The Way Home!

The Way Home

நான் அண்மையில் பார்த்த ஒரு கொரியன் படம் இது. என்னைப் பொறுத்தளவில் மிகச் சிறந்த படம். கதை வாசிக்காமல் படம் பார்க்க விரும்புபவர்கள், இதனைத் தொடர்ந்து வாசிக்காமல், மூடி விட்டு, படத்தைத் தேடத் தொடங்கலாம். அவர்களுக்காக ஒருவரி விமர்சனம். ஒரு பாட்டிக்கும், பேரனுக்குமிடையிலான உன்னதமான அன்புப் பிணைப்பைக் காட்டும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். கீழே எனது முழுமையான விமர்சனம். 🙂

ஒரு பாட்டிக்கும், பேரனுக்குமிடையில இருக்கிற உறவுபற்றிய கதை. சின்ன குழந்தைகளும் பார்க்க பிரியப்படக் கூடிய கதை. மகளுடன் சேர்ந்து பார்த்தேன்.

கணவனைப் பிரிந்து இருக்கும் குட்டிப் பையனின் அம்மா, நகரத்திலிருந்து மகனையும் கூட்டிக் கொண்டு பின்தங்கிய கிராமத்திலிருக்கும் பாட்டி (அம்மம்மா) வீட்டுக்கு வருகிறார். அங்கேயே குட்டிப் பையனை சிலநாட்கள் பாட்டியுடன் இருக்கும்படி விட்டுவிட்டு, புதிய வேலை ஒன்று தேடி நகரத்துக்குப் போய் விடுகிறார்.

அங்கே பையன் பாட்டியுடன் இருக்கும் நாட்களில், அவர்களின் உறவில் ஏற்படும் மாற்றங்களை படிப்படியாக சொல்கிறது படம். பின்தங்கிய கிராமத்து சூழலில் ஒட்டிக் கொள்ள முடியாமல் இருக்கும் பையன், நகரத்து நாகரீக வாசனையே அறியாத பாட்டியை ஆரம்பத்தில் உதாசீனம் செய்கிறான்.  சில நாட்கள் அங்கே வாழ்ந்து பின்னர் பாட்டியின் தூய்மையான அன்பில் படிப்படியாக பையனிடம் ஏற்படும் மாற்றமும், மீண்டும் அவன் அம்மாவுடன் நகருக்கு செல்லத் தயாராகும் நிலையில், பாட்டியுடன் மனதளவில் ஏற்பட்ட நெருக்கமும், மிக மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

கிராமத்து சூழலிலேயே இருந்துவிட்ட பாட்டிக்கு, பையனுக்குத் தெரிந்த நாகரீக வாழ்க்கையின் தடங்கள் பற்றி எதுவுமே சொன்னாலும் புரிவதுமில்லை. நகர வாழ்க்கையில் பழக்கப்பட்ட பையனுக்கு கிராமத்தில் பொழுது போவதே கடினமாக உள்ளது. தனது மின்சார விளையாட்டுப் பொருளான Game Boy உடனேயே பொழுதைக் கழிக்கும் பையனுக்கு, தொடர்ந்து அதிலேயே விளையாடிக் கொண்டிருந்ததால், அதன் மின்கலம் தனது தொழிற்பாட்டை நிறுத்தியதும், மிகவும் வருத்தமாகி விடுகிறது. பையனின் தேவையை அல்லது அவசியத்தை பாட்டியாலேயும் புரிந்துகொண்டு நிவர்த்தி செய்ய முடியவில்லை. அவனாலும் அதை வாங்க முடியாமலேயே போய் விடுகிறது.

பையன் தனக்கு Kentucky Fried Chicken வேண்டும் என்று சொல்லி, புரிய வைக்க முடியாமல், புத்தகத்தில் இருக்கும் கோழியின் படத்தை எடுத்துக் காட்ட, பாட்டியும், தன்னால் பேரனுக்குப் பிடித்ததை செய்து கொடுக்க முடியும் என்றெண்ணிக் கொண்டு, கூனல் விழுந்த முதுகுடன், நடந்து சென்று கோழி வாங்கி வந்து, தனக்கு தெரிந்தபடி, அதை முழுவதுமாய் போட்டு அவித்து வைக்க, பையன் Kentucky Fried Chicken கிடைக்காத வருத்தத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சோர்ந்து படுத்து விடுகிறான். ஆனாலும் பாட்டி தூங்கிய பின்னர் எழுந்து, பசி தாங்காமல் பாட்டி அவித்து வைத்த கோழியையே உண்கிறான்.

