Risk taker!

Abseiling என்ற வார்த்தை அண்மைக்காலம்வரை எனக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் மகள் abseiling செய்துவிட்டு வந்தபோதுதான் அந்தச் சொல்லே எனக்கு அறிமுகமானது :). Abseiling படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் Paraseiling செய்தபோது எடுத்த படங்கள் உள்ளன. 🙂

கடந்துபோன ஒரு வருடத்திற்குள், சில adventure activities குடும்பத்துடன் செய்திருந்தோம். கடந்த டிசம்பரில் துபாய் போயிருந்த நேரம் Hot air baloon ride, Sand dune drive என்பனவும், பெப்ரவரியில் Florida போயிருந்தபோது Parasailing செய்தோம். Orlando வில் Disney world இன் Epcot centre theme park இலும் பல துணிச்சலான விளையாட்டுக்கள் செய்திருந்தோம்.

ஒரு Risk taker உடைய அம்மாவாக இருப்பதில் பெருமைதான். நானும் படித்துக்கொண்டிருந்த காலத்தில் risk taker என்று பெயர் பெற்றிருந்தேன் :).

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விஜேவர்த்தன எனப்படும் இந்த விடுதியில் சிலகாலம் இருந்தோம். விடுதி அறைகள் இரு புறமும் அமைந்திருக்க, அறைகளின் கதவுகள் நடுவில் ஒரு corridor இல் திறக்கும். வெளிப்புறமாக ஜன்னல்கள் இருக்கும். ஜன்னல்களுக்குக் கீழாக ஒரு சிறிய கட்டு மட்டுமே இருக்கும். யாராவது திறப்பை உள்ளே வைத்துவிட்டு, அறைக்குள் செல்ல முடியாமல் வெளியே நின்று தவித்துக் கொண்டிருந்தால் நான் உதவிக்குப் போவேன். அல்லது என்னைத் தேடி வந்து அழைத்துச் செல்வார்கள் :). இரண்டாம், மூன்றாம், அல்லது நான்காம் மாடிகளிலுள்ள அறையில் யாருக்காவது இவ்வாறு நிகழ்ந்தால், குறிப்பிட்ட அந்த அறைக்கான ஜன்னல் திறந்திருந்தால், பக்கத்து அறைக்குள் சென்றோ, அல்லது அதற்கு அடுத்த அறைக்குள் சென்றோ, அந்த அறையின் ஜன்னல் வழியாக கட்டடத்தின் வெளியே வந்து, அந்தச் சிறிய கட்டின்மேல் காலை வைத்து, சுவரைப் பிடித்தபடியே நடந்து, பூட்டப்பட்ட அறையின் திறந்திருக்கும் ஜன்னலூடாக உள்ளே குதித்துச் சென்று திறப்பை எடுத்துக் கொண்டு அந்த அறையிலிருந்து கதவைத் திறந்து வெளியே வருவேன். இதனை ஒரு தடவை அக்கா கண்டுவிட்டு நன்றாகத் திட்டினார்.

இந்தப் பாலம் பேராதனை, சரசவி உயன புகையிரத நிலையங்களுக்கு இடையிலான இரயில் பாதையில் இருக்கும், மகாவலி கங்கைக்கு மேலாகச் செல்லும் ஒரு பாலம். இந்தப் பாலத்தின் இரயில் பாதை கீழே மூடப்படாமல் இருக்கும். ஆனால், இதில் வலப்பக்கமாக நடந்து செல்லக் கூடியதாக ஒரு சிறிய பாதை அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் நான் அதில் நடக்காமல் நடுவில் இரயில் பாதையிலேயே நடப்பேன். முழுத்தூரமும் அப்படி நடப்பதில்லை :). அதுவும், சிலசமயம், குறுக்காக இருக்கும் பலகைகளில் காலை வைக்காமல் தண்டவாளத்தின் மேல் நடந்து செல்வேன். கால் வழுக்கி விழுந்தால் கீழே மகாவலி கங்கைக்குள் போக வேண்டியும் வரலாம்.  கூட வருவோர்களிடம் திட்டு வாங்கினாலும், அப்படி செய்வதில் ஒரு விருப்பம் இருந்தது.

ஆனால் இங்கே பனிக்காலத்தில் வரும் இந்தப் பனியுறைந்த வழுக்குப் பாதை என்னவோ பயம் கொள்ள வைக்கின்றது :).

மகளின் பிறந்தநாள் வாழ்த்து!

Posted On ஓகஸ்ட் 28, 2012

Filed under குழந்தை, நோர்வே

Comments Dropped leave a response

என் செல்லக்குட்டியிடம் இருந்து எனக்கு இன்று கிடைத்த பிறந்தநாள் வாழ்த்து.

Youtube link அனுப்பினாள். அது இங்கே>

http://www.youtube.com/watch?v=OGLAa_PgYaI

கோமாளிகள் நாள்!

Posted On பிப்ரவரி 25, 2010

Filed under குழந்தை, நோர்வே

Comments Dropped 2 responses

எப்பவாவது பாடசாலையில் இப்படி ஒருநாள் உங்களுக்கு கொண்டாடப்பட்டதா? எனக்கு இல்லவே இல்லை. அப்படி ஏதாவது இருந்திருக்கக் கூடாதான்னு இப்ப தோணுது. 🙂

வேற ஒன்றுமில்லை. மகளுடைய பாடசாலையில இப்படி இருநாள் இன்றைக்கு. இந்த கிழமை முழுமைக்குமே ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரி. இது அவர்களுடைய spirit week ஆம் :).

