எனது வாசிப்பு!
மலாவியில் இருந்து மீண்டும் நோர்வே வந்தாயிற்று. இந்த குளிரும், இருட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், நோர்வேயில் மீண்டும் இருப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.
மலாவியில் இருந்த மெதுவான இணைய இணைப்பு வேகம், என்னை வாசிப்பின் பக்கம் மீண்டும் இழுத்து வந்தது. வாசித்த நூல்கள்:
1. Long walk to freedom – Nelson Mandela
2. நினைவாற்றல் – அகணி, சி.அ.சுரேஷ்
3. வெகுளாமை – அகணி, சி.அ.சுரேஷ்
4. ஒரு கூர் வாளின் நிழலில் – தமிழினி (மின்னூல்)
5. ஆதிரை – சயந்தன்
6. ஆறிப்போன காயங்களின் வலி – வெற்றிச் செல்வி
7. அலை அழித்த தமிழ் – சுஜீந்தன் பரமேஸ், நீதுஜன் பாலா
எல்லா நூல்களுமே நன்றாக இருந்தன. அனைத்தையும்பற்றி எழுத நினைத்திருந்தாலும் எழுத முடியவில்லை. இறுதியாக வாசித்தது அலை அழித்த தமிழ். அதைப் பற்றியாவது எழுதிவிடும் எண்ணம்.
அடுத்து வாசிக்க இருப்பது> The Monk who sold his Ferrari By Robin Sharma
நீண்ட நாட்களின் பின்னர்!
ஏப்ரல் 6, 2013
Filed under கிறுக்கல்கள், சமூகம், நோர்வே, ரசித்தவை
குறிச்சொற்கள்: பயணங்கள், மகாதேவா சிறுவர் இல்லம், மனிதாபிமானம், வாழ்க்கை
நீண்ட நாட்களின் பின்னர்
இன்று சனிக்கிழமை. ஆனால் வேலை செய்யவென்று வேலைக்கான இடத்திற்கு வந்தேன். மகளுக்கு இன்று சங்கீதம் சோதனை. அவளைக் கூட்டிக்கொண்டு போய் சோதனைக்கான இடத்தில் விட்டுவிட்டு, கொஞ்சம் வேலை செய்யலாமே என்று வேலைத்தளம் வந்தேன். கடந்த வருடம் புதிதாக ஒரு project இல் வேலை செய்ய ஆரம்பித்தது முதல், நினைக்கிற நாளில் வேலை செய்து நினைக்கின்ற நாளில் விடுமுறை எடுக்கும் சுதந்திரம் கிடைத்தது. அதனால், சனியோ, ஞாயிறோ எனக்கு வசதியான நேரத்தில் வேலை செய்துவிட்டு, பாடசாலை விடுமுறையை ஒட்டி, எனக்குத் தேவையான நாட்களில் விடுமுறை எடுத்துக்கொண்டு, குடும்பத்துடன் பல இடங்களுக்கும் பயணம் செய்ய முடிகின்றது. அதுசரி, வேலை செய்யவென்று வந்துவிட்டு, இங்கே வலைப்பதிவில் என்ன வேலை? 🙂 சும்மாதான். நீண்ட நாட்களாக எனது வலைப்பதிவு, வெறும் வெளி இணைப்புக்கள் கொடுக்கும் இடமாகவே உள்ளதே. இப்படியே விட்டால், எனது வலைப்பதிவு என்னுடையதுதானா என்ற சந்தேகம் எனக்கே வந்து விடுமோ என்றுதான், இன்று எதையாவது இங்கே எழுதலாமே என்று ஒரு எண்ணம் வேலைத்தளம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது வந்தது. அதனால்தான் இந்தப் பதிவு.
கைத்தொலைபேசியில் ரேடியோ
வேலைத்தளம் மிகவும் அமைதியாக இருக்கின்றது. என்னைப்போல் வாரவிடுமுறையில் ஆய்வகத்தில் வேலை செய்ய (அல்லது செய்யும் எண்ணத்துடன் வந்த, ஹி ஹி) வந்திருக்கும் ஓரிருவரைத் தவிர, அமைதியாகவே இருக்கின்றது. அதனால், தமிழ் ரேடியோவைப் போட்டுக் கேட்டுக்கொண்டே, எனது வேலையை (அதாவது வலைப்பதிவில் இடுகை இடும் வேலையை) தொடர்கின்றேன். எனது கைத்தொலைபேசியில் பல இணைய ரேடியோ நிகழ்ச்சிகளும் எடுத்து விட்டிருக்கின்றேன். எனவே கைத்தொலைபேசிக்கு இணைய இணைப்பைக் கொடுத்துவிட்டு ரேடியோ நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். சரி இன்றைக்கு ATBC கேட்கலாம் என்று போட்டேன். ஆனால் அது இன்றைக்கு வரவில்லை. எனவே CTBC போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.
மகாதேவா ஆச்சிரம் சிறுவர் இல்லம்
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக்குப் போய் குடும்ப உறவுகளைப் பார்த்து வருவதுடன், உதவி தேவைப்படுபவர்களுக்கு, எம்மாலான உதவிகளைச் செய்து வருவோம். அப்படி கடந்த ஆண்டில் சென்றபோது நாம் சென்ற இடம் மகாதேவா ஆச்சிரம சிறுவர் இல்லம். தயவுசெய்து இந்த இணைப்புக்குச் சென்று, அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையைப் பார்த்துவிட்டு, முடிந்த அளவில் அவர்களுக்கு உதவுமாறு இந்த இடுகையைப் பார்க்கும் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன். ஒவ்வொருவரும் நேரடியாகவே அவர்களைத் தொடர்பு கொண்டு உதவ முடியும். கடந்த ஆண்டில் அவர்களிடமிருந்து ஒரு கடிதம் வந்தது (நாம் கடந்த ஆண்டில் அவர்களிடம் சென்று வந்ததால் அவர்களிடம் எமது வீட்டு விலாசம் இருந்தது). அதில் அரசாங்கம் தங்களுக்கு மின்சார வசதியை இலவசமாகத் தருவதாகச் சொல்லியிருந்ததாகவும், ஆனால் தற்போது இல்லையென்று விட்டார்கள் என்றும், அதனால் தாங்கள் சூரியவலுவைப் பெற்று, மின்சார வசதி ஏற்படுத்துவதற்கு உதவி தேவையென்றும் எழுதியிருந்தார்கள். அதற்கு எம்மாலான உதவியைச் செய்வதுடன், நண்பர்களிடமும் கூறுமாறு கேட்டிருந்தார்கள். நான் எனதுமின்னஞ்சல் தொடர்பில் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் இது தொடர்பாய் மடலிட்டிருந்தேன். நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு தயவு செய்து இதனை அறிவியுங்கள். எவரை நம்பி உதவுவது என்ற பிரச்சனை இன்றி, ஒவ்வொருவரும் தாங்களாகவே அவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு உதவலாம். அவர்களது இணையப் பக்கத்தில் தேவையான அனைத்து தொடர்புக்கான தகவல்களும் உள்ளன. தமிழ்விக்கிப்பீடியாவிலும் மகாதேவா சிறுவர் இல்லம் என்று ஒரு கட்டுரை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேயிருக்கின்றேன். யாராவது இதனை வாசிக்கும் தமிழ் விக்கிப்பீடியர்களும் இதனைத் தொடங்கலாம்.
பயணங்கள் முடிவதில்லை
நோய் நிர்ணயத்துக்கான வழமையான சோதனை வேலையில் (Routine work of Diagnostic testing) இருந்து புதிதாக புற்றுநோய் தொடர்பான ஒரு Project இல் வேலை செய்ய ஆரம்பித்ததில் இருந்து வேறு வேலைகளுக்கான நேரம் குறைந்து போனது. முக்கியமாக நான் மிகவும் விரும்பிச் செய்துவந்த தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பு குறைந்து போனது :(. விடுமுறை கிடைக்கும்போதெல்லாம், குடும்பத்துடன் எங்காவது வெளிநாட்டுப் பயணங்கள் செய்கின்றோம். அதனால் வீட்டில் இருக்கும்போது கணினியில் செய்ய வேண்டிய வேலைகள் செய்யப்படாமல் போய்விடுகின்றது. இந்தப் பயணங்கள் பற்றி, அங்கே பார்த்த அழகான இடங்கள்பற்றி, சந்தித்த adventurous experiences, பொழுதுபோக்கு அம்சங்கள் பற்றியெல்லாம் பல தனிப்பதிவுகள் போட வேண்டும். ஒவ்வொருமுறை பயணம் முடிந்து வரும்போதும், அவைபற்றி எழுதி, படங்கள் இணைக்க வேண்டும் என நினைப்பேன். ஆனால் பொறுமையாக இருந்து அதனைச் செய்ய நேரம் கிடைப்பதில்லை. கடந்துபோன இரு ஆண்டுகளில்தான் எத்தனை பயணங்கள். அவற்றில் சில உறவுகளின் சுக துக்கங்களில் பங்கேற்பதற்கான பயணங்கள். ஏனையவை குடும்பத்துடன் உலகின் பல பகுதிகளையும் பார்த்து வருவதற்கான பயணங்கள். ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள்.