இதில் முக்கியமான விசயம், பாட்டிக்கு குரல் எழுப்பி பேசவும் முடியாது. சைகைகளினாலேயே படம் முழுமைக்கும் பாட்டி பேசும் மெளனமொழி, மனதை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது. ஆரம்பத்தில் பாட்டியுடன் முரண்டு பிடிக்கும் பையன் கொஞ்சம் கொஞ்சமாய் பாட்டியின் அன்பிற்கு கட்டுப்பட்டுப் போவதாய் படம் முடிகிறது.

பையன் கிராமத்தை விட்டு போவதற்கு முன்னர், பாட்டிக்கு பேச முடியாது, சுகவீனம் ஏற்பட்டாலும் தொலைபேசியில் தகவல் சொல்ல முடியாதென்பதால், பாட்டிக்கு எழுதப் பழக்கி கடிதம் போடச் சொல்கிறான். I’m sick’, ’Miss you என்ற இரண்டையும் எழுதப் பழக்கி, அது கடினம் என்று புரிந்ததும், சுகவீனம் ஏற்பட்டால், வெற்றுத் தாளை தனக்கு அஞ்சல் செய்யும்படியும், பாட்டிக்கு சுகவீனம் எனப் புரிந்து கொண்டு தான் விரைந்து வருவதாகவும் பாட்டியிடம் சொல்கிறான். இருவரும் அழும்போது நமக்கும் அழுகை வருகிறது.

பாட்டிக்கு எழுதப் புரியாதென்பதால், படங்கள் மூலம் சில வாழ்த்து அட்டைகள் தயார் செய்து பாட்டிக்கு கொடுத்துவிட்டுப் போவான். (குழந்தைகளுக்கு படம் வரைய சொல்லியா தர வேண்டும். கற்பனையை எல்லா இடமும் விட்டு என்னென்னமோ எல்லாம் வரைவார்கள். என் குட்டிப் பெண் எனக்கு செய்து கொடுக்கும் வாழ்த்து அட்டைகள் யாவும் பத்திரமாக வைத்திருக்கிறேன்).

சில தடவைகள் கண் சரியாகத் தெரியாத பாட்டி தனக்கு ஊசியில் நூல் கோற்றுத் தரும்படி பையனைக் கேட்பாள். மனம் சோர்ந்த நிலையிலிருக்கும் அவன் மறுத்து விடுவான். ஆனால், பையன் பாட்டியை விட்டு போகப் போகும் நேரத்தில் பாட்டிக்குத் தேவை என்பதைப் புரிந்து கொண்டு சில ஊசிகளை எடுத்து நூலைக் கோத்து தயாராக வைத்து விட்டுப் போவான்.

பாட்டியை விட்டுப் பிரிந்து போவது பையனுக்கு மிகக் கடினமாக இருக்கிறது என்பதை, அவன் எந்த வார்த்தையும் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிகிறது. (அதைப் பார்த்தபோது, பல வருடங்கள் முன்னால் நடந்தது நினைவுக்கு வந்தது. நான் மிகவும் நேசிக்கும், என்னுடைய ஒரு குட்டித் தம்பியும், அவனை விட்டு ஒவ்வொரு தடவையும் நான் பயணப்படும்போதெல்லாம், எந்த ஒரு வார்த்தையுமே சொல்லாமல், மெளனமாக தனது துக்கத்தை வெளிப்படுத்துவது நினைவில் வந்தது. அப்போது அவன் சின்னப் பையன்). கடைசியாக பேருந்தில் ஏறியபின்னர், எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருந்து விட்டு, பேருந்து கிளம்பியதும், ஓடி வந்து பின்பக்க கண்ணாடி வழியாகப் பார்த்து, பாட்டியின் சைகை மொழியிலேயே தான் அவர்மேல் வைத்திருக்கும் அன்பை நெஞ்சை தடவி காட்டுகிறான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், அவர்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் வைக்கும் அன்பு மனதை மிகவும் நெகிழ்வடையச் செய்கிறது.

பாட்டியும், பையனும் இயல்பாக இருந்தபோது, படம் பிடிக்கப்பட்டார்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். உண்மையிலேயே அப்படித்தான் எடுத்திருப்பார்களோ? நடித்திருக்கிறார்கள் என்று சொல்லவே மனம் இடம் கொடுக்கவில்லை.

இவையெல்லாம் வார்த்தைப் பூச்சுக்கள் எதுவும் இல்லாமல், படத்தில் வரும் சின்ன சின்ன காட்சிகள் மூலமும், மெளன மொழிகள் மூலமுமே சொல்லி விடுகிறார்கள். அருமையான படம். அனைவரும் பாருங்கள். ஆங்கில மொழிபெயர்ப்புடன் படம் பார்த்தாலும், இந்தப் படத்தைப் பார்க்க எந்த மொழியும் அவசியமே இல்லை.