1. திங்கள் – pyjama day

இரவு உடையில் குழந்தைகள் எல்லோரும் பாடசாலைக்கு சென்றார்கள்.

2. செவ்வாய் – gym games day

முழுநாளும் விளையாட்டு. மகளுக்கு முதலாம் வகுப்பு பிள்ளைகளை நெறிப்படுத்தும் வேலை கொடுக்கப்பட்டதாம். அவர்களுக்கு ஒரே விசயத்தை திருப்பி திருப்பி சொல்லி அலுத்துப்போச்சாம். (ரொம்பத்தான் அலட்டிக்கிறா).

2. புதன் – Skiing day

இதற்கென்று தனியார் போக்கு வரத்து ஒழுங்கு செய்து பெரிய மலையொன்றுக்கு தொலைதூரம் போய் வந்தார்கள். தான் 10 தடவைக்கு மேல் விழுந்து எழும்பியதை, பெரிய சாதனையாக, மிகவும் சந்தோசத்துடன் சொல்லி மகிழ்ந்தாள் :). ஆனால், இன்றைக்குத்தான் கொஞ்சம் கழுத்து வலிப்பதாக கூறுகின்றாள் :(. விரைவில் குணமாகிவிடும் என்று நம்புகின்றேன்.

3. வியாழன் – crazy day

அப்பாவுடைய T-shirt ஐ எடுத்து அணிந்து கொண்டாள். அப்பாவிடம் ஒரு tie வாங்கி, அது சுற்றப்பட்டிருந்த polythene cover உடன் சேர்த்து t-shirt இல் குற்றிக் கொண்டாள். தலைமுடியை இரண்டாகப் பிரித்து, ஒரு பக்கம் பின்னாமலும், ஒரு பக்கம் பின்னியும் விடச் சொல்லிக் கேட்டாள். போட்டு விட்டேன். உடைக்கு சம்பந்தமேயில்லாத ஒரு sweater எடுத்து அணிந்து கொண்டாள்.  The crazy girl was ready then :). Crazy parade 9 மணிக்கு தொடங்குதாம் என்று சொல்லி அவசரமாக ஓடுகிறாள்.

இப்படியெல்லாம் நாங்க படிக்கும்போது எதுவும் இல்லாம போச்சே என்று கவலையா இருக்கு. நல்லாவே குழந்தைகளை கவனிக்கிறாங்க 🙂

என் செல்லக் குட்டிம்மா!

Posted On பிப்ரவரி 5, 2010

Filed under குழந்தை, நோர்வே

Comments Dropped 10 responses

நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை.

அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 நிமிடத்தின் பின்னர் அவள் வெளியே வந்தபின்னர், நான் எதையோ எடுக்க உள்ளே போனேன். அங்கே கிடைத்த ஒரு குட்டி தாளில், அங்கே கிடைத்த ஒரு பேனாவை எடுத்து, ‘I love you, I love you’ என்று எழுதி எனது புத்தகம் ஒன்றின் மேல் வைத்திருந்தாள்.

பின்னர் இருவரும் வெளியே போனோம். ஒரு மணி நேரத்தின் பின்னர், வீடு திரும்பும்போது ஆறுதலாய், நடந்த விடயங்களைப்பற்றி அவளிடம் சமாதானமாகப் பேசினேன். பின்னர் வீடு வந்து குளித்து, சாப்பிட்டு படுக்கைக்குப் போனதும், அவசரமாய் ஒரு தாள் எடுத்து எழுதினாள். ”அப்படி என்ன எழுதுறீங்க?” என்று கேட்டேன். பதிலில்லை. எனக்கு காட்டாமல் ஒளித்து ஒளித்து எழுதினாள். எழுதி முடித்ததும் என்னிடமே கொண்டு வந்து தந்தாள்.

அதில் சின்னதாய் ஒரு கடிதம்.

To my dear mother,

You always love me and kiss me,

But will never, ever miss me.

You are nice and pretty,

and you are also witty.

You are posh and kind,

And you have good thought in your mind,

I do not know what to write,

But one thing

WE SHOULD NOT FIGHT

By: Amma’s favourite Kutty

அன்பாக அணைத்து முத்தமிட்டேன். “நான் அப்பிடி செய்ததுக்கு Sorry அம்மா” என்று சொல்லி முத்தம் தந்து விட்டு, அந்தக் கடிதத்தை கடைசிவரை தொலைக்காமல் வைத்திருக்க வேண்டும் என்று அன்பாய் உத்தரவிட்டுவிட்டு, படுத்து, உடனேயே தூங்கி விட்டாள் என் செல்ல மகள்.

ஆசிரியர் மன்னிப்பு கேட்டார்!

Posted On திசெம்பர் 16, 2009

Filed under குழந்தை, சமூகம், நோர்வே

Comments Dropped 7 responses

மகளின் பாடசாலையில் ஆசிரியர்களுடன் பெற்றோர் கலந்துரையாடுவதற்கென ஒதுக்கப்பட்ட நாட்கள் வந்தன. மகளின் 4 ஆசிரியர்களுடன் நேரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் மகளைப் பற்றி நன்றாகக் கூறக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

நம் குழந்தைகளைப் பற்றி எமக்கு தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் சொல்லக் கேட்கும்போது ஒரு தனி மகிழ்ச்சிதான். உங்கள் மகள் பாடம் நன்றாகச் செய்கின்றாள், ஏனைய குழந்தைகளுடன் மிகவும் அன்பாகவும், எல்லார்மேலும் அக்கறையாகவும் நடந்து கொள்கிறாள், உங்கள் மகள் நல்ல தைரியசாலி என்று கேட்க யாருக்குத்தான் மகிழ்ச்சி இல்லாமல் போகும்?

ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய தலைப்பில் எல்லாப் பாடங்களையும் தொடர்புபடுத்தி சொல்லித் தருகிறார்கள். இந்த தடவை வானியல்பற்றி, மகளுக்கு மிகவும் பிடித்தமான பகுதி. அவர்களுக்கு இருக்கும் பாடங்களின் பெயர்கள் நமக்கு இருந்தவை போலில்லை :). ஒரு பாடம் IT & DT (Information Technolgy and Design Technology).

முதலில் சந்தித்தது IT & DT ஆசிரியை. கண்டதுமே, அவர் பாடத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல், ”போன ஆண்டு நாடகக் குழுவில் உங்கள் மகள் மிக நன்றாகச் செய்தாள். இந்த முறையும் அவள் கட்டாயம் வர வேண்டும்” என்று கூறி, பழைய படங்கள் எல்லாம் காட்டினார்.

கடைசியில் சந்தித்தது மகளின் ஆங்கில ஆசிரியை. அவரே வகுப்பாசிரியரும் என்பதால் நீண்ட நேரம் பேச்சு ஓடியது. அவருக்கு பேசுவது கைவந்த கலைபோலும். நிறைய பேசினார். தனது வீட்டுக் கதை, தனது மகன்களின் கதை, மகன் புகைப்பிடிக்க ஆரம்பித்த கதை, அதை நிறுத்தியது எப்படி என்ற கதை என்று எல்லாம் பேசினார் :). வகுப்பிலும் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருப்பாரோ என்ற எண்ணம் உள்ளே ஓடியது. ஆனால் அவர் பேசுவது அனைத்தும் மிகவும் சுவாரசியமாகவே இருந்தது. மகள் வகுப்பில் எப்படி இருக்கிறாள் என்பதுபற்றிய பேச்சு வந்தபோது, ‘சில சமயங்களில், வகுப்பில் அவதானம் குறைகின்றது’ என்று கூறி, ‘ஆனால் அதில் ஒரு பகுதி தவறு என்னுடையதுதான். நான்தான் அதைச் சரி செய்ய வேண்டும்’ என்றார். இப்படி எங்கள் நாட்டில் எந்த ஒரு ஆசிரியராவது சொல்வாரா தெரியவில்லை. மேலும் மகளின் ‘helping mind and caring personality’ தான் மற்றைய காரணம் என்றார். யாராவது உதவி கேட்டால், ‘என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்றோ, ‘இப்போது சொல்ல முடியாது’ என்றோ உங்கள் மகளால் சொல்லவே முடியாது. அதனால் சில சமயம் வகுப்பில் மற்றவர்களுக்கு உதவப் போவதால், அவளுடைய அவதானம் குறைகின்றது என்றார்.

அப்போது மகளும் கூடவே இருந்தாள். திடீரென்று மகளிடம், ”என்னை மன்னித்து விடு. சில சமயம் சரியாக யோசிக்காமல் உன்மேல் தவறு சொல்லி விடுகிறேன்” என்றார். எனக்கோ ஆச்சரியம். நம் நாட்டில் இப்படி குழந்தைகளிடம், எந்த ஆசிரியராவது மன்னிப்பு கேட்பார்களா என்று எண்ணிப் பார்த்தேன்.

அண்மையில் மகளுடைய வகுப்பில் கொடுக்கப்பட்ட ஒரு assignment (இதுக்கு தமிழ் என்ன) அவரவர் நாட்டிலுள்ள, அல்லது கலாச்சாரத்திலுள்ள அல்லது மொழியிலுள்ள ஏதாவது ஒரு விடயத்தை அல்லது கதையை எடுத்து, அதை அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு வகையில் செய்து காட்ட வேண்டும். மகள் அன்று வந்து தன்னிடம் உள்ள ‘தெனாலிராமன்’ என்ற தமிழ் கதைப் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்ட ஒருகதையை வாசித்துக் காட்டச் சொன்னாள். பின்னர் அந்தக் கதையை தன் நண்பர்களைச் சேர்த்து ஒரு நாடகமாக மாற்றி வகுப்பில் செய்து காட்டப் போவதாகச் சொன்னாள். வசனம், இயக்கம் மகள்தான் :). Script எல்லாம் தானே தயாரித்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொண்டு போய் கொடுத்தாள். அதை வகுப்பில் செய்வதற்கு முதல், எல்லோருமாக செய்து பார்க்கும்படி சொன்னேன். அவளும் சரி என்றாள். பின்னர் ”எல்லாரையும் beg பண்ணிக் கேட்டும் அவையள் practice க்கு வரேல்லை”. ஏனென்றால் அவள் கேட்டது விளையாடப் போகும் நேரமாம் :). பிறகு ஆசிரியை செய்து பார்க்க கொஞ்ச நேரம் ஒதுக்கிக் கொடுத்து, பின்னர் செய்தார்களாம். மிகவும் நன்றாகச் செய்ததாக ஆசிரியை கூறினார். ”அது மட்டுமில்லை, உங்கள் மகள் மிகவும் தைரியசாலிதான். வகுப்பிலே, என்னாலேயே கட்டுப்படுத்த முடியாத இரண்டு பையன்களை தனது நாடகத்துக்கு தெரிவு செய்து, அவர்களை நன்றாக நடிக்கவும் வைத்து விட்டாள்” என்று. மகிழ்ச்சியாக இருந்தது.