இசையும் நினைவுத்திறனும்
காரில் போகும்போது கேட்பதற்காக பாடல்கள் சேகரித்துக் கொண்டிருந்தேன். போன ஆண்டு வாங்கிய புதிய காரில் USB யில் பாடல்கள் போடும் வசதி இருந்ததால், எல்லாப் பாடல்களையும் ஒரே இடத்தில் சேர்க்கலாமே என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். கடந்த கிழமை Easter holiday க்கு ஜேர்மனியில் இருக்கும் சகோதரி வீட்டிற்குப் போயிருந்தோம். அங்கே குளிராக இருந்ததனால், அதிகமாக எங்கும் வெளியே செல்லவில்லை. வீட்டிலேயே இருந்து, கதைத்து, சிரித்து, சமைத்துச் சாப்பிட்டு, சேர்ந்திருந்து படங்கள் பார்த்து, விளையாடி பொழுதைக் கழித்தோம். அத்துடன் எனது பாடல் சேகரிக்கும் வேலையையும் பார்த்தேன். USB யில் 800 பாடல்களுக்கும் மேல் சேர்த்து விட்டேன். இது ஒரு கதம்பம். எல்லா வகையான பாடல்களும் இருக்கின்றன.தமிழ்ப் பாடல்களில் மிகப் பழையவை, இடைக்காலப் பாடல்கள், புதியவை எல்லாம் அடங்கும். மேலும் இவற்றில் மிகப் பிடித்த சில ஆங்கில, மலையாள, தெலுங்கு, இந்திப் பாடல்களும் அடக்கம். ஆங்கில கார்ட்டூன் படங்களில் வரும் சில நல்ல பாடல்களும் கூட சேர்த்துள்ளேன். காரில் குடும்பமாகப் போகும்போது, எல்லோரின் தேவையையும் பூர்த்தி செய்வதற்காக இந்த கதம்பமாலை செய்தேன். இல்லாவிட்டால், ‘எனக்கு புதுப்பாட்டைப் போடுங்கோ, இல்லையில்லை எனக்கு பழைய பாட்டைப் போடுங்கோ, இல்லை ஆங்கிலப் பாட்டைப் போடுங்கோ’ என்று ஒவ்வொருவரும் கேட்கின்றார்கள். இப்போ அப்படி யாராவது கேட்டால், ‘பொறுத்துக் கொள்ளுங்கோ! அடுத்து அதுவும் வரும்’ என்று சொல்லி விடுகின்றேன். எப்படி இருக்கு இந்த ஐடியா? 🙂 எனக்கு பாடல்கள் சேகரித்து முடித்துவிட்டு எண்ணிக்கை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இந்த 800 இல் அடங்கியவற்றை விட இன்னும் எத்தனையோ பாடல்கள் எனக்குத் தெரியும். இத்தனை பாடல்கள் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா என்ன என்பதுதான் ஆச்சரியத்துக்குக் காரணம். எனது நினைவுத் திறனை நானே மெச்சிக் கொண்ட நேரமிது :).
சுருங்கிய உலகம்
அண்மையில் நான் அடிக்கடி நினைத்துக் கொள்ளும் ஒரு விடயம் “உலகம் எத்தனை சுருங்கி விட்டது” என்பதுதான். உலகின் எந்தப் பகுதியில் இருப்பவரிடமும் உடனடியாக தொடர்பு கொள்ள முடிகின்றது. ஊரில் எங்கள் சின்ன கிராமத்தில் கூட இணைய வசதி வந்து விட்டதால், அப்பா, அம்மாவுடன் skype இல் பார்த்துப் பேசும் வசதி. தொலைபேசிக் கட்டணங்கள் மிகவும் குறைந்து விட்டதால், நினைத்தவுடன் எவருடனும் (அதிகம் யோசிக்காமல்) பேச முடிகின்றது. தவிர கைத்தொலைபேசியில் WhatsApp, Viber, Tango, Skype, Snapchat என்று வெவ்வேறு இலவச தொடர்பாடல் வசதிகள். Latest ஆ நான் தொடர்பாடலுக்குப் பயன்படுத்துவது Snapchat. எதுவும் எழுதாமலே, ஒரு படம் மூலமே விசயத்தை இன்னொருவருக்குச் சொல்லிவிட முடிகின்றது. தட்டச்சு செய்யும் வேலை மிச்சம் :). இப்போவெல்லாம் கைத்தொலைபேசியிலேயே எத்தனை விடயங்கள் முடிந்து விடுகின்றது. ஒலி, ஒளித் தொடர்பாடல்கள், இணையப் பார்வை, விளையாட்டு (நான் விரும்பி விளையாடுவது Wordfeud, Chess, Draw free, Unblock me), facebook, twitter, messenger, bank வேலைகள், Notes and reminders, alarm etc etc. அது மட்டுமா, தொழில்நுட்ப வளர்ச்சியினால், எங்கிருந்தாலும், நினைத்தவுடன் கைத்தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். முன்பெல்லாம் “வீட்டுக்குப் போய் போன் செய்ய வேண்டும்” என்று நினைப்போம். இப்போ அப்படியா என்ன? வேலையில் இருக்கின்றீர்களா? No problem. கார் ஓட்டிச் சென்று கொண்டிருக்கின்றீர்களா? No problem. காரில் போகும்போது, கைத்தொலைபேசியைத் தொடக்கூடத் தேவையில்லை. இருக்கவே இருக்கு Blue tooth and mike வசதி. வெளியே எங்காவது நின்றாலோ, வேலைத் தளத்தில் இருக்கும்போதோ கூட இலவச Wi-Fi பல இடங்களில். இலவச தொடர்பாடல் வசதிகள் கைத்தொலை பேசிகளில்.
கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன் 🙂
ஒன்று சொல்ல மறந்து விட்டேன். முன்பொரு தடவை நான் எழுதிய எனது ஆசிரியர் என்ற இந்தப் பதிவில் குறிப்பிட்ட எனது ஆசிரியரைக் கண்டு பிடித்துவிட்டேன். அவரின் சொந்த இடம் மானிப்பாய் என்று எனது நினைவில் இருந்தது. அதனை அம்மாவிடம் சொல்லியிருந்தேன். அம்மாதான் மானிப்பாயில் தொடர்புள்ளவர்கள் மூலம் விசாரித்து, அவரது தொலைபேசி எண்ணை எடுத்துத் தந்தார். அதன்பின்னர் தொடர்புகொண்டு அவருடன் கதைத்தேன். இரு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சென்றபோது நேரில் சந்திக்க முடிந்தது. அதே பழைய அன்புடன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வேலையில் ஓய்வெடுத்த பின்னர், பல சமூகத் தொண்டுகளில் ஈடுபட்டு வருகின்றார். எனது வகுப்பில் என்னுடன் படித்த ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டுக் கேட்டார். சிலருடன் தொடர்பிலும் இருக்கின்றார். அவர் கேட்கும்போதுதான் எனக்கே சிலருடைய பெயர் நினைவுக்கு வந்தது. இப்படி பெயர்கள் கூட மறந்து விட்டோமே என்று வெட்கமாகவும் இருந்தது. அவருடைய நினைவுத் திறனையும், மாணவர்கள்மேல் அவர் தற்போதும் வைத்திருக்கும் அதே அன்பையும் பார்க்கையில் மகிழ்ச்சியாகவும், சரியான ஒருவரைத்தான் தேடிச் சந்தித்திருக்கின்றோம் என்று மகிழ்வாகவும் இருந்தது.
ஆசிரியரைக் கண்டு பிடித்ததுபற்றி சொல்கையில் இன்னொன்றும் சொல்லத் தோன்றுகின்றது. மிக அண்மையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாகத் தொடர்பு விட்டுப் போயிருந்த ஒரு நெருங்கிய சினேகிதியையும் கண்டு பிடித்திருக்கின்றேன். அவளிருப்பது அமெரிக்காவில். ஏதோ ஒரு கட்டத்தில் நாமும் வீடு மாற, அதே நேரத்தில் அவர்களும் வீடு மாற, தொடர்பு தொலைந்து போனது. இலங்கை சென்ற அவளது கணவர் தற்செயலாக அங்கே எனது சகோதரியைச் சந்தித்ததால் மீண்டும் தொடர்பு துளிர் விட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
எனது உயிர்ப்பு
இன்று இங்கே வரும்போது, எனது இந்த உயிர்ப்பு பக்கம் Google search இல் எங்கே இருக்கின்றது என்று பார்த்தேன். அடடா 8 ஆவதாக வருகின்றதே. இது எனக்கு மட்டும்தான் வருகின்றதா, அல்லது எல்லோருக்கும் வருமா? 🙂
சரி சரி, இனி கொஞ்சம் எனது வேலையைப் பார்த்து விட்டு மகளைக் கூட்டிச் செல்ல போக வேண்டும். வணக்கம்.
சாலையோர பெயர்ப் பலகைகள்!
வாகன சாரதிகளுக்காக, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருக்கும் சில பெயர்ப் பலகைகளில், நான் மிகவும் பார்த்து இரசித்த சில பெயர்ப் பலகைகள் இங்கே. இவையெல்லாம் நான் பார்த்தது அவுஸ்திரேலியாவில். உங்கள் கவனமின்மையால் விபத்துக்கள் ஏற்படுத்தி, அது உங்களையும் பாதித்து மற்றவர்களையும் பாதிப்பதைத் தவிர்க்க பெயர்ப் பலகைகளை எப்படியெல்லாம் செய்து வைத்திருக்கிறார்கள். பாருங்கள். நேரடியாக இப்படி செய்யாதீங்க, அப்படி செய்யாதீங்க என்றெல்லாம் சொல்லாமல், இப்படி அழகாக, அமைதியாக, நிதானமாக உணரும் விதத்தில் சொல்லியிருப்பது மிகவும் பிடித்திருந்தது.
1. Drinking kills, driving skills. (வாகனம் ஓட்டும்போது குடிச்சுட்டு ஓட்டித் தொலைக்காதீங்க.)
2. Missing a call will not kill you. (வாகனம் ஓட்டும்போது, கைத்தொலைபேசியில் பேசியபடியே ஓட்டி ஆபத்தை ஏற்படுத்தாதீங்க.)
3. Alcohol plus speed, dead ahead (குடிச்சுட்டு வாகனம் ஓட்டப் போய் செத்து தொலையாதீங்க.)
4. Stay awake, take a break. (தூங்கிக்கிட்டே வாகனத்தை ஓட்டி ஆபத்தில் சிக்கிக்காதீங்க/ஆபத்தை ஏற்படுத்தாதீங்க).
The Way Home!
