தற்கால மனிதன் – 3

Posted On மார்ச் 17, 2023

Filed under uncategorized

Comments Dropped leave a response

(Sapiens தொடர்ச்சி)

எனது நீண்ட நாளைய கேள்விகளுக்கு இந்த நூலில் விடை கிடைத்தது.

அதி உயர் விருத்தியடைந்த மனித இனத்தில் சிக்கலான குழந்தை பிறப்பு ஏன்?

ஏனைய விலங்குகள் குட்டியை ஈன்று சில மணி நேரத்திற்குள் குட்டிகள் எழுந்து, ஓடியாடி விளையாடித் தானே தன் வேலையைப் பார்க்கத் தொடங்கி விடும்போது மனிதக் குழந்தைகள் மட்டும் சுதந்திரமாக இயங்க ஏன் நீண்ட காலம் எடுக்கிறது?

ஏனைய விலங்குகளிலிருந்து வேறுபட்டு மனித மூளை பெரிதாகவும், விருத்தியடைந்தும் செல்லத் தொடங்கியது. மனிதன் ஒரு சோடிக் கால்களை மட்டும் நகர்வுக்குப் பயன்படுத்திக் கொண்டு, நிமிர்ந்த நிலைக்கு வந்தமையால் கைகள் பல்வேறு மேலதிக பயன்பாடுகளில் ஈடுபடுத்தப்படக் கூடியதாக இருந்ததுடன், பார்வை மட்டம் உயர்ந்து, எதிரிகளை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள உதவியது. முக்கியமாக மேலதிக ஆற்றல் பெற்ற கைகளைக் கொண்டு சிக்கலான செயற்பாடுகளைச் செய்வதுடன், பல நவீன கருவிகளையும் உருவாக்க முடிந்தது.

நிமிர்ந்த நிலையும், பெரிய மூளையும் வெற்றியை நோக்கிய பாதையைத் தந்தாலும், சில இடர்களையும் கூடவே தந்தது.

நிமிர்ந்த நிலைக்கு வந்து பெரிய பாரமான மூளையைத் தாங்க வேண்டி வந்தமையால் முதுகு வலி, கழுத்து வலியும் கூடவே வந்தது. பெண்களுக்கு இன்னும் அதிக இடர் தரக் கூடியதாக, நிமிர்ந்த நிலைக்கு ஏற்ப இடுப்பெலும்பு சிறியதாகி பிறப்புப் பாதை சுருங்கியது. எனவே பெரிய தலை கொண்ட குழந்தை பிறப்பின்போது, பிறப்பு சிக்கலாகி, பெண்களின் இறப்பு வீதம் அதிகரித்தது. அதனை ஈடுகட்ட மனிதக் குழந்தைகள் தமது முழுமையான விருத்தியை அடைவதற்கு முன்பே, சிறிய உருவில் பிறக்க ஆரம்பித்தன. அப்படிப் பிறக்கும் குழந்தைகளின் தாய் தப்பிப் பிழைத்து மேலதிக குழந்தைகளை உருவாக்க முடிந்ததால், அந்த இயல்பு இயற்கைத் தேர்வில் தேர்ச்சி பெற்றது.

மனிதக் குழந்தைகள்
முழு வளர்ச்சியின்றிப் பிறப்பதால் தாயின் உடலை விட்டு வெளியேறிய பின்னரே முழு வளர்ச்சியை நோக்கி நகர்கிறார்கள். அதனாலேயே நீண்ட காலத்திற்கு அவர்களைச் சீராட்டிப் பாராட்டும் தேவை ஏற்பட்டது.

தற்கால மனிதன் – 2

Posted On மார்ச் 11, 2023

Filed under uncategorized

Comments Dropped leave a response

தற்கால மனிதன் – 2 (Sapiens தொடர்ச்சி)

இறுதி மனித இனம்!