என் குட்டித் தேவதையின் நாடு!

Posted On திசெம்பர் 16, 2009

Filed under குழந்தை, ரசித்தவை

Comments Dropped 9 responses

“அம்மா! நான் எனக்கு ஒரு country வைச்சிருக்கிறன்” என்று மகள் வந்து என்னிடம் சொன்னபோது, எனக்குச் சரியாகப் புரியவில்லை. பிறகு ‘என்ன அது’ என்று விளக்கமாகக் கேட்டபிறகுதான் புரிந்தது. அவள் தனக்கு பிடித்தமான வகையில் ஒரு நாட்டைக் கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கிறாள்.

அந்த நாடு ஒரு மழைத்துளி வடிவமாம். அழகாத்தான் இருக்கும். நாங்க இலங்கையை மாங்காய் வடிவம் என்று படித்தது நினைவுக்கு வந்தது. அதன் பெயர் ”தாய் மிலோ கனாய் ரோ’ (Thai Milo Canai Ro) வாம். ”என்னம்மா இப்படி ஒரு வாயில நுழையாத பெயராக்கிடக்கு? என்று நான் கேட்டேன். “அது Chinese மாதிரி ஒரு language. ஆனா Chinese இல்லை. அதான் அப்பிடிப் பேர்” என்று பதில் கிடைத்தது. அட, ஏதோ புரியாத மொழியில் (அவளுக்குமே தெரியாத மொழிதான், 🙂 ) அந்த நாட்டின் பெயரை எழுதி வேறு காட்டினாள். ஏதோ கோடுகோடா எழுதினாள். (இந்த இடுகையை எழுதிக் கொண்டிருந்தபோது, திடீரெனத் தோன்றியதால், அந்தப் பெயரை கூகிளின் மொழி மாற்றியில் போட்டுப் பார்த்தேன். இப்படி வந்திருக்கு 泰国米洛煎饼滚装 . 🙂 யாராவது சீனமொழி தெரிந்தவர்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லிட்டுப் போங்கப்பா).

சரி, அவளுடைய அந்த நாட்டின் பெயருக்கு அவள் கொடுத்த ஆங்கிலப் பெயர் The Dragen City. நானும் Thai Milo Canai Ro என்ற பெயர் எதை குறிக்கும் என்று தேடிப் பார்த்தேன். வேறு என்ன வேலையில்லாத வேலைதான் :). Thai என்பதை தேடியபோது, அது முதலாவதா, ஆங்கில விக்கிப்பீடியாவில் தாய்லாந்து பற்றின கட்டுரையில் கொண்டுபோய் விட்டது. அங்கே இப்படி Thai க்கு விளக்கம் கொடுத்திருக்கு.

The word Thai (ไทย) is not, as commonly believed, derived from the word Tai (ไท) meaning “freedom” in the Thai language; it is, however, the name of an ethnic group from the central plains (the Thai people).[citation needed] A famous Thai scholar argued that Tai (ไท) simply means “people” or “human being” since his investigation shows that in some rural areas the word “Tai” was used instead of the usual Thai word “khon” (คน) for people.[13] The phrase “Land of the free” is derived from Thai pride in the fact that Thailand is the only country in Southeast Asia never colonized by a European power.

பரவாயில்லை, என்னமோ தேடிப் போய், இன்றைக்கு புதுசா ஒரு விசயம் தெரிந்து கொண்டன். தென்கிழக்காசிய நாடுகளிலேயே காலனியாதிக்கத்துக்கு உட்படாத ஒரே நாடு தாய்லாந்தாம். ‘Thai’ என்பது ‘சுதந்திரம்’ என்பதைக் குறிக்குமாக இருந்தால், மகள் தன்ரை நாட்டுக்கு மிகப் பொருத்தமாத்தான் பெயர் வைச்சிருக்கிறாள் :).

அடுத்து Milo க்கு அவள் சொன்ன உச்சரிப்பு ‘மிலோ’. ஆனால் எனக்கு இதைப் பார்த்தால் நினைவுக்கு வருவது மைலோ. Chocolate கலந்த பால் மா. இலங்கையில இருக்கேக்கை அது குடிச்சிருக்கிறன். அதை தேடினால், அதுவும் அந்த பானம்பற்றி சொல்கிறது. மகளும் தன்னுடைய நாட்டில் கிடைக்கும் chocolate பற்றியும் சொன்னாள். அதுபற்றி கீழே வரும்.

அடுத்தது, Canai என்னெண்டு தேடினால், சிங்கப்பூர், மலேசியாவின் ஒரு வகை ரொட்டி உணவாம். அடுத்தது Ro வைத் தேடினால் என்னவோ முக்கியமில்லாமல் வந்தது. அதனால அவளுடைய நாட்டை அவள் விபரிச்ச விதத்துக்கு இப்ப போவம்.

அடடா, நான் எழுதியதில் ஒரு பிழை விட்டிட்டேனாம். ம்ம்ம். தன்னுடைய நாடு எப்படி என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறாள் :). Thai Milo Kanai Ro என்று எழுத வேண்டுமாம். எழுத்துப் பிழையில்லாம, சின்ன எழுத்து பெரிய எழுத்து வேறுபாட்டோட எழுத வேணுமாம் :). Kanai என்று தேடினால், Mika Kanai என்ற யப்பான் நாட்டு பாடகரைப் பற்றி வருகிறது.