The Way Home
நான் அண்மையில் பார்த்த ஒரு கொரியன் படம் இது. என்னைப் பொறுத்தளவில் மிகச் சிறந்த படம். கதை வாசிக்காமல் படம் பார்க்க விரும்புபவர்கள், இதனைத் தொடர்ந்து வாசிக்காமல், மூடி விட்டு, படத்தைத் தேடத் தொடங்கலாம். அவர்களுக்காக ஒருவரி விமர்சனம். ஒரு பாட்டிக்கும், பேரனுக்குமிடையிலான உன்னதமான அன்புப் பிணைப்பைக் காட்டும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். கீழே எனது முழுமையான விமர்சனம். 🙂
ஒரு பாட்டிக்கும், பேரனுக்குமிடையில இருக்கிற உறவுபற்றிய கதை. சின்ன குழந்தைகளும் பார்க்க பிரியப்படக் கூடிய கதை. மகளுடன் சேர்ந்து பார்த்தேன்.
கணவனைப் பிரிந்து இருக்கும் குட்டிப் பையனின் அம்மா, நகரத்திலிருந்து மகனையும் கூட்டிக் கொண்டு பின்தங்கிய கிராமத்திலிருக்கும் பாட்டி (அம்மம்மா) வீட்டுக்கு வருகிறார். அங்கேயே குட்டிப் பையனை சிலநாட்கள் பாட்டியுடன் இருக்கும்படி விட்டுவிட்டு, புதிய வேலை ஒன்று தேடி நகரத்துக்குப் போய் விடுகிறார்.
அங்கே பையன் பாட்டியுடன் இருக்கும் நாட்களில், அவர்களின் உறவில் ஏற்படும் மாற்றங்களை படிப்படியாக சொல்கிறது படம். பின்தங்கிய கிராமத்து சூழலில் ஒட்டிக் கொள்ள முடியாமல் இருக்கும் பையன், நகரத்து நாகரீக வாசனையே அறியாத பாட்டியை ஆரம்பத்தில் உதாசீனம் செய்கிறான். சில நாட்கள் அங்கே வாழ்ந்து பின்னர் பாட்டியின் தூய்மையான அன்பில் படிப்படியாக பையனிடம் ஏற்படும் மாற்றமும், மீண்டும் அவன் அம்மாவுடன் நகருக்கு செல்லத் தயாராகும் நிலையில், பாட்டியுடன் மனதளவில் ஏற்பட்ட நெருக்கமும், மிக மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
கிராமத்து சூழலிலேயே இருந்துவிட்ட பாட்டிக்கு, பையனுக்குத் தெரிந்த நாகரீக வாழ்க்கையின் தடங்கள் பற்றி எதுவுமே சொன்னாலும் புரிவதுமில்லை. நகர வாழ்க்கையில் பழக்கப்பட்ட பையனுக்கு கிராமத்தில் பொழுது போவதே கடினமாக உள்ளது. தனது மின்சார விளையாட்டுப் பொருளான Game Boy உடனேயே பொழுதைக் கழிக்கும் பையனுக்கு, தொடர்ந்து அதிலேயே விளையாடிக் கொண்டிருந்ததால், அதன் மின்கலம் தனது தொழிற்பாட்டை நிறுத்தியதும், மிகவும் வருத்தமாகி விடுகிறது. பையனின் தேவையை அல்லது அவசியத்தை பாட்டியாலேயும் புரிந்துகொண்டு நிவர்த்தி செய்ய முடியவில்லை. அவனாலும் அதை வாங்க முடியாமலேயே போய் விடுகிறது.
பையன் தனக்கு Kentucky Fried Chicken வேண்டும் என்று சொல்லி, புரிய வைக்க முடியாமல், புத்தகத்தில் இருக்கும் கோழியின் படத்தை எடுத்துக் காட்ட, பாட்டியும், தன்னால் பேரனுக்குப் பிடித்ததை செய்து கொடுக்க முடியும் என்றெண்ணிக் கொண்டு, கூனல் விழுந்த முதுகுடன், நடந்து சென்று கோழி வாங்கி வந்து, தனக்கு தெரிந்தபடி, அதை முழுவதுமாய் போட்டு அவித்து வைக்க, பையன் Kentucky Fried Chicken கிடைக்காத வருத்தத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சோர்ந்து படுத்து விடுகிறான். ஆனாலும் பாட்டி தூங்கிய பின்னர் எழுந்து, பசி தாங்காமல் பாட்டி அவித்து வைத்த கோழியையே உண்கிறான்.
இதில் முக்கியமான விசயம், பாட்டிக்கு குரல் எழுப்பி பேசவும் முடியாது. சைகைகளினாலேயே படம் முழுமைக்கும் பாட்டி பேசும் மெளனமொழி, மனதை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது. ஆரம்பத்தில் பாட்டியுடன் முரண்டு பிடிக்கும் பையன் கொஞ்சம் கொஞ்சமாய் பாட்டியின் அன்பிற்கு கட்டுப்பட்டுப் போவதாய் படம் முடிகிறது.
பையன் கிராமத்தை விட்டு போவதற்கு முன்னர், பாட்டிக்கு பேச முடியாது, சுகவீனம் ஏற்பட்டாலும் தொலைபேசியில் தகவல் சொல்ல முடியாதென்பதால், பாட்டிக்கு எழுதப் பழக்கி கடிதம் போடச் சொல்கிறான். I’m sick’, ’Miss you என்ற இரண்டையும் எழுதப் பழக்கி, அது கடினம் என்று புரிந்ததும், சுகவீனம் ஏற்பட்டால், வெற்றுத் தாளை தனக்கு அஞ்சல் செய்யும்படியும், பாட்டிக்கு சுகவீனம் எனப் புரிந்து கொண்டு தான் விரைந்து வருவதாகவும் பாட்டியிடம் சொல்கிறான். இருவரும் அழும்போது நமக்கும் அழுகை வருகிறது.
பாட்டிக்கு எழுதப் புரியாதென்பதால், படங்கள் மூலம் சில வாழ்த்து அட்டைகள் தயார் செய்து பாட்டிக்கு கொடுத்துவிட்டுப் போவான். (குழந்தைகளுக்கு படம் வரைய சொல்லியா தர வேண்டும். கற்பனையை எல்லா இடமும் விட்டு என்னென்னமோ எல்லாம் வரைவார்கள். என் குட்டிப் பெண் எனக்கு செய்து கொடுக்கும் வாழ்த்து அட்டைகள் யாவும் பத்திரமாக வைத்திருக்கிறேன்).
சில தடவைகள் கண் சரியாகத் தெரியாத பாட்டி தனக்கு ஊசியில் நூல் கோற்றுத் தரும்படி பையனைக் கேட்பாள். மனம் சோர்ந்த நிலையிலிருக்கும் அவன் மறுத்து விடுவான். ஆனால், பையன் பாட்டியை விட்டு போகப் போகும் நேரத்தில் பாட்டிக்குத் தேவை என்பதைப் புரிந்து கொண்டு சில ஊசிகளை எடுத்து நூலைக் கோத்து தயாராக வைத்து விட்டுப் போவான்.
பாட்டியை விட்டுப் பிரிந்து போவது பையனுக்கு மிகக் கடினமாக இருக்கிறது என்பதை, அவன் எந்த வார்த்தையும் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிகிறது. (அதைப் பார்த்தபோது, பல வருடங்கள் முன்னால் நடந்தது நினைவுக்கு வந்தது. நான் மிகவும் நேசிக்கும், என்னுடைய ஒரு குட்டித் தம்பியும், அவனை விட்டு ஒவ்வொரு தடவையும் நான் பயணப்படும்போதெல்லாம், எந்த ஒரு வார்த்தையுமே சொல்லாமல், மெளனமாக தனது துக்கத்தை வெளிப்படுத்துவது நினைவில் வந்தது. அப்போது அவன் சின்னப் பையன்). கடைசியாக பேருந்தில் ஏறியபின்னர், எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருந்து விட்டு, பேருந்து கிளம்பியதும், ஓடி வந்து பின்பக்க கண்ணாடி வழியாகப் பார்த்து, பாட்டியின் சைகை மொழியிலேயே தான் அவர்மேல் வைத்திருக்கும் அன்பை நெஞ்சை தடவி காட்டுகிறான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், அவர்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் வைக்கும் அன்பு மனதை மிகவும் நெகிழ்வடையச் செய்கிறது.
பாட்டியும், பையனும் இயல்பாக இருந்தபோது, படம் பிடிக்கப்பட்டார்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். உண்மையிலேயே அப்படித்தான் எடுத்திருப்பார்களோ? நடித்திருக்கிறார்கள் என்று சொல்லவே மனம் இடம் கொடுக்கவில்லை.
இவையெல்லாம் வார்த்தைப் பூச்சுக்கள் எதுவும் இல்லாமல், படத்தில் வரும் சின்ன சின்ன காட்சிகள் மூலமும், மெளன மொழிகள் மூலமுமே சொல்லி விடுகிறார்கள். அருமையான படம். அனைவரும் பாருங்கள். ஆங்கில மொழிபெயர்ப்புடன் படம் பார்த்தாலும், இந்தப் படத்தைப் பார்க்க எந்த மொழியும் அவசியமே இல்லை.
நான் வித்யா – லிவிங் ஸ்மைல்!
லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய ‘நான் சரவணன் வித்யா’ வாசித்தேன். வாசிக்கும்போது தோன்றியது.
எத்தனை விதமான வலிகள், வேதனைகள், இரணங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்தாலும், பல பிரச்சனைகள் பொதுவானவையாக இருப்பதால், அவை காட்சிப்படுத்தப்படும்போது நாம் அந்த வலியை உணரா விட்டாலும், அனுபவிக்காவிட்டாலும், புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் திருநங்கைகளின் வலிகளும் வேதனைகளும் அத்தனை தெளிவாக எழுதப்படவோ, பேசப்படவோ, காட்சிப்படுத்தப்படவோ இல்லையாதலால், பலரும் அதை புரிந்து கொள்வதில்லை. வலிகளை புரிந்து கொள்ளாமல், கேலி, கிண்டல்களால் மேலும் மேலும் காயப்படுத்துகிறார்கள். அவர்களையும் சரிவரப் புரிந்து கொள்ளும் காலம் வர வேண்டும்.