எரியும் நினைவுகள் – யாழ் நூலகம்!

எரியும் நினைவுகள்!

எமது யாழ்நூலக எரிப்பு பற்றி, சோமீதரன் என்ற இளைஞனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ‘எரியும் நினைவுகள்’ என்ற விவரணப் படம் பார்த்தேன்.

நாட்டின் அமைதியற்ற சூழ்நிலையில், யாழ் நூலகம்பற்றி பல்வேறுபட்ட தகவல்களையும் சேகரித்து, இவ் விவரணப் படத்தை அவர் தயாரித்ததே பெரிய விடயம் என தோன்றியது. யாழ் நூலக எரிப்புக்கு சில நாட்கள் முன்னரே பிறந்த இவருக்கு, இப்படி ஒரு வரலாற்றுப் பதிவை ஆவணப் படுத்த வேண்டும் என்று தோன்றியது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய விடயமே.

பிரசித்தி பெற்ற, பழம் பெருமை வாய்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டது பலருக்கும் வேதனை கொடுத்த ஒரு நிகழ்வு. பழைய நூலகம் இருந்த அதே இடத்தில், நூலகம் எரிக்கப்பட்டதற்கான  அடையாளங்களை முற்றிலும் மறைத்து புதிய நூலகத்தை கட்டி எழுப்பியதன் மூலம், வரலாற்று சாட்சி்யம் ஒன்றை  அழித்து விட்டார்கள் என்பது பலரது ஆதங்கம். ஆனால் சோமீதரன் தனது இந்த விவரணப் படம் மூலம், அந்த சாட்சிக்கு உயிர் கொடுத்து வைத்திருக்கின்றார். அதையிட்டு அவர் பெருமை கொள்ளலாம்.

இப்படியான அவரது பணிகள் மேலும் தொடரட்டும்.

மொழி!

மொழி!

நீண்ட நாளைக்கு பிறகு பார்த்த நல்ல தமிழ்ப் படம். தென்றல் வருடிச் சென்றதுபோல், இனிமையான உணர்வைத் தந்த, மிகவும் அருமையான படம்.மெளனமொழியில் அழகாக கதை நகர்ந்திருக்கிறது. கதையின் முடிவில் அர்ச்சனா மெளனமொழியில் பேசும்போது, அதற்கு யாரும் எந்த விளக்கமும் கொடுக்காமல், அதை விளங்கிக் கொள்ளும்படி எவரும் பதில் கூட கொடுக்காமல் இருந்தாலும், நம்மால் அர்ச்சனா பேசுவதைப் புரிந்து கொள்ள முடிவது, மொழிப் படத்தில், மெளனத்திற்கு கிடைக்கும் வெற்றி.

படத்தில் அனைவரும் இயல்பாக நடித்திருக்கின்றார்கள். கதையைக் கெடுக்காமல், கூடவே இணைந்து வரும் நகைச்சுவை நன்றாக உள்ளது. விஜி தனது காதலை வெளிப்படுத்தும் விதம் இரசிக்கும்படியாக இருந்தது :). பெண்ணின் பெற்றோரிடம், “நீங்க நாளைக்கே முடிவு சொல்லணும் னு அவசியமில்லை, இன்னைக்கே கூட சொல்லிடலாம்.” என்று சொல்வது நன்றாக இருந்தது :).

அர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசைக்கு என்ன அர்த்தம் என்ற நண்பரின் கேள்விக்கு, அர்ச்சனாவின் பதில் மனதைத் தொட்டது. வாய்பேச முடியாத, காதும் கேட்காத அர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசையும் ஒரு மொழி. தனக்குத் தெரியாத மொழிகளில் ஒன்றாக இசையையும் சேர்த்துக் கொண்டு, அதை எதிர்மறையான பாதிப்பு எதுவுமின்றி சாதாரணமாக சொல்லும் மனப்பக்குவம் மனதைத் தொட்டது.

படத்தின் சில இடங்கள் நெகிழ்வைத் தந்ததுடன், தொண்டை அடைக்க (வலிக்க) வைத்தது. பூ விற்கும் ஒரு சின்னக் குழந்தையுடன், கார்த்திக் மெளன பாஷையில் பேசியதும், முழுப் பூவையும் பணம் கொடுத்து பெற்றுக் கொள்வதும் தொண்டையில் இருந்த நீரை கண்ணுக்கு இடம் மாற்றியதால், தொண்டை வரண்டு வலித்தது. ஏனென்று தெரியவில்லை.