2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் உருவாகிய ஒரு மனித இனம் கற்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இவர்கள் பின்னர் உலகின் பல்வேறு இடங்களுக்கு நகர்ந்தார்கள். தவிர பல்வேறு மனித இனங்கள் வெவ்வேறு இடங்களில் உருவாகத் தொடங்கியிருக்கிறது. அப்படி உருவாகிய இனங்களின் பரிணாம வளர்ச்சியில், அவர்களுக்குத் தசைகள் கூர்ப்பு அடைவதற்குப் பதிலாக நரம்பணுக்கள் கூர்ப்படைய ஆரம்பித்தன. அதன்மூலம் பெரிய மூளையையும், தொடர்ந்து அறிவையும் வளர்த்துக் கொண்டார்கள். சிம்பன்சி ஒன்றுடன் நேருக்கு நேர் நின்று மோதும் தசைவலு இந்த மனிதர்களிடம் இல்லாவிட்டாலும், பாதுகாப்பான தூரத்தில் ஒளிந்திருந்து அவற்றைத் தாக்குவதற்கான ஆயுதங்களைத் தயாரிக்கும் அறிவை வளர்த்துக் கொண்டார்கள்.

Neander Valley யில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மனித இனம் Homo neanderthalensis என்ற பெயருடன் ஐரோப்பா, மேற்கு ஆசியாவில் வாழ்ந்திருக்கிறது. நிமிர்ந்த மனிதன் என அழைக்கப்பட்ட Homo erectus கிழக்கு ஆசியாவில் வாழ்ந்திருக்கிறான். இந்தோனேசியாவில் Solo Valley யில் வாழ்ந்த மனிதன் Homo soloensis என்றும், Flores இல் வாழ்ந்த மனிதன் Homo floresiensis என்றும், சைபீரியாவின் Denisova Cave இல் வாழ்ந்த மனிதன் Homo denisova
என்றும் அழைக்கப்படுகிறான். இன்னும் பல மனித இனங்கள் இருந்தன என்பது தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்த புதைபடிமங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது. இன்னும் இப்படி எத்தனை மனித இனங்கள் (அதாவது காணாமல்போன நமது உறவினர்கள்) கண்டுபிடிக்கப்படுவார்களோ தெரியாது என்கிறார் நூலாசிரியர்.

இன்றைய கால கட்டத்தில், நம்மைத் தவிர ஏனைய அனைத்து மனித இனங்களும் உலகிலிருந்து அழிந்துவிட்டன அல்லது அழிக்கப்பட்டு விட்டன. அவற்றில் Homo erectus கிட்டத்தட்ட 2 மில்லியன் ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தமையால், நம்மை விடவும் (Homo sapiens ஐ விடவும்) நீண்ட காலம் வாழ்ந்த மனித இனமாக இருக்கும் என்றும் கூறுகிறார். காரணம் கிட்டத்தட்ட 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நமது இனம் (அதாவது Homo sapiens), இன்னும் 1000 ஆண்டுகள் இருப்பதே சந்தேகம் என்பதால் (உலகம் போகும் போக்கைப் பாரு என்று சொல்லாமல் சொல்கிறார்), Homo erectus இன் சாதனையை முறியடிப்பது நினைத்துப் பார்க்க முடியாது என்கிறார். 300000 ஆண்டுகள் எங்கே, 2 மில்லியன் ஆண்டுகள் எங்கே?

2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 10,000 ஆண்டுகள் முன்னர் வரை ஒன்றுக்கு மேற்பட்ட மனித இனங்கள் ஒரே நேரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு இனம் அழிவடைந்திருக்கிறது. ஆனால் எங்களுடன் கூடவே, எங்களை ஒத்த வேறு மனித இனமும் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நம்மை ஒத்த மனித இனங்களை, நாமே அழித்திருந்தால் அதற்குக் காரணம் என்னவாகஇருந்திருக்க முடியும் என்பதற்கு அவருக்குத் தோன்றிய காரணம், அந்த மனிதர்கள் புறக்கணிக்க முடியாத அளவுக்கு நம்மை ஒத்திருந்ததும், பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நம்மில் இருந்து வேறுபட்டிருந்ததுமாக இருக்கலாம் (may be they were too familiar to ignore and too different to tolerate) என்கிறார்.