வாசிப்பு – The Zahir!
Paulo Coelho எழுதிய The Zahir வாசித்தேன். 350 பக்கங்கள் கொண்ட நூலை, எனக்கு கிடைக்கும் குறுகிய நேரங்களில் வாசித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்ததைவிட மிகவும் வேகமாகவே வாசித்துவிட்டேன்.
அப்படி விரைவாக வாசிக்க காரணம் அந்தக் கதையின் கதாபாத்திரங்களின் இயல்புகள் சிலவோ, பலவோ என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும் ஒத்திருந்தது எனத் தோன்றுகின்றது. இயல்பாகவே ஒருவரிடம் இருக்கும் இயல்புகள் அனைத்தும் அனைவருக்கும் தெரிய வருவதில்லை. அதாவது வாழ்க்கையில் ஒரிருவரிடம் மட்டுமே முழுமையாக நாம் நாமாக இருக்க முடியும் எனத் தோன்றுகிறது.
கதாசிரியர் அந்தக் கதையின் கதைசொல்லியாக இருக்கிறார். அவர் இடை இடையே சில பல வாழ்க்கை தத்துவங்களை, தத்துவங்களாக இல்லாமல், இயல்பாக தெளித்துக் கொண்டு போயிருப்பதாகத் தோன்றுகிறது. வீடற்றவர்கள், இரந்துண்போர், நாடோடிகள் வாழ்க்கையிலேயே பல தத்துவங்கள் புதைந்திருப்பதாய் தோன்றுகின்றது.
கதையில், காணாமல்போன (‘இனிமேல் கணவனுடன் வாழுதல் இயலாது என நினைத்து, பிரிந்துபோன’ என்றும் கூறலாம்) மனைவியை மிகவும் சிக்கல்களுக்கு மத்தியில் தேடிக் கண்டு பிடித்து சந்திக்கிறான் கணவன். மனைவி பிரிந்து போனதன் பின்னர்தான், மனைவியின்மேல் தனக்கிருக்கும் உண்மையான காதலை அடையாளம் காண்கின்றான். ஆனாலும் அவளைத் தேடிப் போகும்போது, அவள் தன்னுடன் மீண்டும் திரும்பி வரமாட்டாள் என்பதை உணர்ந்தே போவதாகப் படுகின்றது. இருந்தும் எதற்கும் தயாராகவே தேடிப் போகின்றான். முடிவில் அவ்வளவு சிக்கல்களைத் தாண்டிப் போயும்கூட அவள் அவனுடன் வரவில்லையே என்பது சிறிது உறுத்தலாக இருந்தாலும், அதைத் தவிர வேறு மாதிரியான முடிவு அந்தக் கதைக்கு வர முடியாது என்றுதான் தோன்றுகின்றது.
கதை முடிந்த பின்னர் ‘கதாசிரியர் குறிப்பு’ மிகவும் பிடித்திருந்தது. உதவியவர்களுக்கு நன்றி சொல்வது இயல்புதான். ஆனால் அந்த நன்றியுடன், கதையில் வரும் ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களையும் எந்தக் கதை அல்லது கவிதையிலிருந்து பெற்றுக் கொண்டார், எதையெல்லாம் அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட விசயங்களை எழுதினார், யாருடன் பேசியபோது கதைக்குரிய சில கருத்துக்களைப் பெற்றுக் கொண்டார் என்று குறித்திருக்கிறார். உரியவர் யாரென்று தெரியாமல் இணையத்தில் பெற்றுக் கொண்ட தகவல்களைக் கூட மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார். உலகின் சில பகுதிகளூடாக தான் மேற்கொண்ட பயணத்தின்போது இந்தக் கதையை தான் எழுதியதாகவும், பயணத்தின்போது எந்த எந்த இடங்களிலிருந்து கதையை எழுதினார் என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.
மொத்தத்தில் இது எனக்குப் பிடித்த நூல்களில் ஒன்று எனலாம்.
அழகோ அழகு!
இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக இருக்கிறது.
எல்லாவற்றையும் விட அழகு ஒன்று என்னை கட்டிப் போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த கடல்நீரேரி.
இன்று, அந்த கடல்நீரேரியின் வெண்கம்பளத்தை மூடி, ஆளை மறைக்கும் உயரத்துக்கு புகை மூட்டம் சூழ்ந்து அழகோ அழகாக இருக்கு. (ஐயோஓஓஒ அந்த அழகை விபரிக்க முடியேல்லையே). கையில் புகைப்படக் கருவி இருக்கவில்லை. கைத் தொலைபேசியில் எடுக்கும் படம் தெளிவில்லை. அந்த நீரேரியின் மேல் தற்போது நடக்க முடியும். சில நாட்கள் முன்னர், அதன்மேல் நடந்து படம், அசையும் படம் எல்லாம் எடுத்தோம். ஆனாலும் இப்படி இந்த புகை மூட்டத்தி்ற்குள் ஓடி எடுத்தால் நன்றாக இருக்கும். இன்றைக்கு அதை நடை முறைப்படுத்த முடியவில்லை. நாளையும் இந்த அழகு தொடர்ந்து இருந்தால், எப்படியாவது இதை எடுத்தே ஆக வேண்டும். பார்க்கலாம்.
1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த ஆண்டில்தான், பேர்கனில் இவ்வளவு பனிவிழுந்து நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து இருக்கிறதாம். பேர்கன்தான் மழைநகரமாச்சே. அடிக்கடி மழைபெய்து, பனியை கழுவிச் சென்று விடும். ஆனால், இந்த ஆண்டு மழை ஓய்வு பெற்றுக் கொண்டு, பனிமழைக்கு இடம் விட்டுச் சென்றிருக்கிறது :).
இது ஒரு பனிக்காலம்!
இது ஒரு அழகான பனிக்காலம்!
நீர்நிலையொன்றில் உள்ள செயற்கையான இந்த தண்ணீரூற்றை பனிக்காலத்தில் மூடாமல் விட்டுவிட்டார்கள். மறந்துபோய் விட்டார்களா, அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீர் மேலெழுந்து, கீழே விழ முன்னரே உறைநிலைக்குப் போய்விட்ட காரணத்தால், தண்ணீரூற்றில் பனிமலையே உருவாகி இருக்கிறது. எத்தனை அழகாக இருக்கிறது.
அன்றொருநாள் காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் நடந்து சென்றேன். மகளுடன் சேர்ந்து நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மந்திரம் தந்திரமெல்லாம் இல்லை 🙂 . வேறொன்றுமில்லை. ஊரில் அதி குறைந்த வெப்பநிலை காரணமாக கடல்நீரேரிகளின் மேல் மட்ட நீரில் 15 cm ஐ கடின உறைபனியாகி விட்டிருக்கிறது. அதனால், நீரின் மேல் நடக்கலாம், ஓடலாம், நடனம் செய்யலாம். Skating, skiing, cycling எது வேண்டுமானாலும் செய்யலாம். மாநகர சபையினர் கடல்நீரேரியை சோதித்துப் பார்த்து, அதன்மேலாக நடப்பது பாதுகாப்பானது என்று அறிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஏதாவது நடந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்றும் சொல்லியிருக்கிறார்கள் . ஏரியின் சில இடங்கள் உறைபனியின் கடினத்தன்மை குறைந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அது எந்த எந்த இடமென்பது சரியாகப் புரியவில்லை
. கடல்நீரேரி முழுவதும் வெள்ளைக் கம்பளம் விரித்த பெரீஈஈஈய விளையாட்டு மைதானம்போன்று அழகாக இருக்கிறது.
வெண்பனி கொட்டிய நிலையில் மரங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. விளக்குக் கம்பங்கள், சுவர்கள், வீட்டுக் கூரைகள் எல்லாம் வெள்ளைத் தொப்பியணிந்து அழக்காக இருக்கின்றன.
நாங்கள்தான் இந்த குளிர் காலத்தை குறை சொல்கின்றோம். இந்தக் குளிர் காலத்தையும் மிகவும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் நோர்வே மக்கள் கடந்து செல்கிறார்கள். அன்றைக்கு கூட வேலை செய்பவர், தானும், மகளும் மலைக்குப் போய் பனிச்சறுக்கல் செய்யப் போவதாய்க் கூறி விடுமுறை எடுத்துப் போகின்றார். நேற்று இன்னொருவர், தனது கணவரும் சினேகிதர்களும், உறைபனியால் மூடியிருக்கும் குளங்களில் மீன் பிடிக்கப் போய் விட்டார்கள் என்கிறார். உறைபனியை துளைத்து, துவாரமிட்டு, அதனூடாக மீன் பிடிக்கும் கொக்கியை செலுத்தி, கீழே நீரில் உற்சாகமாக வளையவரும் மீன்களைப் பிடிக்கப் போகிறார்கள். அத்துடன் உறைபனியில் குகை செய்து, அதற்குள்ளே படுக்க வேறு போகின்றார்களாம்.
அட எங்கட வீட்டுல இருக்கிற 2 முயல்களுக்கு இந்த பனிநிலமை மிகவும் பிடித்திருக்குப் போல இருக்கு. மிகவும் உற்சாகத்துடன் பனியின் மேல் ஓடித் திரிகின்றன. சுரங்கம் அமைத்து ஒளித்து விளையாடுகின்றன. ஓய்வாக இருக்கும்போது கூட, குளிர் படாமல் கூட்டினுள் சென்று இருக்காமல் பனியின் மேலேயே உட்கார்ந்து கொள்கின்றன.