அவளுடைய நாட்டுல அரசாங்கம் என்று பெரிதாக ஒன்றுமில்லையாம். ஏனெண்டால் ஆக்களெல்லாம் நல்ல சுதந்திரமா இருக்கினம். அரசாங்கத்தில இரண்டே இரண்டு பேர்தானாம் ஒன்று அவள். இன்னொரு ஆளை இப்பதான் தேடிக் கொண்டு இருக்கிறாளாம் *யாராவது அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அங்க எல்லாம் எல்லாருக்கும் சொந்தமாம்.

எல்லா பழங்களும் ஒரே மரத்தில காய்க்குமாம். தனித்தனி மரமெல்லாம் இல்லையாம். அங்க Chocolate மாதிரி வெள்ளை நிறத்தில ஒரு உணவு இருக்காம். அது இனிப்பாக இருந்தாலும், அதிகம் உண்டால், உடலுக்கு தீங்கு தரக்கூடிய சீனித்தன்மை இல்லையாம். அங்க பொதுவான இடங்களிலெல்லாம் மரக்கறி பயிரிட்டிருக்குமாம். யாரும் எங்கயிருந்தும் எடுத்துக் கொண்டு போகலாமாம். அதனால கடையில் மரக்கறி வாங்கத் தேவையில்லையாம். தனிய மீன், இறைச்சி வகைகள்தான் கடையில வாங்க வேணுமாம். அந்த நாட்டில அடிக்கடி உணவுத் திருவிழா நடக்குமாம்.

அங்க மின்சாரம் எடுக்க solar energy, geothermal energy, windmill, biomass தான் பாவிக்கிறாங்களாம். மோட்டார் வண்டிகளில எல்லாம் solar panels பூட்டி இருக்குமாம். அதுல இருந்து எடுக்கிற சக்தியிலதான் வண்டிகள் ஓட்டப்படுமாம்.

அங்க மரமெல்லாம் வெட்ட சட்டம் அனுமதிக்காதாம். அதால ஒருவரும் வெட்டுறதில்லையாம்.

நாட்டு தேசிய உடையை என்னவோ நிறைய சொல்லி விபரித்தாள். அது கொஞ்சம் யப்பான் உடையும், கொஞ்சம் இலங்கை உடையும் கலந்து இருக்குமாம்.

நாட்டின் காலநிலை, இலங்கையில் மாதிரி நிறையநாள் சூரியன் வருமாம். சில நாட்கள் மட்டும் மழை பெய்யுமாம். சில இடங்களில snow உம் இருக்குமாம். அப்பதானே snow விளையாட்டுகளும் விளையாடலாம்.

Currency பற்றியும் நிறைய விளக்கம் கொடுத்தாள். அந்த currency க்குப் பெயர்… (ம்ம்ம், இப்ப மறந்து போனன், பிறகு கேட்டு எழுதுறன்).

இப்படி இன்னும் என்னென்னவோ இரசிக்கும்படியான விசயங்கள் எல்லாம் நடக்குது அவளின்ரை நாட்டில.

நல்ல நாடுதான், இல்லையா?

அவள் பாடசாலையில் படிப்பதையும், தனக்குத் தெரிந்த சூழல் பாதுகாப்புத் தொடர்பான பல விடயங்களையும், தனது விருப்பங்களையும் ஒரு கலவையாக்கி, தனக்கென ஒரு நாட்டை கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது. இத்தகைய நாடு உண்மையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். 🙂

குட்டி இளவரசன்!

‘The Little Prince’ புத்தகம் வாசித்தேன். மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேணும் என்று சொல்லிவிட்டு, சும்மா இருக்காம, நான் வாசிக்கத் தொடங்கினதே பெரிய விசயம். கதை என்னவோ சிறுவர்களுக்கான கதை போல இருந்தாலும், மிகப் பெரிய விசயங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. பெரிய விசயங்களை மிகவும் எளிமையாக சொல்லியிருக்கு. சின்ன சின்னதாய் வரையப்பட்ட படங்களுடன் கதை அழகாக பயணிக்கிறது.

The little Prince கதையில, கதையைச் சொல்பவர், தான் 6 வயதில் ஒரு படம் வரைந்ததாகவும், அந்தப் படம் பெரியவர்களுக்குப் புரியவில்லை என்றும் சொல்லிவிட்டு, பெரியவர்களுக்கு எதுவும் இலகுவாக புரியாதென்றும், அவர்களுக்குப் புரியுற மாதிரி எதையும் செய்யுறது இலகுவான காரியமில்லை என்றும் சொல்கிறார். பெரியவர்களுக்கு புரிய வைக்கிறதென்றால், பெரிய விளக்கங்கள் எல்லாம் கொடுக்க வேணுமாம் :). மகள் சில விசயங்களை எனக்கு சொல்ல முயற்சித்துவிட்டு, “என்ன நான் சொல்லுறது உங்களுக்கு விளங்கேல்லையா” என்று பொறுமையிழந்து கேட்பதுதான் எனக்கு நினைவில் வந்தது.