தற்கால மனிதனால்தான் அந்த இனங்கள் அழிந்தனவா என்ற கேள்வியை மீறி, தற்கால மனிதர்கள் எந்த இடங்களில் எல்லாம் சென்று கால் பதித்தார்களோ, அந்த இடங்களில் எல்லாம் இருந்த ஏனைய மனித இனங்கள் அழிவடைந்தன. அவர்கள் விட்டுச் சென்றவை எலும்புகள், சில கல்லினால் ஆன உபகரணங்கள், எங்களுடைய டீ.என்.ஏ. யில் சில மரபணுக்கள். கூடவே பல பதில் கிடையாக் கேள்விகளையும், இறுதி மனித இனமாக இருக்கும் நம்மையும் விட்டுச் சென்றுள்ளார்கள் என்கிறார்.

தற்கால மனிதன் – 1

Posted On மார்ச் 11, 2023

Filed under uncategorized

Comments Dropped leave a response

தற்கால மனிதன் – 1 Sapiens!

யுவல் நோவா ஹராரி (Yuval Noah Harari) ஒரு இஸ்ரேலிய அறிவுஜீவி. வரலாற்றாசிரியரான இவர் ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் ( Hebrew University, Jerusalem) வரலாற்றுத் துறையில் பேராசிரியராக உள்ளார்.

இவர் எழுதிய Sapiens என்ற நூலை ஒலி வடிவில் கேட்க ஆரம்பித்தேன். அச்சு வடிவிலான நூலைக் கையில் வைத்து வாசித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றவே நூலை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.

மனித வரலாற்றை அறிவு பூர்வமாக, மிகவும் எளிய நடையில், சுவாரசியம் நிறைத்து தந்திருக்கிறார்.

13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அண்டம் தோன்றிய இயக்கவியல் பற்றியும், அணுக்கள், மூலக்கூறுகள் தோன்றிய வேதியியல் பற்றியும் கூறிவிட்டுப்,
பின்னர் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உலகம் தோன்றியது பற்றியும், 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிரினங்கள் தோன்றிய உயிரியல் பற்றியெல்லாம் கூறிவிட்டு, 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நமது மூதாதையர் பற்றிக் கூறி, இறுதியாக மனிதன் தோன்றிய 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திற்கு வருகிறார்.

இந்த நூலை வாசிப்பவர் அனைவரும் Homo sapiens என்று கருதுவதாகக் கூறி ஆரம்பிக்கிறார் 😀. தற்கால மனிதர்களின் உயிரியற் பெயர் Homo sapiens (Homo = man and sapiens = wise). தற்போதைய மனித இனத்திற்கு மூதாதையர்களான வேறு மனித இனங்கள் பற்றியும், அவர்களது குணாம்சங்கள் பற்றியும், அவர்களது மூதாதையர்கள் பற்றியும் சொல்கிறார்.

ஆனாலும் அந்த உண்மையை மனித இனம் (அதாவது தற்கால மனித இனம்) ஒத்துக்கொள்ளப் பிரியப்படாமல், இரகசியமாக வைத்துவிட்டுத் தாங்கள் வேறு எந்த ஒரு உயிரியல் குடும்பத்தையும் (biological family) சார்ந்தவர்களல்ல என்றும், தாங்கள் எந்த ஒரு விலங்கு இனத்துடனும் (species) எந்த ஒரு தொடர்பும் அற்றவர்கள் போலவும் காட்டிக் கொள்ளவே விரும்புகிறார்கள் என்றும் கூறுகிறார்.

இதை வாசித்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்னர் (நாமெல்லாம் வலைப்பதிவுகளில் நேரம் செலவளித்த ஒரு கால கட்டத்தில்) ஒருவர் வலைப் பதிவொன்றில் “குரங்கிலிருந்து மனிதன் வந்திருந்தால் இப்ப இருக்கிற குரங்கெல்லாம் ஏன் இன்னும் மனிதனாகவில்லை?” என்று கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது. இந்தக் கேள்விக்குரிய பதிலாக இந்த நூலில் நூலாசிரியர் மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறுவது … 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிம்பன்சிக்கு இரண்டு மகள்கள் பிறந்தார்கள். ஒரு மகள் தற்போதைய சிம்பன்சிகளுடைய மூதாதையராகவே இருக்க, மற்றைய மகள் (சில மரபணுப் பிறழ்வுகளால்) நமது மூதாதையராக மாற்றம் பெற்று விட்டார்.