Bergen நகரம் ஏழு மலைகளால் சூழப்பட்ட அழகான நகரம். சுற்றி மலைகள் இருப்பதாலும், அதி குறைந்த வெப்பநிலை, தற்போதைய ஈரப்பதன் காரணமாகவும் மோட்டார் வண்டிகள் வெளிவிடும் புகை மேலெழுந்து செல்ல முடியாமல் சூழல் மாசடைந்து இருப்பதாகக் கூறி, மோட்டார் வண்டிகளை நகரினுள் ஓட்டி வருவதில் பல கட்டுப்பாடுகள் போட்டிருக்கிறார்கள். தொலைவில் உள்ள சிறிய ஊர்களில் மோட்டார் வண்டிகளை நிறுத்திவிட்டு, நகரினுள் செல்வதற்கு இலவச பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பேருந்து தரிப்பு நிலையத்தில் இரு வெளிநாட்டினர் (ஆசியா, ஆப்பிரிக்கா வைச் சேர்ந்த இருவர்) பேசிக் கொண்டார்கள். ஒருவர், மற்றவரிடம் சொன்னது “எங்கள் நாட்டில் இதனைவிட எத்தனையோ மடங்கு வளிமண்டல மாசு இருக்கிறது. இதற்குப் போய் ஏன் அலட்டிக் கொள்கிறார்கள்”. மக்களின்மேல் முழு அக்கறையுடன், சூழல் மாசைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் ஒரு நாட்டில் இருப்பதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
இத்தனை அழகுக்கும், திருப்திக்கும் நடுவில், இடை இடையே, ‘இன்னும் எத்தனை காலம்தான் வாழலாம் இந்த நாட்டிலே?’ என்ற கேள்வி எழுந்துள்ளது :(. காரணம் வேறொன்றுமில்லை. குளிர்க் கொடுமைதான். இந்த குளிர்காலமும், அதில் இருக்கும் இருளும், குளிரும் இல்லாவிட்டால், நோர்வே போன்ற நாட்டில் தாராளமாக எவ்வளவு காலமும் வாழலாம் என்பேன். ஆனால், குளிர்க் கொடுமை தாங்கவில்லை.
பேர்கன் நகரில் பல ஆண்டுகளாக இப்படி குளிர் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல குளிர். அன்று ஒருநாள் காலையில ‘அட உதில ரெண்டடிதானே’ என்றெண்ணி, வீட்டிலிருந்து garage க்கு கையில கையுறை போடாமல் போனேன். தவிர கையுறை போடமுடியாமல், கையில் ஒரு காயம் வேறு. ஆனால், கொஞ்ச நேரத்தில், கையெல்லாம் விறைச்சு, விரல் நுனியெல்லாம் வலிக்கத் தொடங்கி விட்டது :(. இன்னுமொருநாள் கையுறை போட்டிருந்தும் விரல் நுனியெல்லாம் நீலமாகி விட்டது. ‘என்ன தவறு செய்தோம் என்று இந்த தண்டனையோ’ என்று எண்ணத் தொடங்கி விட்டேன்.
அது மட்டுமா, பாதையில் நடந்து செல்லவே பயமாக இருக்கு. காரணம் உறைபனியால், பாதைகள் வழுக்குது. அன்றைக்கு ஒரு பெண் இப்படி வழுக்கி, பேருந்தின் கீழே விழ, ஓட்டுனர் அதை கவனிக்காமல் பேருந்தை எடுக்க, பெண் கீழேயே நசுங்கி இறந்து போனார். பேர்கன் மலைநாடாக இருப்பதால், வளைவுகள், நெளிவுகள் கொண்ட ஒடுங்கிய பாதைகள் வேறு.
என் குட்டித் தேவதையின் நாடு!
“அம்மா! நான் எனக்கு ஒரு country வைச்சிருக்கிறன்” என்று மகள் வந்து என்னிடம் சொன்னபோது, எனக்குச் சரியாகப் புரியவில்லை. பிறகு ‘என்ன அது’ என்று விளக்கமாகக் கேட்டபிறகுதான் புரிந்தது. அவள் தனக்கு பிடித்தமான வகையில் ஒரு நாட்டைக் கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கிறாள்.
அந்த நாடு ஒரு மழைத்துளி வடிவமாம். அழகாத்தான் இருக்கும். நாங்க இலங்கையை மாங்காய் வடிவம் என்று படித்தது நினைவுக்கு வந்தது. அதன் பெயர் ”தாய் மிலோ கனாய் ரோ’ (Thai Milo Canai Ro) வாம். ”என்னம்மா இப்படி ஒரு வாயில நுழையாத பெயராக்கிடக்கு? என்று நான் கேட்டேன். “அது Chinese மாதிரி ஒரு language. ஆனா Chinese இல்லை. அதான் அப்பிடிப் பேர்” என்று பதில் கிடைத்தது. அட, ஏதோ புரியாத மொழியில் (அவளுக்குமே தெரியாத மொழிதான், 🙂 ) அந்த நாட்டின் பெயரை எழுதி வேறு காட்டினாள். ஏதோ கோடுகோடா எழுதினாள். (இந்த இடுகையை எழுதிக் கொண்டிருந்தபோது, திடீரெனத் தோன்றியதால், அந்தப் பெயரை கூகிளின் மொழி மாற்றியில் போட்டுப் பார்த்தேன். இப்படி வந்திருக்கு 泰国米洛煎饼滚装 . 🙂 யாராவது சீனமொழி தெரிந்தவர்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லிட்டுப் போங்கப்பா).
சரி, அவளுடைய அந்த நாட்டின் பெயருக்கு அவள் கொடுத்த ஆங்கிலப் பெயர் The Dragen City. நானும் Thai Milo Canai Ro என்ற பெயர் எதை குறிக்கும் என்று தேடிப் பார்த்தேன். வேறு என்ன வேலையில்லாத வேலைதான் :). Thai என்பதை தேடியபோது, அது முதலாவதா, ஆங்கில விக்கிப்பீடியாவில் தாய்லாந்து பற்றின கட்டுரையில் கொண்டுபோய் விட்டது. அங்கே இப்படி Thai க்கு விளக்கம் கொடுத்திருக்கு.
The word Thai (ไทย) is not, as commonly believed, derived from the word Tai (ไท) meaning “freedom” in the Thai language; it is, however, the name of an ethnic group from the central plains (the Thai people).[citation needed] A famous Thai scholar argued that Tai (ไท) simply means “people” or “human being” since his investigation shows that in some rural areas the word “Tai” was used instead of the usual Thai word “khon” (คน) for people.[13] The phrase “Land of the free” is derived from Thai pride in the fact that Thailand is the only country in Southeast Asia never colonized by a European power.
பரவாயில்லை, என்னமோ தேடிப் போய், இன்றைக்கு புதுசா ஒரு விசயம் தெரிந்து கொண்டன். தென்கிழக்காசிய நாடுகளிலேயே காலனியாதிக்கத்துக்கு உட்படாத ஒரே நாடு தாய்லாந்தாம். ‘Thai’ என்பது ‘சுதந்திரம்’ என்பதைக் குறிக்குமாக இருந்தால், மகள் தன்ரை நாட்டுக்கு மிகப் பொருத்தமாத்தான் பெயர் வைச்சிருக்கிறாள் :).
அடுத்து Milo க்கு அவள் சொன்ன உச்சரிப்பு ‘மிலோ’. ஆனால் எனக்கு இதைப் பார்த்தால் நினைவுக்கு வருவது மைலோ. Chocolate கலந்த பால் மா. இலங்கையில இருக்கேக்கை அது குடிச்சிருக்கிறன். அதை தேடினால், அதுவும் அந்த பானம்பற்றி சொல்கிறது. மகளும் தன்னுடைய நாட்டில் கிடைக்கும் chocolate பற்றியும் சொன்னாள். அதுபற்றி கீழே வரும்.
அடுத்தது, Canai என்னெண்டு தேடினால், சிங்கப்பூர், மலேசியாவின் ஒரு வகை ரொட்டி உணவாம். அடுத்தது Ro வைத் தேடினால் என்னவோ முக்கியமில்லாமல் வந்தது. அதனால அவளுடைய நாட்டை அவள் விபரிச்ச விதத்துக்கு இப்ப போவம்.
அடடா, நான் எழுதியதில் ஒரு பிழை விட்டிட்டேனாம். ம்ம்ம். தன்னுடைய நாடு எப்படி என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறாள் :). Thai Milo Kanai Ro என்று எழுத வேண்டுமாம். எழுத்துப் பிழையில்லாம, சின்ன எழுத்து பெரிய எழுத்து வேறுபாட்டோட எழுத வேணுமாம் :). Kanai என்று தேடினால், Mika Kanai என்ற யப்பான் நாட்டு பாடகரைப் பற்றி வருகிறது.
அவளுடைய நாட்டுல அரசாங்கம் என்று பெரிதாக ஒன்றுமில்லையாம். ஏனெண்டால் ஆக்களெல்லாம் நல்ல சுதந்திரமா இருக்கினம். அரசாங்கத்தில இரண்டே இரண்டு பேர்தானாம் ஒன்று அவள். இன்னொரு ஆளை இப்பதான் தேடிக் கொண்டு இருக்கிறாளாம் *யாராவது அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அங்க எல்லாம் எல்லாருக்கும் சொந்தமாம்.
எல்லா பழங்களும் ஒரே மரத்தில காய்க்குமாம். தனித்தனி மரமெல்லாம் இல்லையாம். அங்க Chocolate மாதிரி வெள்ளை நிறத்தில ஒரு உணவு இருக்காம். அது இனிப்பாக இருந்தாலும், அதிகம் உண்டால், உடலுக்கு தீங்கு தரக்கூடிய சீனித்தன்மை இல்லையாம். அங்க பொதுவான இடங்களிலெல்லாம் மரக்கறி பயிரிட்டிருக்குமாம். யாரும் எங்கயிருந்தும் எடுத்துக் கொண்டு போகலாமாம். அதனால கடையில் மரக்கறி வாங்கத் தேவையில்லையாம். தனிய மீன், இறைச்சி வகைகள்தான் கடையில வாங்க வேணுமாம். அந்த நாட்டில அடிக்கடி உணவுத் திருவிழா நடக்குமாம்.