மேலும், மகன் இறந்ததை ஏற்றுக் கொள்ளாமல், மகன் இறந்த காலத்திற்கு முன்னைய காலத்தில் வாழும் proffessor செருப்பு வாங்கிக் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டதும், கார்த்திக் வாங்கிக் கொடுத்ததை சந்தோஷத்துடன் மற்றவரிடம் காட்டி மகிழ்வதைக் கண்டு கார்த்திக் மன நிறைவுடன் செல்வதும், கடைசியில் மகனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று கார்த்திக்கிடம் சொல்லும்போது, அவரை உண்மையை சொல்லி உணர வைத்து, அவரை கார்த்திக் வாய்விட்டு அழ வைக்கும் காட்சி, எனக்கும் கண்ணில் நீரை வரவழைத்தது.

காதுக்கு இனிமையான, உணர்வுக்கு அருமையான பாடல்கள்.

ஆனாலும், அந்த ‘பேசா மடந்தையே’ என்ற பாடலுக்கு சிவப்பு உடையணிந்த பெண்கள் வந்து அவசியமே இல்லாமல் நடனம் ஆடிவிட்டுப் போவது பொருத்தமில்லாமல் இருக்கின்றது.

எனக்கு தமிழில் மிகப் பிடித்த இரண்டு சொற்களுக்கு இந்த படத்தில் இருக்கும் முக்கியத்துவம் எனக்கு இந்தப் படத்தை மிகவும் பிடித்துப் போகச் செய்திருக்கின்றது. அவை ‘மொழி’, ‘மெளனம்’.

அன்புக்கு மொழி அவசியமில்லை!!!

கண்ணீர்ப்பூக்கள்!!

போன வார விடுமுறையில் கண்ணாடிப்பூக்கள் படம் பார்த்தேன். அதை இப்பத்தான் பார்த்தீர்களா என்று பலரும் சலித்துக் கொள்வதுபோல் எனக்கு ஒரு தோற்றம். என்ன செய்வது நானிருக்கும் இடத்தில் தமிழ்ப்படங்கள் எடுப்பது இலகுவல்லவே. லண்டன் போயிருந்தபோது ஒரு படத்துக்கு 3 பவுண்ஸ் (மட்டுமே) கொடுத்து DVD கொஞ்சம் வாங்கி வந்தோம். அதுலே ஒன்றுதான் இந்தக் கண்ணாடிப்பூக்களும்.

நிறைய நாளைக்குப் பிறகு நல்ல ஒரு கருத்துள்ள படம் பார்த்த திருப்தி. இரண்டாவது குழந்தை பிறந்ததும், முதல் குழந்தை மேல் வைத்திருக்கும் கவனங்கள் குறைந்து விடுவதும், அதனால் அந்த குழந்தைகள் மனதில் எழும் பிரச்சனைகளையும் கதை எடுத்துக் காட்டுகிறது. இரண்டாவது குழந்தைக்கு தயாராகும் எல்லா அம்மா, அப்பாக்களும் கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயம்.

படத்தில் பல இடங்கள், மனதை ஆழமாகத் தொட்டது. ஒரு பக்கம் இறந்து போன குழந்தை, மறு பக்கம் அந்தக் குழந்தையின் இறப்புக்கு தமது மற்ற குழந்தையே காரணம் என்பதை அறிந்ததில் அதிர்ச்சி, அந்தக் குழந்தையை சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி பாதுகாப்பது என்பது புரியாத குழப்பம், தமது குழந்தை தப்பு செய்வதற்கு தாமே காரணமாகி விட்டோமே என்ற தவிப்பு…. இப்படியே அந்தப் பெற்றோர் படும் அவஸ்தைகள் யதார்த்தமாக சொல்லப்பட்டு இருந்தது.

அந்தக் குட்டிப்பையனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியதும், அங்கே அந்த வில்லனை பொறுப்பாளராகப் பார்த்ததுமே, நெஞ்சுக்குள் படபடப்பு. அந்த நபர் கொஞ்சம் இடக்கு மடக்காக ஆரம்பத்தில் இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு கடுமை அங்கே தொடர்ந்து வரவில்லை (நல்ல வேளையாக).

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்… உண்மையிலேயே இந்தியாவில் இருக்கும் சிறுவர் சீர் திருத்தப் பள்ளிகளில் இப்படித்தான் குழந்தைகளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்களா? அப்படியானால் சீர்திருத்தப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைக்கும் நோக்கமே பாதிப்புக்கு உள்ளாகாதா? இந்தக் கேள்விதான் மனதை அதிகம் பாதித்தது.