ஆறு வயதில தான் வரைந்த படத்தை ஒருவரும் பொருட்படுத்தாமல் விட்டதால, தான் பெரிய ஒரு ஓவியராக வரும் ஆசையை, தனக்கு மிகப் பிடித்த தொழிலை தான் துறந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். பிறகு பெரியவர்களுக்குப் பிடித்த மாதிரி நான் ஒரு விமான ஓட்டியாக ஆகிவிட்டேன் என்கிறார். இந்த இடத்தில மகள் முதன் முதலில் வரைந்த படத்தை மிகவும் கவனமாக வைத்திருந்து, இப்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவளுடைய பாடசாலை வேலைக்காக, ‘Time line of my life’ செய்வதற்கு கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு முதலும் வரைந்திருந்தாலும் (அல்லது கிறுக்கியிருந்தாலும்), இன்னதுதான் என்று சொல்லி வரைந்த முதல் படங்கள் இவைதான்.

அஞ்சலியின் மரம்

இது ஒரு மரமாம்.

Untitled

இது ஒரு பெண்மணியின் முகமாம்.

அது மட்டுமில்லை, The Little Prince கதையில அவர் மேலும் சொல்கிறார், பெரியவர்களுக்கு எதையும் எண்களுடன் சேர்த்துத்தான் யோசிக்கத் தெரிகிறதாம். அதுக்கு ஒரு உதாரணமும் சொல்கிறார். ஒரு புதிய நண்பனைப் பற்றி பெரியவர்களிடம் சொன்னால், “அவனது குரல் எப்படி இருக்கும்? அவனுக்கு என்ன விளையாட்டுகள் பிடிக்கும்? அவன் வண்ணத்துப் பூச்சிகள் சேகரிக்கிறானா?” என்றெல்லாம் கேட்பதை விடுத்து, “அவனுக்கு எத்தனை வயது? அவனுக்கு எத்தனை சகோதரர்கள்? அவனது அப்பா எவ்வளவு உழைக்கிறார்?” என்று ஏதாவது எண்களுடன் தொடர்பாகவே பேசிகிறார்களாம். பலர் பேசும்போது இதை உண்மையிலேயே இலகுவாக அவதானிக்க முடியும். வெறும் எண்களையே அவர்கள் மனம் சிந்திக்கிறது. அப்படி பலரும் பேசுவதுடன் நின்று விடாமல், எண்களை நோக்கியே தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றார்கள். குழந்தைகள் உலகம் தனித்துவமானது. எத்தனை எளிமையானது. பெரியவர்களானதும் எப்படி நாமும் குழந்தைகளாக இருந்தோம் என்பது மறந்து போகிறது.

ஒருவர் எத்தனை பெரிய காரியத்தைச் செய்தாலும் சூழலுக்கேற்ற அவரது நடை, உடை, பாவனை முக்கியம் என்பதை, 1909 இல் B-612 என்ற சிறுகோளை கண்டுபிடித்த ஒரு துருக்கி வானியலாளரின் அறிக்கையை, அவர் துருக்கி ஆடையில் சென்று வெளியிட்டபோது முதலில் ஏற்றுக் கொள்ளாதவர்கள், பின்னர் நாகரீகமான உடையில் சென்று வெளியிட்டபோது, அதே அறிக்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்கிறார்.

கதையைச் சொல்பவர் விமான ஓட்டியாக இருக்கையில் ஒரு விபத்தில், யாருமற்ற ஒரு பாலைவனத்தில் தனியாக இருக்க வேண்டி வரும் சூழலில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே அவர் மிகச் சிறிய உருவத்தில் ஒரு குட்டி இளவரசனை சந்திப்பதாகவும், அந்தக் குட்டி இளவரசன் ஒரு குட்டியூண்டு கிரகத்தில் இருந்து வந்தவனாகவும், அந்த குட்டி இளவரசனும், கதை சொல்பவரும் சேர்ந்து செலவளிக்கும் நாட்களிலும், அந்த இளவரசன் சொல்லும் அனுபவங்களையும் வைத்தே கதையும் போகின்றது.

அந்த குட்டி இளவரசன் இவரிடம் ஆடு வரைந்து தரச் சொல்லிக் கேட்கிறார். முதலில் ஒவ்வொரு குறை சொல்லிய பின்னர், ஒரு பெட்டியை வரைந்து, அதனுள் ஆடு இருப்பதாகச் சொல்ல, அது இளவரசனுக்கு பிடித்துப் போவதுடன், புரியவும் செய்வது அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. பெரியவர்களுக்குப் போல் விளக்கம் கொடுக்கத் தேவையில்லாமல் இருப்பதுவே காரணம்.

அந்த குட்டி இளவரசன் கேள்விகளுக்கு சரியாக பதில் கொடுக்காவிட்டாலும், அவன் கூறும் விசயங்களில் இருந்து விமான ஓட்டி சிறிது சிறிதாய் அவனது கோளைப் பற்றியும், அவனது வாழ்க்கை பற்றியும் புரிந்து கொள்கிறார். குட்டி இளவரசன் ஒரு பூவை தனது இடத்தில் வளர்த்து வந்ததையும், அதனை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டதையும், ஆனால் அந்த பூ சொன்ன சில வார்த்தைகள் அவனது மனதை சிறிதாய் காயப்படுத்தியதையும் புரிந்து கொள்கிறார். ஆனாலும் அவர் வரைந்து கொடுக்கும் ஆடு ஒருவேளை தனது பூவை உணவாக எடுத்துக் கொள்ளுமோ என்று இளவரசன் பயப்படுகின்றான். அதனால் ஆட்டுக்கு வாய்க்கட்டு ஒன்றையும், அத்துடன் பூவைச் சுற்றி வேலியும் வரைவதன் மூலம் பூவை பாதுகாக்க உதவுவதாக விமான ஓட்டி இளவரசனுக்கு உறுதி அளிக்கிறார்.