அங்க மின்சாரம் எடுக்க solar energy, geothermal energy, windmill, biomass தான் பாவிக்கிறாங்களாம். மோட்டார் வண்டிகளில எல்லாம் solar panels பூட்டி இருக்குமாம். அதுல இருந்து எடுக்கிற சக்தியிலதான் வண்டிகள் ஓட்டப்படுமாம்.
அங்க மரமெல்லாம் வெட்ட சட்டம் அனுமதிக்காதாம். அதால ஒருவரும் வெட்டுறதில்லையாம்.
நாட்டு தேசிய உடையை என்னவோ நிறைய சொல்லி விபரித்தாள். அது கொஞ்சம் யப்பான் உடையும், கொஞ்சம் இலங்கை உடையும் கலந்து இருக்குமாம்.
நாட்டின் காலநிலை, இலங்கையில் மாதிரி நிறையநாள் சூரியன் வருமாம். சில நாட்கள் மட்டும் மழை பெய்யுமாம். சில இடங்களில snow உம் இருக்குமாம். அப்பதானே snow விளையாட்டுகளும் விளையாடலாம்.
Currency பற்றியும் நிறைய விளக்கம் கொடுத்தாள். அந்த currency க்குப் பெயர்… (ம்ம்ம், இப்ப மறந்து போனன், பிறகு கேட்டு எழுதுறன்).
இப்படி இன்னும் என்னென்னவோ இரசிக்கும்படியான விசயங்கள் எல்லாம் நடக்குது அவளின்ரை நாட்டில.
நல்ல நாடுதான், இல்லையா?
அவள் பாடசாலையில் படிப்பதையும், தனக்குத் தெரிந்த சூழல் பாதுகாப்புத் தொடர்பான பல விடயங்களையும், தனது விருப்பங்களையும் ஒரு கலவையாக்கி, தனக்கென ஒரு நாட்டை கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது. இத்தகைய நாடு உண்மையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். 🙂
குட்டி இளவரசன்!
‘The Little Prince’ புத்தகம் வாசித்தேன். மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேணும் என்று சொல்லிவிட்டு, சும்மா இருக்காம, நான் வாசிக்கத் தொடங்கினதே பெரிய விசயம். கதை என்னவோ சிறுவர்களுக்கான கதை போல இருந்தாலும், மிகப் பெரிய விசயங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. பெரிய விசயங்களை மிகவும் எளிமையாக சொல்லியிருக்கு. சின்ன சின்னதாய் வரையப்பட்ட படங்களுடன் கதை அழகாக பயணிக்கிறது.
The little Prince கதையில, கதையைச் சொல்பவர், தான் 6 வயதில் ஒரு படம் வரைந்ததாகவும், அந்தப் படம் பெரியவர்களுக்குப் புரியவில்லை என்றும் சொல்லிவிட்டு, பெரியவர்களுக்கு எதுவும் இலகுவாக புரியாதென்றும், அவர்களுக்குப் புரியுற மாதிரி எதையும் செய்யுறது இலகுவான காரியமில்லை என்றும் சொல்கிறார். பெரியவர்களுக்கு புரிய வைக்கிறதென்றால், பெரிய விளக்கங்கள் எல்லாம் கொடுக்க வேணுமாம் :). மகள் சில விசயங்களை எனக்கு சொல்ல முயற்சித்துவிட்டு, “என்ன நான் சொல்லுறது உங்களுக்கு விளங்கேல்லையா” என்று பொறுமையிழந்து கேட்பதுதான் எனக்கு நினைவில் வந்தது.
ஆறு வயதில தான் வரைந்த படத்தை ஒருவரும் பொருட்படுத்தாமல் விட்டதால, தான் பெரிய ஒரு ஓவியராக வரும் ஆசையை, தனக்கு மிகப் பிடித்த தொழிலை தான் துறந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். பிறகு பெரியவர்களுக்குப் பிடித்த மாதிரி நான் ஒரு விமான ஓட்டியாக ஆகிவிட்டேன் என்கிறார். இந்த இடத்தில மகள் முதன் முதலில் வரைந்த படத்தை மிகவும் கவனமாக வைத்திருந்து, இப்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவளுடைய பாடசாலை வேலைக்காக, ‘Time line of my life’ செய்வதற்கு கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு முதலும் வரைந்திருந்தாலும் (அல்லது கிறுக்கியிருந்தாலும்), இன்னதுதான் என்று சொல்லி வரைந்த முதல் படங்கள் இவைதான்.
இது ஒரு மரமாம்.
இது ஒரு பெண்மணியின் முகமாம்.
அது மட்டுமில்லை, The Little Prince கதையில அவர் மேலும் சொல்கிறார், பெரியவர்களுக்கு எதையும் எண்களுடன் சேர்த்துத்தான் யோசிக்கத் தெரிகிறதாம். அதுக்கு ஒரு உதாரணமும் சொல்கிறார். ஒரு புதிய நண்பனைப் பற்றி பெரியவர்களிடம் சொன்னால், “அவனது குரல் எப்படி இருக்கும்? அவனுக்கு என்ன விளையாட்டுகள் பிடிக்கும்? அவன் வண்ணத்துப் பூச்சிகள் சேகரிக்கிறானா?” என்றெல்லாம் கேட்பதை விடுத்து, “அவனுக்கு எத்தனை வயது? அவனுக்கு எத்தனை சகோதரர்கள்? அவனது அப்பா எவ்வளவு உழைக்கிறார்?” என்று ஏதாவது எண்களுடன் தொடர்பாகவே பேசிகிறார்களாம். பலர் பேசும்போது இதை உண்மையிலேயே இலகுவாக அவதானிக்க முடியும். வெறும் எண்களையே அவர்கள் மனம் சிந்திக்கிறது. அப்படி பலரும் பேசுவதுடன் நின்று விடாமல், எண்களை நோக்கியே தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றார்கள். குழந்தைகள் உலகம் தனித்துவமானது. எத்தனை எளிமையானது. பெரியவர்களானதும் எப்படி நாமும் குழந்தைகளாக இருந்தோம் என்பது மறந்து போகிறது.
ஒருவர் எத்தனை பெரிய காரியத்தைச் செய்தாலும் சூழலுக்கேற்ற அவரது நடை, உடை, பாவனை முக்கியம் என்பதை, 1909 இல் B-612 என்ற சிறுகோளை கண்டுபிடித்த ஒரு துருக்கி வானியலாளரின் அறிக்கையை, அவர் துருக்கி ஆடையில் சென்று வெளியிட்டபோது முதலில் ஏற்றுக் கொள்ளாதவர்கள், பின்னர் நாகரீகமான உடையில் சென்று வெளியிட்டபோது, அதே அறிக்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்கிறார்.
கதையைச் சொல்பவர் விமான ஓட்டியாக இருக்கையில் ஒரு விபத்தில், யாருமற்ற ஒரு பாலைவனத்தில் தனியாக இருக்க வேண்டி வரும் சூழலில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே அவர் மிகச் சிறிய உருவத்தில் ஒரு குட்டி இளவரசனை சந்திப்பதாகவும், அந்தக் குட்டி இளவரசன் ஒரு குட்டியூண்டு கிரகத்தில் இருந்து வந்தவனாகவும், அந்த குட்டி இளவரசனும், கதை சொல்பவரும் சேர்ந்து செலவளிக்கும் நாட்களிலும், அந்த இளவரசன் சொல்லும் அனுபவங்களையும் வைத்தே கதையும் போகின்றது.
அந்த குட்டி இளவரசன் இவரிடம் ஆடு வரைந்து தரச் சொல்லிக் கேட்கிறார். முதலில் ஒவ்வொரு குறை சொல்லிய பின்னர், ஒரு பெட்டியை வரைந்து, அதனுள் ஆடு இருப்பதாகச் சொல்ல, அது இளவரசனுக்கு பிடித்துப் போவதுடன், புரியவும் செய்வது அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. பெரியவர்களுக்குப் போல் விளக்கம் கொடுக்கத் தேவையில்லாமல் இருப்பதுவே காரணம்.
அந்த குட்டி இளவரசன் கேள்விகளுக்கு சரியாக பதில் கொடுக்காவிட்டாலும், அவன் கூறும் விசயங்களில் இருந்து விமான ஓட்டி சிறிது சிறிதாய் அவனது கோளைப் பற்றியும், அவனது வாழ்க்கை பற்றியும் புரிந்து கொள்கிறார். குட்டி இளவரசன் ஒரு பூவை தனது இடத்தில் வளர்த்து வந்ததையும், அதனை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டதையும், ஆனால் அந்த பூ சொன்ன சில வார்த்தைகள் அவனது மனதை சிறிதாய் காயப்படுத்தியதையும் புரிந்து கொள்கிறார். ஆனாலும் அவர் வரைந்து கொடுக்கும் ஆடு ஒருவேளை தனது பூவை உணவாக எடுத்துக் கொள்ளுமோ என்று இளவரசன் பயப்படுகின்றான். அதனால் ஆட்டுக்கு வாய்க்கட்டு ஒன்றையும், அத்துடன் பூவைச் சுற்றி வேலியும் வரைவதன் மூலம் பூவை பாதுகாக்க உதவுவதாக விமான ஓட்டி இளவரசனுக்கு உறுதி அளிக்கிறார்.
அந்த குட்டி இளவரசன் பூமிக்கு வந்து இவரைச் சந்திக்க முன்னர் வெவ்வேறு கிரகங்களுக்குப் போய் வந்த அனுபவங்களில் பல்வேறுபட்ட மனிதர்களின் இயல்புகளை கதை காட்டுகின்றது.