அந்த மூதாதையர்கள் மனிதர்கள் என்ற சாதியைச் (Genus Homo), சேர்ந்தவர்களாயினும், வேறு இனத்தைச் (species) சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அப்படி நம்மை விடவும் வேறு மனித இனங்களும் (species) இருந்த காரணத்தால், Homo என்ற சாதியில் உள்ளடக்கப்படும் அனைத்து உயிரினங்களும் (தற்கால மனிதன் உட்பட) மனிதர்கள் என்பதால் அவர்களையெல்லாம் human என்றும், தற்கால மனிதனை sapiens என்றும் நூலில் குறிப்பிடப் போவதாகச் சொல்கிறார். அதனால்தான் நூலின் பெயர் Sapiens.

பி.கு.: இந்தப் பதிவை முழுமையாக வாசிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். வாசித்துவிட்டால், ஏதாவது வகையில் எனக்குத் தெரியப்படுத்தி விடுங்கள். ஒரு சின்ன புள்ளிவிபரத் தேவைக்காக இந்த வேண்டுகோள் 😀 .

ஒரு நல்ல மனிதரை இழந்தோம்!

Posted On ஜூன் 21, 2020

Filed under uncategorized

Comments Dropped leave a response

இந்தப் பழைய பதிவை என்னுடன் பகிர்ந்தமைக்கு முதலில் நன்றி ஜெயகுமார்!

https://m.facebook.com/story.php?story_fbid=1530599960289175&id=100000175560903

அருமையான, இனிமையான, அன்பான இரவீந்திரநாத் sir ஐப் பற்றியும், அவரது குடும்பம் பற்றியதுமான நினைவுகளை உங்கள் பதிவு மீண்டும் கிளறிச் சென்றுள்ளது.

பேராதனையிலிருந்து வேலைக்காக கிழக்கிலங்கைப் பல்கலைக்கு வந்தபோது, என்னை நேர்காணல் செய்தவர்களில் முக்கியமானவர். நேர்காணலின்போதும், அதன் பின்னர் அவர் தலைவராக இருந்த துறையில் வேலையில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர், துறைத் தலைவராக அவருடனான சந்திப்பிலும், அதன் பின்னர் அவருடைய துறையில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியபோதும் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.

பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், எளிமையானவர். வேலை தொடர்பான விடயங்களாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட விடயங்களாக இருந்தாலும் சரி, தயங்காமல் ஆலோசனை பெற அவரை அணுகுவது மிகவும் இலகுவாக இருந்தது. வேலைத் தளத்தில், தான் துறைத் தலைவர் என்ற எந்தவித ஆடம்பரமுமின்றி மிகவும் எளிமையாக பல விடயங்களையும் பகிர்ந்து கொள்வார். திறமைகளை அடையாளம் கண்டு கொள்வதில், பாராட்டுக்களைத் தாராளமாக வழங்குவதில், நகைச்சுவையாக உரையாடலை இனிமையாகச் நகர்த்திச் செல்வதில் வல்லவர்.