அந்த குட்டி இளவரசன் பூமிக்கு வந்து இவரைச் சந்திக்க முன்னர் வெவ்வேறு கிரகங்களுக்குப் போய் வந்த அனுபவங்களில் பல்வேறுபட்ட மனிதர்களின் இயல்புகளை கதை காட்டுகின்றது.

முதலாவது கிரகத்தில், தன்னைத் தவிர வேறெவரும் இல்லாத கிரகத்தை ஆட்சி செய்ய நினைக்கும் ஒரு அரசன். அரசனின் கட்டளைகள் விசித்திரமானவை. ஒருவரால் எதை செய்ய முடியுமோ, அதை மட்டுமே கட்டளையாகப் பிறப்பிக்கும் அபூர்வ, புரிந்துணர்வுள்ள அரசன். இந்த குட்டி இளவரசன் எதை செய்ய விருப்பமில்லை என்றாலும், அதுபற்றிய தனது கட்டளையை மீளப் பெறும் அந்த அரசன், குட்டி இளவரசன் செய்ய விரும்புவதை மட்டுமே கட்டளையாக சொல்கிறான். அந்த அரசன் சொல்லும் முக்கியமான ஒரு விசயம் ‘எவருக்கும் இன்னொருவரை judge பண்ணுவதை விட தன்னைத்தானே judge பண்ணுவதுதான் மிகவும் கடினமானது. எப்போது ஒருவனால் தன்னைத்தானே சரியாக எடைபோட /சீர்தூக்கிப் பார்க்க முடிகிறதோ, அப்போதே அவன் ஒரு உண்மையான அறிவுள்ள/விவேகமுள்ள மனிதனாகிறான்’. ஆனால் அரசனுக்கு தனது அதிகாரத்தை மற்றவர்மேல் செலுத்துவதில் அத்தனை விருப்பம். சிலருக்கு தன்னுடைய அதிகாரத்துக்கு கீழ் மற்றவர் இருப்பதில் அத்தனை விருப்பம். ஏன் குடும்ப அமைப்புக்களிலும் இதை நாம் பார்க்க முடிகிறதே. வெறும் அதிகாரம் செலுத்த உரிமை கொடுத்தாலே அவர்கள் சமாதானமாகி இருப்பார்கள். அந்தக் குட்டி இளவரசன் அந்த கிரகத்திலிருந்து புறப்பட ஆயத்தமாகும்போது, அரசன் அவனைத் தடுக்கிறான். மறுக்கும் இளவரசனிடம் “உன்னை இந்தக் கிரகத்தின் Ambassador ஆக்குகிறேன் என்கிறான். குட்டி இளவரசன் நினைக்கிறான் ‘இந்த பெரியவர்களே விசித்திரமானவர்கள்தான்’.

அகம்பாவம் அல்லது போலித் தற்பெருமை கொண்ட ஒரு மனிதனை அடுத்த கிரகத்தில் இளவரசன் சந்திக்கிறான். தன்னைப்பற்றி மற்றவர் புகழ்பாடுவது தவிர வேறெதையும் கேட்க அவனுக்கு ஆர்வமில்லை. இதுக்கு உதாரணமாக தற்போதைய பல அரசியல் தலைவர்கள் மனதில் வந்து போனார்கள். அந்த தற்பெருமைக்காரனைப் பார்த்து இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் நிச்சயமாய் விநோதமானவர்கள்தான்’.

அடுத்த கிரகத்தில் ஒரு குடிகாரன். அவன் ஏன் குடிக்கிறான் என்று கேட்டால், தான் குடிப்பதையிட்டு வருந்துவதாயும், அந்த கவலையை மறக்க குடிப்பதாயும் கூறுகிறான். சிலபேர் குடிப்பதற்காகவே தமக்கு கவலையை /காரணத்தை உருவாக்கிக் கொள்வதை கண்டிருக்கிறேன். ஊரில் வாழ்ந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் ஒரு குடிகாரன். தினமும் குடித்து விட்டு வந்து ஏதாவது ஒரு குறை கண்டு பிடித்து, மனைவிக்கு அடிப்பது. மனைவி தன் பெற்றோரிடம் போய் விட்டால், மறுநாள் அந்தக் கவலையில் குடிப்பதாகச் சொல்லி குடிப்பது. அல்லது தங்கைமாரிடம் ‘உங்களாலதான் அவள் போய்ட்டாள்’ என்று சொல்லி அடிப்பது. ‘சே என்ன மனிதன் இவன்’ என்று வெறுப்பாக இருக்கும். கவலையில் குடிக்கிறேன் என்பவர்களிடம் கேட்கத் தோன்றும், ‘குடித்த பின்னர் கவலையில்லாமல் இருக்கிறீர்களா’ என்று. குடித்துவிட்டு கவலையில் அரற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள். அந்தக் கிரகத்தை விட்டு வெளியேறும்போது, இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் சந்தேகமேயில்லாமல் மிக மிக விசித்திரமானவர்கள்தான்’.