முதலாவது கிரகத்தில், தன்னைத் தவிர வேறெவரும் இல்லாத கிரகத்தை ஆட்சி செய்ய நினைக்கும் ஒரு அரசன். அரசனின் கட்டளைகள் விசித்திரமானவை. ஒருவரால் எதை செய்ய முடியுமோ, அதை மட்டுமே கட்டளையாகப் பிறப்பிக்கும் அபூர்வ, புரிந்துணர்வுள்ள அரசன். இந்த குட்டி இளவரசன் எதை செய்ய விருப்பமில்லை என்றாலும், அதுபற்றிய தனது கட்டளையை மீளப் பெறும் அந்த அரசன், குட்டி இளவரசன் செய்ய விரும்புவதை மட்டுமே கட்டளையாக சொல்கிறான். அந்த அரசன் சொல்லும் முக்கியமான ஒரு விசயம் ‘எவருக்கும் இன்னொருவரை judge பண்ணுவதை விட தன்னைத்தானே judge பண்ணுவதுதான் மிகவும் கடினமானது. எப்போது ஒருவனால் தன்னைத்தானே சரியாக எடைபோட /சீர்தூக்கிப் பார்க்க முடிகிறதோ, அப்போதே அவன் ஒரு உண்மையான அறிவுள்ள/விவேகமுள்ள மனிதனாகிறான்’. ஆனால் அரசனுக்கு தனது அதிகாரத்தை மற்றவர்மேல் செலுத்துவதில் அத்தனை விருப்பம். சிலருக்கு தன்னுடைய அதிகாரத்துக்கு கீழ் மற்றவர் இருப்பதில் அத்தனை விருப்பம். ஏன் குடும்ப அமைப்புக்களிலும் இதை நாம் பார்க்க முடிகிறதே. வெறும் அதிகாரம் செலுத்த உரிமை கொடுத்தாலே அவர்கள் சமாதானமாகி இருப்பார்கள். அந்தக் குட்டி இளவரசன் அந்த கிரகத்திலிருந்து புறப்பட ஆயத்தமாகும்போது, அரசன் அவனைத் தடுக்கிறான். மறுக்கும் இளவரசனிடம் “உன்னை இந்தக் கிரகத்தின் Ambassador ஆக்குகிறேன் என்கிறான். குட்டி இளவரசன் நினைக்கிறான் ‘இந்த பெரியவர்களே விசித்திரமானவர்கள்தான்’.
அகம்பாவம் அல்லது போலித் தற்பெருமை கொண்ட ஒரு மனிதனை அடுத்த கிரகத்தில் இளவரசன் சந்திக்கிறான். தன்னைப்பற்றி மற்றவர் புகழ்பாடுவது தவிர வேறெதையும் கேட்க அவனுக்கு ஆர்வமில்லை. இதுக்கு உதாரணமாக தற்போதைய பல அரசியல் தலைவர்கள் மனதில் வந்து போனார்கள். அந்த தற்பெருமைக்காரனைப் பார்த்து இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் நிச்சயமாய் விநோதமானவர்கள்தான்’.
அடுத்த கிரகத்தில் ஒரு குடிகாரன். அவன் ஏன் குடிக்கிறான் என்று கேட்டால், தான் குடிப்பதையிட்டு வருந்துவதாயும், அந்த கவலையை மறக்க குடிப்பதாயும் கூறுகிறான். சிலபேர் குடிப்பதற்காகவே தமக்கு கவலையை /காரணத்தை உருவாக்கிக் கொள்வதை கண்டிருக்கிறேன். ஊரில் வாழ்ந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் ஒரு குடிகாரன். தினமும் குடித்து விட்டு வந்து ஏதாவது ஒரு குறை கண்டு பிடித்து, மனைவிக்கு அடிப்பது. மனைவி தன் பெற்றோரிடம் போய் விட்டால், மறுநாள் அந்தக் கவலையில் குடிப்பதாகச் சொல்லி குடிப்பது. அல்லது தங்கைமாரிடம் ‘உங்களாலதான் அவள் போய்ட்டாள்’ என்று சொல்லி அடிப்பது. ‘சே என்ன மனிதன் இவன்’ என்று வெறுப்பாக இருக்கும். கவலையில் குடிக்கிறேன் என்பவர்களிடம் கேட்கத் தோன்றும், ‘குடித்த பின்னர் கவலையில்லாமல் இருக்கிறீர்களா’ என்று. குடித்துவிட்டு கவலையில் அரற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள். அந்தக் கிரகத்தை விட்டு வெளியேறும்போது, இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் சந்தேகமேயில்லாமல் மிக மிக விசித்திரமானவர்கள்தான்’.
அதற்கடுத்து குட்டி இளவரசன் செல்லும் கிரகத்தில் சந்திப்பது வணிகர் ஒருவரை. குட்டி இளவரசன் வந்ததைக் கூட நிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல், ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறார். அவர் நட்சத்திரங்கள் தனக்கு சொந்தமானவை என்றும் அவற்றை எந்நேரமும் எண்ணிக் கொண்டிருப்பதிலுமே பொழுதை கழிக்கிறார். குட்டி இளவரசனுடன் பேசக் கூட நேரமில்லாமல் நட்சத்திரம் எண்ணுகிறார். அவருக்கு சொந்தமான அந்த நட்சத்திரங்களை வைத்து அவர் என்ன செய்வார் என்றால் மேலும் நட்சத்திரங்கள் வாங்குவாராம். அவர் தனக்கு ‘முடிவுகளை அல்லது பலன்களைப் பற்றி (matters of consequence) மட்டுமே அக்கறை’ என்கிறார். பல பணம் சேர்க்க விரும்பும் பணக்காரர்கள் கதையும் இதுதானே? ஓடி ஓடி கோடிக்கணக்கில் சேர்க்கிறார்கள். பேசக் கூட நேரமில்லாமல் அப்படி சேர்ப்பதில்தான் என்ன பலன்? இளவரசன் அவரிடம் ”அதெப்படி நட்சத்திரங்கள் உனக்கு சொந்தமாகும்?” என்று கேட்பதற்கு அவர் கூறும் பதில் “யாருக்கும் சொந்தமில்லாத வைரத்தை நீ கண்டெடுத்தால், அது உனக்கு சொந்தமாகும். யாருக்கும் சொந்தமற்ற தீவை நீ கண்டு பிடித்தால் அது உனக்குச் சொந்தமாகும். எவருக்கும் வராத யோசனை உனக்கு வந்தால், அதற்கான உரிமை உனக்குத்தான். அதேபோல் நட்சத்திரங்களை உரிமையாக்கும் எண்ணம் எனக்கே முதலில் வந்ததால், நட்சத்திரங்கள் எனக்கே சொந்தமானவை’. எமக்கு பிடித்தவற்றை நமக்கே சொந்தமாக்கிக் கொள்ளவே விரும்புகிறோம். அங்கிருந்து புறப்படும் இளவரசன் தனக்குள் ‘பெரியவர்கள் மிக நிச்சயமாய் அசாதாரணமானவர்கள்தான்’ என்று நினைத்தபடி போகின்றான்.
இன்னொரு சிறுகோளில், கடமையே கண்ணாக இருக்கும் ஒரு விளக்குப் போட்டு அணைப்பவரை சந்திக்கிறான் குட்டி இளவரசன். ஆரம்பத்தில் அந்தக் கோள் மெதுவாகச் சுற்றியபோது இரவில் விளக்குப் போட்டு, காலையில் அணைத்துக் கொண்டிருந்த அவர், அந்தக் கோள் மிக விரைவாக சுற்ற ஆரம்பித்த பின்னர் தொடர்ந்து விளக்குப் போடுவதும், அணைப்பதுமாகவே இருக்கிறார். அந்த கோள் ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை முழுச்சுற்றை செய்வதால், அவருக்கு ஓய்வெடுக்கவே நேரமற்றுப் போகிறது. குட்டி இளவரசனுக்கு அவனே அபத்தமில்லாதவனாகத் தெரிகின்றான். காரணம் அவன் தன்னைப்பற்றி மட்டும் எண்ணாமல் வேறு விடயங்களுக்கும் முக்கியத்துவம் தருகின்றான். எனக்கும்தான் அவனை மிகவும் பிடித்துப் போனது :). குட்டி இளவரசனுக்கு அவனுடன் நட்பாகி அங்கேயே தங்கி விட விருப்பமிருந்தாலும், அந்த கோள் மிகச் சிறியதாக, இரண்டு பேருக்கு இடமற்று இருப்பதால், தனது பயணத்தை தொடர்கின்றான்.
அதற்கும் அடுத்த கிரகத்தில் அவன் சந்தித்தது ஒரு புவியியல் ஆராய்ச்சியாளர். அவர் தனக்கு நிறைய விடயங்கள் தெரியும் என்று நம்புகிறார். ஆனால் ஒரே இடத்தில் இருந்தபடியே எல்லாவற்றையும் செய்யப் பார்க்கிறார். மற்றவர்களின் உழைப்பில் தான் பெயரைப் பெற்றுச் செல்ல விரும்பும் மனிதர்களை நினைவு படுத்தினார். சில ஆராய்ச்சியாளர்களும் இப்படி இருக்கிறார்கள். தமக்கு கீழ் வரும் மாணவர்களின் உழைப்பில் தாம் பெயரைத் தட்டிச் செல்வார்கள். சில அமைப்புக்கள், நிறுவனங்களின் பெரிய பொறுப்பில் இருப்பவர்களும் தாம் எதையுமே செய்யாமல், கீழ் உள்ளவர்களின் உழைப்பை தமதாக பிரகடனப்படுத்திக் கொள்வார்கள். அந்த புவியியலாளரே குட்டி இளவரசனுக்கு பூமிக்குப் போகும்படி அறிவுரை சொல்கின்றார்.
இறுதியில் பூமிக்கு வரும் அந்தக் குட்டி இளவரசன் முதலில் ஒரு பாம்பை சந்திக்கிறான். பாம்பிடம் மனிதர்கள் எங்கே என்று விசாரிக்க, பாம்பு அது பாலைவனமென்றும், மக்கள் அங்கே இல்லை என்றும், பூமி மிகப் பெரியது என்றும் கூறுகின்றது. அதன் பின்னர் ஒரு பூக்கன்றை கண்டு ‘மனிதர்கள் எங்கே?’ என்று விசாரிக்கிறான். அதற்கு பூக்கன்று, மனித இனம் அழிந்துகொண்டு போகும் இனமாக கூறுகின்றது. ஒருவேளை எதிர்காலத்தை கற்பனையில் கண்டு எழுதியிருப்பாரோ? மனிதர்களுக்கு வேர்கள் இல்லாமையால், அவர்கள் காற்றோடு எடுத்துச் சொல்லப்படுவதாகவும், அதனால் அவர்களது வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாய் இருப்பதாகவும் அந்த பூக்கன்று சொல்கின்றது.