அவர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினர் அனைவருமே அன்பானவர்கள்தான். நான் அங்கேயிருந்த காலத்தில், மிக நெருங்கிப் பழகிய நண்பிகள் மூவரும் (ஜெயரதி, சொர்ணா, சீதா), எனக்கு முன்னரே கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் இருந்து போய்விட்டார்கள். அப்போது நான் தனித்து விடப்பட்டதான ஒரு உணர்வு எனக்கும் இருந்தது. நாங்கள் ஒன்றாக சென்று வருவதைப் பார்த்திருந்த இரவீந்திரநாத் sir இன் அருமை மகள்கள், நான் தனியாக இருப்பதாக உணர்ந்து அவரிடம் சென்று “அவ இப்ப தனியா இருக்கிறா. நாங்கள் அவவோட friends ஆக இருக்கலாமா? அவவோட போய் உடன் இருக்கலாமா?” என்று கேட்டதாகவும், தான் “தாராளமாகப் போய் இருங்கோ” என்று சொன்னதாகவும் என்னிடம் கூறினார். அவர்கள் இருவரும் மாலை நேரங்களில் வந்து என்னையும் கூட்டிக்கொண்டு, நான் முன்னர் எனது நண்பிகளுடன் மாலை வேளைகளில் நடந்து செல்லும் இடங்களெல்லாம் நடப்பார்கள். தங்கள் வீட்டிற்கும் அடிக்கடி கூட்டிப் போவார்கள்.
நான் முன்னர் நண்பிகளுடன் இருந்து கதைத்த இடங்களில் என்னுடன் இருந்து கதைப்பார்கள் / பாடுவோம். அப்போது (1988-89) அவர்கள் இருவரும் குழந்தைகள். நாம் என்ன கதைத்தோம் என்பது நினைவில் இல்லை. ஆனால் அவர்களது அன்பு என்னைக் கட்டிப் போட்டது என்னவோ உண்மை. இப்போது நினைத்தாலும், கண்கள் பனிக்கின்றன. அவர்கள் மிகச் சிறியவர்களாக இருந்தமையால் என்னை நினைவிருக்காது என்றே நினைக்கிறேன். ஒரு சில மாதங்களில் நானும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தை விட்டு, வவுனியா விவசாயக் கல்லூரியில் விரிவுரையாளராகப் போய்விட்டேன். நான் வேலை விட்டு நீங்கும்போது, அவர் எனக்கு எழுதித் தந்த சான்றிதழ் சிறந்ததாகவும், இன்னொருவரின் முன்னேற்றத்திற்காக அடி மனதிலிருந்து எழும் வார்த்தைகளாகவும் அமைந்திருந்தது. விரிவுரையாளர் பணியுடன் மட்டும் நின்றுவிடாமல், ஆராய்ச்சித் தளத்திலும் காலூன்றுவது நல்லது என்று எடுத்துக்கூறி, என்னை உற்சாகப்படுத்தி, தானே ஓர் ஆய்வுக்கான திட்டத்தையும் தொடக்கித் தந்தார்.

பின்னர் 1993 இறுதியில் நோர்வேக்கு இடம் பெயர்ந்து விட்டேன். நான் இங்கு வந்த பின்னர் அவர் இரு தடவைகள் நோர்வேக்கு தொழில் நிமித்தமாக வந்து போனார். ஒவ்வொரு தடவையும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைக்க மறக்கவில்லை. அவர் வந்திருந்த இடமும், நாம் வசிக்கும் இடமும் தூரமாக இருந்தமையாலும், மிகக் குறுகிய நாட்களே அவர் நோர்வேயில் இருந்தமையாலும் அவர் எங்களை வந்து சந்திக்க முடியாமல் போயிற்று. அப்போது அவர் என்னிடம் கூறிய “அடுத்த தடவை நோர்வே வரும்போது, உங்களிடம் வருவேன்” என்று கூறிய வார்த்தைகளே இறுதியாகப் போனது வேதனை ☹.

எனக்கு மட்டுமல்ல எல்லோரிடமும் அவர் இதே அன்புடனும், அக்கறையுடனும்தான் நடந்து கொண்டிருப்பார் என்பது தெரியும். அவரின் இயல்பே அதுதானே. மேலும் நான் திருமணம் முடித்து வந்த பின்னர் எனது மாமனார், மாமியார் இவரைத் தெரியும் என்றும், அவர் ஆராய்ச்சிப் பிரிவில் பணி புரிந்த காலத்தில் தங்கள் வீட்டிற்கு ஒவ்வொரு நாளும் வருவது பற்றியும், அவரது நல் இயல்புகள் பற்றியும் கூறக் கேட்டிருக்கிறேன். நல்ல ஒரு மனிதரை இழந்து விட்டோம்.

‘ஆறிப்போன காயங்களின் வலி’ – நூல்

Posted On ஏப்ரல் 20, 2018

Filed under uncategorized

Comments Dropped leave a response

வெற்றிச் செல்வியின் தடுப்பு முகாம் / புனர்வாழ்வு நிலைய வாழ்க்கையின் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ வாசித்து முடித்தேன். எதையும் அனுபவித்தால்தான் உண்மையான வலி புரியும். இருந்தாலும் வாசிப்பினூடே, தொடரும் வலியும், ஏதோவொரு இனம்புரியாத குற்றவுணர்வும் இருந்துகொண்டே இருந்தது. பல இடங்கள் (அல்லது முழுமையுமே) ஒரு கலக்கத்தைத் தருவதாய் இருந்தது.

