வதற்கு, வளர்ந்தோருக்கு 2.25 $ உம், சிறியவர்களுக்கு 1.75 $ உம், 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவசமும். ஆனால் அதற்குரிய பணத்தைக் கொடுத்தபோது, இருவருக்குரிய பணத்தை மட்டும் தரும்படி சொல்ல, கணவரோ “We are six” என்று கூற, “Are you going to argueing with me?” என்று கேள்வி எழுப்பிவிட்டு, பணத்தைப் பெறவில்லை. அன்று ஏதோ மிகக் குதூகலமான ஒரு மனநிலையில் வந்திருக்கிறார் போலும். அப்போது எனக்கு பாடசாலைக்கு பேருந்தில் போகும்போது, குறிப்பிட்ட ஒரு நடத்துநர் (conductor) வரும் பேருந்தில் ஏற நாம் காத்திருப்பது நினைவுக்கு வந்தது. அவர் மிகவும் நகைச்சுவையாகப் பேசியபடியே, பேருந்தில் வரும் அனைவரையும் சிரிக்கச் செய்தபடியே இருக்கச் செய்வார்.
சான் பிரான்சிஸ்கோவில் பார்த்த முக்கியமான இடம் Alcatraz Island. மிகவும் பயங்கரமான குற்றவாளிகளை அடைத்து வைத்திருந்த இடம். தற்போது, பயணிகளின் பார்வைக்குரிய இடமாக மாறியுள்ளது. அத்துடன் பறவைகளுக்குரிய இயற்கைச் சரணாலயமாகவும் மாறியுள்ளது :). கண்ணுக்கெட்டிய தொலைவில் நகரமும், அதனை அண்டிய பிரதேசங்களும் அழகாகத் தெரியும்போது, இந்தத் தீவை விட்டு எங்கேயும் போக முடியாமல் இருக்கின்றதே மிகப் பெரிய தண்டனைதான் என்பதனை, அங்கிருந்த குற்றவாளிகளின் குறிப்புக்களிலிருந்து உணர முடிந்தது. சிறிய அழகான தீவு. நடுவே மலையில் சிறைச்சாலை. சிறைச்சாலையைச் சுற்றி அழகிய பூமரங்கள். அந்தப் பூமரங்களின் பாதுகாவலர்கள் குற்றவாளிகளே. அதை “Keepers are the kept” என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். உள்ளே போய், சிறைச்சாலை முழுவதையும் சுற்றிப் பார்க்க அனுமதியுண்டு. தேவையான விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றது. சிறைச்சாலையிலிருந்து பார்க்கும்போது, Golden Gate அழகாகத் தெரிகின்றது. அங்கு நடந்த ஒரு பிரபலமான தப்பித்தல் முயற்சி பற்றிய “Escape from Alcatraz” படம் (Clint Eastwood நடித்தது) பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இருக்கின்றேன். நேரம் கிடைக்கவில்லை.
Golden gate பார்க்க Bicycle ride எடுத்தோம். என்ன இரு பெரிய மலைகளில் ஏறும்போது மட்டும் என்னால் ஓட்ட முடியாமல் போனது. கொஞ்ச தூரம் இறங்கி உருட்டிக்கொண்டு போனேன். மிகவும் இரசித்த பயணத்தில் ஒன்றாக அமைந்தது.
மாலை மயங்கும் நேரம், சூரியன் மறைவதைப் பார்ப்பதற்காக ஒரு படகுப் பயணம். ஓஓஓஓஓஓ, என்ன அழகு, என்ன அழகு. Golden gate உம் அதன் பின்னணியில் சூரியன் மறைவதும், அந்த மங்கிய நேரத்தில், தூரத்தில் தெரிந்த படகுகளும், பறந்து கொண்டிருந்த பறவைகளும்…. கொள்ளை அழகு. இன்னொரு புறம் தெரிந்த Oakland Bay Bridge ஐ, அவர்கள் Silver gate என்றே பெயரிட்டிருக்கலாம். இரவில் அதனைப் பார்க்கையில் வெள்ளியால் செய்தது போன்றே தோற்றம் தந்தது.
இது ஏன் வேலியில் கம்பிக்கு பூட்டுப் போட்டிருக்கிறார்கள்? காதலர்கள் தமது காதல் நிறைவேறுவதற்காக இப்படி செய்வதாகக் கூறினார்கள். அட, இதுவும் ஒருவகை வேண்டுதல்தானோ?