பின்னர் ஒரு மலையில் ஏறும் அந்தக் குட்டி இளவரசனுக்கு அவன் சொல்லும் வார்த்தைகளே எதிரொலியாக கேட்கின்றது. அப்போது அந்தக் குட்டி இளவரசன் ‘இந்தப் பூமி மிகவும் வரண்டதாகவும், அங்குள்ளவர்கள் கற்பனையற்றவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று நினைத்துக் கொள்கின்றான். பிறகு நெடுந்தூரம் நடந்து சென்று, குட்டி இளவரசன் ஒரு பெரிய ரோசாப்பூத் தோட்டத்தை அடைகின்றான். அப்போது தன்னுடைய கிரகத்தில் தனியாகத் தான் விட்டு வந்த பூவை நினைக்கிறான். அந்தப் பூவோ தான் மட்டுமே இந்த முழு பிரபஞ்சத்திலும் இந்த வகையிலுள்ள ஒரே ஒரு பூ எனக் கூறியிருந்தது. அவனும் தன்னிடம் தனித்துவமான ஒரு ஒரு பொருள் இருப்பதாக பெருமை கொண்டிருந்ததையும், ஆனால் அது ஒரு பொதுவான ரோசாதான் என்றும் எண்ணிக் கொள்கின்றான். அதேவேளை அந்த ரோசாவை தனியே விட்டு வந்ததை எண்ணி கவலையும் கொள்கின்றான்.
அதன் பின்னர் அவன் சந்திக்கும் ஒரு நரி அவனுக்கு பெரிய தத்துவத்தையே சொல்லிக் கொடுக்கிறது. நரி அவனை, தன்னுடன் நட்பாகும்படியும், மனிதர்கள் எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையை இழந்து விட்டார்கள் என்றும், தயார் செய்யப்படும் பொருட்களை (ready-made) கடைகளில் வாங்குகின்றார்கள், ஆனால் நட்பை வாங்கும் கடைகள் இல்லாமையால் நட்பை மறந்து விட்டதாகவும் கூறுகின்றது. நட்பாவதற்கு எதையும் பேசாமல் இருப்பதே நல்லது என்றும், வார்த்தைகளே மனவேற்றுமைகளுக்கு காரணம் என்றும் அந்த நரி சொல்கின்றது. ஆனால் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாய் அண்மித்து வருவதனால் நட்பாகலாம் என்று நரி சொல்வது போலவே, குட்டி இளவரசன் நரியுடன் நட்பாகின்றான். ஆனால் குட்டி இளவரசன் போக வேண்டிய நேரம் வரும்போது நரி நட்பை விட்டுப் பிரிவதை எண்ணி கவலை கொள்கின்றது. அப்போது, குட்டி இளவரசன் ”நான் உனக்கு எந்த கெடுதலும் செய்ய நினைக்கவில்லை. ஆனால், நீதான் என்னை நட்பு கொள்ளச் சொன்னாய்” என்று நரியிடம் சொல்கின்றான். நரியோ “ஆம், அது அப்படித்தான். நீ இப்போது அந்த ரோசாத் தோட்டத்துக்கு போய் வா” என்று சொல்கிறது. அங்கே போனபோதுதான் அவனுக்குப் புரிகிறது, ‘அங்கே ஆயிரக் கணக்கில் ரோசாக்கள் இருந்தாலும், அவனது ரோசா தனித்துவமானதுதான். காரணம் அந்த ரோசாமேல் அவன் கொண்டிருக்கும் பாசம். நரியிடம் நட்பு கொண்டதாலேயே, பார்க்கும் எல்லா நரிகளைப் போல அல்லாமல், குறிப்பிட்ட அந்த நரி தனித்துவமானது ஆகியதைப் போல’. அவன் மீண்டும் நரியிடம் வந்தபோது நரி ஒரு இரகசியத்தை சொல்வதாக சொல்கின்றது “இதயத்தால் மட்டுமே சரியாகப் பார்க்க முடியும். கண்களுக்கு முக்கியமானவை தெரியாது. மனிதர்கள் இந்த உண்மையை மறந்து விட்டார்கள். நீ உனது ரோசாவுக்காக செலவு செய்த நேரமே, அந்த ரோசா உனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்லும். உனக்கு அந்த ரோசாவில் உள்ள அன்பினால், நீ அந்த ரோசாவுக்கு பொறுப்புள்ளவனாகின்றாய்”. நாங்கள் யார்மேல் உண்மையான அன்பைச் செலுத்துகிறோமோ, அவர்களே எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்களாகவும், தனித்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
பின்னர் ஒரு தொடர்வண்டி நிலையத்தை அடையும் அந்தக் குட்டி இளவரசன், ஒரு தொடர்வண்டியில் ஏராளமான மனிதர்கள் போவதைக் கண்டு ”இவர்கள் எங்கே அவசரமாகப் போகின்றார்கள்?” என்று அங்கிருப்பவரிடம் கேட்க, அவர் ”அது யாருக்கும் தெரியாது” என்று சொல்கின்றார். பின்னர் மறு புறமிருந்து ஒரு தொடர் வண்டி வர, ”போனவர்கள் ஏன் திரும்பி வருகின்றார்கள்?” என்று கேட்க, ”இவர்கள் வேறு மனிதர்கள்” என்று பதில் கிடைக்கிறது. ”ஏனப்படி” என்றதற்கு, “அவர்கள் தாம் இருக்குமிடத்தில் திருப்தி அடைவதில்லை” என்கின்றார். ‘இக்கரை மாட்டுக்கு, அக்கரை பச்சை’ :). அப்போது குட்டி இளவரசன் நினைக்கிறான், ‘குழந்தைகளுக்கு மட்டுமே தமக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும்’.
ஒரு வியாபாரி, தாகம் எடுப்பதைத் தவிர்க்க குழிகைகள் விற்பதைக் காண்கின்றான். ஏனிப்படி என்று கேட்டால், ”தாகம் தீர்க்க எடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி அந்த நேரத்தில் விரும்பியதைச் செய்யலாம்” என்று வியாபாரி சொல்கின்றார். அப்போது அந்த குட்டி இளவரசன் நினைக்கிறான், அப்படி தனக்கு அந்த நேரம் மிச்சப்படுமானால், ‘அந்த நேரத்தில் நன்னீர் கிடைக்கும் இடத்தை நோக்கி அமைதியாக நடந்து செல்லலாம்’ என்று. நாம் சில சமயம் (அல்லது பல சமயம்) நேரத்தை மிச்சம் பிடிப்பதற்கு ஏதேதோ செய்வோம். ஆனால் அந்த மிச்சம் பிடித்த நேரத்தில் உருப்படியாக எதையும் செய்வதில்லை.
இந்த அனுபவங்களைக் கேட்ட விமான ஓட்டி (கதையை சொல்ல ஆரம்பித்தவர்), குட்டி இளவரசனின் அனுபவங்கள் சுவாரசியமானவை என்கிறார். அந்த அனுபவங்கள் மூலம் நிறைய உண்மைகளை அந்த குட்டி இளவரசன் அவருக்குப் புரிய வைக்கிறான். சில சமயம் எல்லோரையும் ஒரே விதமாகப் பார்த்து, ஒரே விதமாக நட்புகொள்வது நல்லதுதான். இந்த கருத்து வந்த இடத்தை வாசித்தபோது என் செல்ல குட்டி மகள் ஒருநாள் என்னிடம் வந்து “அம்மா, ஒரு best friend இருக்கிறது நல்லதா? அல்லது எல்லாரோடயும் ஒரே மாதிரி friends ஆ இருக்கிறது நல்லதா?” என்று கேட்டது நினைவில் வந்தது. நான் அதற்கு பல விதமாய் யோசித்தேன். அதற்கு அவளே சொன்னாள் “நான் நினைக்கிறன் எல்லாரோடயும் friends ஆ ஒரே மாதிரி இருக்கிறதுதான் நல்லது. ஏனெண்டா நாங்கள் ஒராளோட மட்டும் best friend ஆ இருந்தால், அவ எங்கயாவது போய்டால், கவலையா இருக்கும்தானே?”. நல்ல ஆழமாத்தான் யோசிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் எல்லோரிடமும், எல்லாத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாதே? அதனால் இரண்டும்தான் சரியாகத் தெரிகிறது. என்னுடைய ஒரு நெருங்கிய தோழியை விட்டுப் பிரிந்து கவலைப்பட வேண்டி வந்த ஒரு தருணத்தில் நான் எடுத்த முடிவும் எனது மகளுடையதுதான் என்பதும் கூடவே நினைவு வந்தது. அதற்குப் பின்னர் எவருடனும் நெருங்கி அன்பு செலுத்துவதில்லை என்பதுதான் அந்த முடிவு. ஆனால் அதை என்னால் சரி வர செய்ய முடியவில்லை என்பதும் உண்மையே.
[சரி என்ரை கதையை விட்டுட்டு குட்டி இளவரசனின் கதையின் முடிவுக்கு வாறன் :).]
அந்தக் குட்டி இளவரசனை காண முடியாமல் போன ஒரு காலைப் பொழுதில் அந்த விமான ஓட்டி, அவன் தனது கோளுக்கு திரும்பிப் போய், தனது ரோசாவை கவனமாகப் பார்த்துக் கொள்வான் என்று நம்புவதாக கதையை முடிக்கிறார்.
Matters of importance must be given the priority over the matters of consequence.
எனக்கு கதை மிகவும் பிடித்தது. கதை இணையத்தில் கிடைக்கிறது. The Little Prince (pdf file) ஐத் தரவிறக்கிப் படித்துப் பாருங்களேன்!