மனதை மிகவும் பாதித்த சில வரிகள்:

  • “அவங்கள் யாருக்குப் பதில் சொல்லணும் எண்டு தேவை கிடக்குது இங்க. விட்டாச்சுது எண்டு சொல்லியாச்சுது. பத்துப்பேரை விட்டிட்டு, இருபதுபேரைக் கொன்று போட்டாலும் இங்க உலகமும் கேக்காது. ஊராக்களும் கேக்க மாட்டாங்க.” எத்தனை விரக்தியான வார்த்தைகள்.
  • “போர் அவளது மேல் கையொன்றில் தன் பதிவைச் செய்வதற்காக அக் கையின் உணர்வைப் பறித்திருந்தது. சூம்பிய கையில் விரல்கள் தம் பாட்டில் விரிந்து வேலை செய்வதில்லை. ஆனால் அந்தக் கையால் நாளொன்றுக்கு எத்தனை பேருக்கு அந்த ஆழக் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்துக் கொடுக்கிறாள்! இயலாமை என்பது எல்லாம் உடலில் இல்லை என்பதற்கு அவள் ஒரு உதாரணம்.”
  • “மனிதம். புனர்வாழ்வு என்றால் என்ன? யாராவதுஎதற்காவது பயிற்றுவிக்கப்படவுமில்லை. தொழில்துறைகள்பற்றி அறிமுகங்களைத் தரவுமில்லை. பின்பென்ன புனர்வாழ்வும் கத்தரிக்காயும்?”

அலை அழித்த தமிழ்!

Posted On நவம்பர் 13, 2016

Filed under uncategorized

Comments Dropped leave a response

அலை அழித்த தமிழ்!

இரு பல்கலை மாணவர்கள், அதுவும் அறிவியல் கல்விப் பிரிவில் இருக்கும் மாணவர்கள் ஆழமான அழகு தமிழில் இப்படி ஒரு நூலை எழுதியது உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தியது.

20161113_110403

அலை அழித்த தமிழ் – சுஜீந்தன் பரமேஸ், நீதுஜன் பாலா

கல்வி பயிலும் காலத்தில் வரலாறு எனக்குப் பிடிக்காத பாடமாகவே இருந்தது. அதற்கு, அதனைக் கற்பித்த ஆசிரியரும் ஒரு முக்கியமான காரணம். ஆனால் வரலாற்றை எப்படி ஆர்வமுடன் கேட்கும்படி (வாசிக்கும்படி) செய்வது என்று இந்த இருவரும் நன்கே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். மிகவும் விறுவிறுப்பாக, ஆர்வத்தைத் தூண்டும்படியாக எழுத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.

புனைவும், கற்பனையும் கலந்திருப்பதாக அவர்கள் சொல்லியிருப்பதால், வாசிப்பினூடே (முக்கியமாக இறந்த காலம் பற்றிய பக்கங்களில்) எது கற்பனை என்றும் சேர்த்தே ஆராய்ந்து கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இன்னும் சில முக்கியமான வரலாற்று விடயங்களையும் எழுதியிருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றியது. அவர்களுக்கே இன்னமும் மேலதிகமாக எழுதும் உத்வேகம் இருப்பதையும் கூறிவிட்டார்கள். எனவே அவர்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கலாம்.

எதிர்காலம் பற்றிய கற்பனை (அல்லது எதிர்வுகூறல் என்றும் கொள்ளலாமோ), கவலைக்குரியதாக இருந்தாலும், வித்தியாசமாக எழுதப்பட்டிருந்க்கிறது. எதிர்காலம் மட்டுமன்றி, எழுத்தின் போக்கே வித்தியாசமாக இருந்ததால், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

எனது வாசிப்பு!