பின்னர் லொஸ் ஏஞ்சல்ஸ் போனோம். Hollywood city ஐயும், ஒரு வழிகாட்டியுடன் அமைந்த சுற்றுலாவில் சென்று பார்த்ததுடன், Warner Brothers Studio க்கும் சென்று, back the screen என்ன நடக்கின்றது என்பதனைப் பார்த்தோம். Walk of fame இல் அலைந்து திரிந்தோம். Madame Thussaud இற்குள் சென்று மெழுகுச் சிலைகள் பார்த்தோம். சிங்கப்பூரிலும் இந்த மெழுகுச் சிலைகள் பார்த்திருந்தாலும், இங்கிருந்தவற்றில் பல, உண்மையான மனிதர்களைப் போலவே இருந்தது. சிலவற்றை அடையாளம் கண்டு பிடிக்கவே நேரம் எடுத்தது.
நல்ல பயணம். ஆனால் என்ன வீடு திரும்பிய பின்னர் jet lag தான் படுத்தி எடுத்துவிட்டது.
அடுத்த பதிவு, இரு கிழமைகளுக்கு முன்னர் நான் சென்று வந்த, மிகவும் சுவாரசியமான பயணம் பற்றியது. பேராதனைப் பல்கலையில் கூடப்படித்த தமிழ் நண்பர்கள் கனடாவில் சந்தித்து (நாம் பிரிந்து 30 ஆண்டுகளுக்குப் பின்னர்) ஒன்றாகச் சந்தித்து, 3 நாட்கள் நயகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே தங்கியிருந்து திரும்பிய பயணம் :).
உருவாக்கப்படும் உறவுகள்!
கடந்த மாதத்தில் ஒருநாள், எதிர்பார்த்தேயிராத ஒரு மின்னஞ்சல் வந்து சேர்ந்தது. மின்னஞ்சலின் சாரம் இதுதான் “நானும், மகனும் லண்டன் வருகின்றோம். அப்போது நோர்வேக்கும் உங்களிடம் வரலாம் என நினைக்கின்றேன். இந்தக் குறிப்பிட்ட காலம் உங்களுக்கு வசதி வருமா?”. குறிப்பிட்ட காலம் நம் வீட்டில் அனைவரும் விடுமுறையில் நின்றோம் என்றபடியால் உடனடியாகவே, நமக்கும் வசதிதான் நீங்கள் வரலாம் என பதிலிட்டேன்.
இதிலென்ன ஆச்சரியம்? இந்த மடல் வந்தது எனது அண்ணாவிடமிருந்து. அதாவது… உடன்பிறவாத, உறவாகவும் பிறந்திராத, ஆனால் எனது பல்கலைக்கழக வாழ்க்கையின்போது உருவான உறவான அண்ணாவிடமிருந்து. நமது பிறப்பால் ஏற்படும் உறவுகளும் உண்டு. அவ்வாறின்றி, நாமாகவே உருவாக்கிக் கொள்ளும் உறவுகளும் உண்டு. நண்பர்கள், நண்பிகள் தவிர, சிலருடன் சகோதரர்கள் போன்ற உணர்வும், அப்படியான ஒரு பாசமும் ஏற்பட்டு விடுகின்றது. அப்படிப்பட்ட உறவுதான் இந்த அண்ணா.
நான் பல்கலைக்கழகம் செல்ல முன்னர், எனது தோழிகள் பலருக்கும் அண்ணாக்கள் அதிகம். அவர்கள் எப்போது பார்த்தாலும் அண்ணா – புராணம் பாடிப் பாடியே எனக்கு ஒரு அண்ணா இல்லையே என்ற ஆதங்கத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். நான் “எனக்கும் ஒரு அண்ணா வேண்டும்” என்று கூறினால், “தம்பிக்கு ஆசைப்பட்டாலும் பரவாயில்லை. கிடைக்க வாய்ப்புண்டு. அது எப்படி அண்ணா கிடைக்கும்?” என்று மற்றவர்கள் கேட்பார்கள். அப்போதெல்லாம் எதுவும் சொல்ல முடியாமல் கவலையுடன் இருப்பேன். பல்கலைக்கழக வாழ்க்கைக்குப் போனபோது, இந்த வார்த்தை பொய்யாகி, எனக்கு அண்ணா கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த அண்ணாவுக்கு உடன் பிறந்த ஒரு தங்கையும் உண்டெனினும், என்னையும் சேர்த்து இரு தங்கைகள் என்று அனைவருக்கும் கூறியிருக்கின்றார்.