Posted On நவம்பர் 13, 2016

Filed under நூல், ரசித்தவை, uncategorized

Comments Dropped leave a response

மலாவியில் இருந்து மீண்டும் நோர்வே வந்தாயிற்று. இந்த குளிரும், இருட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், நோர்வேயில் மீண்டும் இருப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.

norway norway1 norway2 norway3 norway4 norway5 norway6

மலாவியில் இருந்த மெதுவான இணைய இணைப்பு வேகம், என்னை வாசிப்பின் பக்கம் மீண்டும் இழுத்து வந்தது. வாசித்த நூல்கள்:

1. Long walk to freedom – Nelson Mandela

2. நினைவாற்றல் – அகணி, சி.அ.சுரேஷ்

3. வெகுளாமை – அகணி, சி.அ.சுரேஷ்

4. ஒரு கூர் வாளின் நிழலில் – தமிழினி (மின்னூல்)

5. ஆதிரை – சயந்தன்

6. ஆறிப்போன காயங்களின் வலி – வெற்றிச் செல்வி

7. அலை அழித்த தமிழ் – சுஜீந்தன் பரமேஸ், நீதுஜன் பாலா

எல்லா நூல்களுமே நன்றாக இருந்தன. அனைத்தையும்பற்றி எழுத நினைத்திருந்தாலும் எழுத முடியவில்லை. இறுதியாக வாசித்தது அலை அழித்த தமிழ். அதைப் பற்றியாவது எழுதிவிடும் எண்ணம்.

அடுத்து வாசிக்க இருப்பது> The Monk who sold his Ferrari By Robin Sharma

உங்கள் அம்மாவை எப்படி கையாளுவீர்கள்?

Posted On நவம்பர் 6, 2009

Filed under uncategorized

Comments Dropped 3 responses

எப்போதோ எழுத ஆரம்பித்து பின்னர் draft இலேயே இருந்த இடுகை இன்று கண்ணில் பட்டது. அதை இங்கே பதிவேற்றுகிறேன்.

”இண்டைக்கு library க்கு போனீங்களா? என்ன புத்தகம் எடுத்து வந்தீங்க?” என்று மகளிடம் கேட்டேன். அவள் உடனே ஒரு வெட்கச் சிரிப்புடன், ”ஓம், போனனான், புத்தகம் எடுத்தனான். ஆனா உங்களுக்கு காட்டக் கூடாது.” என்றாள். ஆஆஆஆஆஆஆஆஅ, எனக்கு காட்டக் கூடாத அப்படி என்ன புத்தகத்தை மகள் எடுத்து வந்திருக்கிறாள் என்று ஆச்சரியப்ப்பட்டுப் போனேன்.”அதென்ன புத்தகம் எனக்கு காட்டக் கூடாதது? அப்படி ஒண்டும் இருக்காதே. எனக்கும் உங்களுக்குமிடையில no secrets எண்டு அண்டைக்கு சொன்னனீங்களே. காட்டுங்கோ எனக்கும்” என்று சொன்னேன்.

எனக்கோ curiosity தாங்க முடியேல்லை :). அவளோ ஒளிச்சுக் கொண்டு ஓடித் திரியிறாள். நான் படும் அவதியைச் சகிக்காமல், அவளே கடைசியில் புத்தகத்தை காட்டினாள். புத்தகத்தின் தலைப்பு, “How to handle your mom?”. தலைப்பை பார்த்ததும் நான் சிரித்தேன், ”நல்ல புத்தகம்தான் எடுத்து வந்திருக்கிறீங்க.” என்றேன். அவள் உடனே முன்னுரையில் இருந்த ஒரு வசனத்தையும் காட்டி, “இப்பிடி இருக்கு இங்க. அதான் நான் உங்களுக்கு காட்டக் கூடாது” என்றாள். அப்படி என்னதான் இருக்கு என்று பார்த்தேன். அங்கே இருந்தது…..

It’s dangerous when it falls into the wrong hands, that’s yr mom’s.

உடனே புத்தகத்தை திருப்பிக் கொடுத்து, “Good luck to handle your mom” என்று சொன்னேன். சிரித்துக் கொண்டே புத்தகத்தை பறிக்காத குறையாய் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் ஓடினாள். அவள் மகிழ்ந்தால் எனக்கும் மகிழ்வுதானே? 🙂