அதுசரி, அப்படிப்பட்ட அண்ணா வந்ததில், அப்படியென்ன ஆச்சரியம்? ஆம் ஆச்சரியத்துடன் கூடிய மகிழ்ச்சிதான். என்னென்னவோ காரணங்களால், தொடர்பு முற்றாக இல்லாமல் இருந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது மீண்டும் பார்ப்பதென்றால் மகிழ்ச்சிதானே?
அண்ணாவும், அவரது மகனும் வந்து இரண்டே இரண்டு நாட்கள்தான் எம்முடன் தங்கியிருந்தார்கள் என்றாலும், அதுவே உடன் பிறந்த அண்ணா வந்து எம்முடன் தங்கிச் சென்றது போன்ற மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றது.
கைத்தொலைபேசியும் தமிழும் – புதியது!
2010 ஆம் ஆண்டில் htc Hero mobile வைத்திருந்தேன். அதில் தமிழ் எழுத, வாசிக்க சில செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டி இருந்தது. அதற்குப் பின்னர் Samsung galaxy S3 கைத்தொலைபேசி ஒன்று பரிசாகக் கிடைத்தது. அதில் தமிழ் வாசிப்பதில் பிரச்சனை இல்லாவிட்டாலும், எழுதுவதற்கு ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது iPhone வைத்திருந்தவர்களுக்கு, iOS7 upgraded ஆகியதும், கைத் தொலைபேசியிலேயே தமிழ் விசைப்பலகை வந்ததும், அட என்னுடைய பேசியில் இப்படி இல்லையே என்று கொஞ்சம் பொறாமையாக இருந்தது :).
சில மாதங்கள் முன்னர் Samsung galaxy S5 கிடைத்தது. அதுவும் பரிசாகத்தான் கிடைத்தது :). அதில் தமிழை எழுத சில செயலியை தரவிறக்கம் செய்து வைத்திருந்தேன். அதிலும் சில பிரச்சனைகள் வந்தது. ஓரிரு நாட்கள் முன்னர் சும்மா கைத்தொலைபேசியை கொஞ்சம் நோண்டிப் பார்த்தபோதுதான் அவதானித்தேன். தமிழ் மொழிக்கான விசைப் பலகையும் அதிலேயே உள்ளது. அந்த விசைப் பலகையில் எழுதுவதும் மிகவும் சுலபமாக உள்ளது. மகிழ்ச்சி 🙂
New York City trip!
கடந்த ஜூலை மாதத்தில் Madrid, Spain போய்விட்டு வந்து, அதுபற்றி ஒரு பதிவு போடவேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் முடியாமல் போய் விட்டது. இப்போ, நியூ யோர்க் நகரம் போய் வந்ததுபற்றி ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். ஆனால் வீடு வந்ததும் வீட்டு வேலைகள், மற்றும் வெளி வேலைகள் என்று நேரம் எடுக்க முடியவில்லை. இப்படியே விட்டால் இதற்கும் அதோ கதிதான். அதனால் ஒரு சின்ன idea. முகநூலில் போட்ட நிலைத் தகவல்களைச் சேகரித்து இங்கே போட்டால் என்ன? 🙂
Kalaiarasy Kugarajh was
traveling to New York, New York from Heathrow Terminal 5.

Yesterday, I stayed in Boston, and letting all other family members go back to NYC. (ஏதோ 10 – 15 குடும்ப அங்கத்தவர்கள் இருக்கிற மாதிரி ஒரு build up) :). I could spend a day with my friend and it was really very nice catching up after so many years (nearly 25 years). கதைத்தோம், கதைத்தோம், கதைத்தோம், கதைத்துக் கொண்டே இருந்தோம் . I came by Peter Pan bus to NYC today. On the way, my little brain was flooded with the memories of Peradeniya University life.The New York City tour cannot be ended without (at least) going up and down the streets of Time Square . Time Square is also called as ‘The Crossroads of the World’. It is one of the world’s busiest pedestrian intersections and it is said that more than 300,000 people pass through this place daily. It is also a big centre for entertainment and very brightly illuminated at nights.
Fly back tomorrow, ‘home sweet home’ .