அதற்கடுத்து குட்டி இளவரசன் செல்லும் கிரகத்தில் சந்திப்பது வணிகர் ஒருவரை. குட்டி இளவரசன் வந்ததைக் கூட நிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல், ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறார். அவர் நட்சத்திரங்கள் தனக்கு சொந்தமானவை என்றும் அவற்றை எந்நேரமும் எண்ணிக் கொண்டிருப்பதிலுமே பொழுதை கழிக்கிறார். குட்டி இளவரசனுடன் பேசக் கூட நேரமில்லாமல் நட்சத்திரம் எண்ணுகிறார். அவருக்கு சொந்தமான அந்த நட்சத்திரங்களை வைத்து அவர் என்ன செய்வார் என்றால் மேலும் நட்சத்திரங்கள் வாங்குவாராம். அவர் தனக்கு ‘முடிவுகளை அல்லது பலன்களைப் பற்றி (matters of consequence) மட்டுமே அக்கறை’ என்கிறார். பல பணம் சேர்க்க விரும்பும் பணக்காரர்கள் கதையும் இதுதானே? ஓடி ஓடி கோடிக்கணக்கில் சேர்க்கிறார்கள். பேசக் கூட நேரமில்லாமல் அப்படி சேர்ப்பதில்தான் என்ன பலன்? இளவரசன் அவரிடம் ”அதெப்படி நட்சத்திரங்கள் உனக்கு சொந்தமாகும்?” என்று கேட்பதற்கு அவர் கூறும் பதில் “யாருக்கும் சொந்தமில்லாத வைரத்தை நீ கண்டெடுத்தால், அது உனக்கு சொந்தமாகும். யாருக்கும் சொந்தமற்ற தீவை நீ கண்டு பிடித்தால் அது உனக்குச் சொந்தமாகும். எவருக்கும் வராத யோசனை உனக்கு வந்தால், அதற்கான உரிமை உனக்குத்தான். அதேபோல் நட்சத்திரங்களை உரிமையாக்கும் எண்ணம் எனக்கே முதலில் வந்ததால், நட்சத்திரங்கள் எனக்கே சொந்தமானவை’. எமக்கு பிடித்தவற்றை நமக்கே சொந்தமாக்கிக் கொள்ளவே விரும்புகிறோம். அங்கிருந்து புறப்படும் இளவரசன் தனக்குள் ‘பெரியவர்கள் மிக நிச்சயமாய் அசாதாரணமானவர்கள்தான்’ என்று நினைத்தபடி போகின்றான்.

இன்னொரு சிறுகோளில், கடமையே கண்ணாக இருக்கும் ஒரு விளக்குப் போட்டு அணைப்பவரை சந்திக்கிறான் குட்டி இளவரசன். ஆரம்பத்தில் அந்தக் கோள் மெதுவாகச் சுற்றியபோது இரவில் விளக்குப் போட்டு, காலையில் அணைத்துக் கொண்டிருந்த அவர், அந்தக் கோள் மிக விரைவாக சுற்ற ஆரம்பித்த பின்னர் தொடர்ந்து விளக்குப் போடுவதும், அணைப்பதுமாகவே இருக்கிறார். அந்த கோள் ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை முழுச்சுற்றை செய்வதால், அவருக்கு ஓய்வெடுக்கவே நேரமற்றுப் போகிறது. குட்டி இளவரசனுக்கு அவனே அபத்தமில்லாதவனாகத் தெரிகின்றான். காரணம் அவன் தன்னைப்பற்றி மட்டும் எண்ணாமல் வேறு விடயங்களுக்கும் முக்கியத்துவம் தருகின்றான். எனக்கும்தான் அவனை மிகவும் பிடித்துப் போனது :). குட்டி இளவரசனுக்கு அவனுடன் நட்பாகி அங்கேயே தங்கி விட விருப்பமிருந்தாலும், அந்த கோள் மிகச் சிறியதாக, இரண்டு பேருக்கு இடமற்று இருப்பதால், தனது பயணத்தை தொடர்கின்றான்.

அதற்கும் அடுத்த கிரகத்தில் அவன் சந்தித்தது ஒரு புவியியல் ஆராய்ச்சியாளர். அவர் தனக்கு நிறைய விடயங்கள் தெரியும் என்று நம்புகிறார். ஆனால் ஒரே இடத்தில் இருந்தபடியே எல்லாவற்றையும் செய்யப் பார்க்கிறார். மற்றவர்களின் உழைப்பில் தான் பெயரைப் பெற்றுச் செல்ல விரும்பும் மனிதர்களை நினைவு படுத்தினார். சில ஆராய்ச்சியாளர்களும் இப்படி இருக்கிறார்கள். தமக்கு கீழ் வரும் மாணவர்களின் உழைப்பில் தாம் பெயரைத் தட்டிச் செல்வார்கள். சில அமைப்புக்கள், நிறுவனங்களின் பெரிய பொறுப்பில் இருப்பவர்களும் தாம் எதையுமே செய்யாமல், கீழ் உள்ளவர்களின் உழைப்பை தமதாக பிரகடனப்படுத்திக் கொள்வார்கள். அந்த புவியியலாளரே குட்டி இளவரசனுக்கு பூமிக்குப் போகும்படி அறிவுரை சொல்கின்றார்.

இறுதியில் பூமிக்கு வரும் அந்தக் குட்டி இளவரசன் முதலில் ஒரு பாம்பை சந்திக்கிறான். பாம்பிடம் மனிதர்கள் எங்கே என்று விசாரிக்க, பாம்பு அது பாலைவனமென்றும், மக்கள் அங்கே இல்லை என்றும், பூமி மிகப் பெரியது என்றும் கூறுகின்றது. அதன் பின்னர் ஒரு பூக்கன்றை கண்டு ‘மனிதர்கள் எங்கே?’ என்று விசாரிக்கிறான். அதற்கு பூக்கன்று, மனித இனம் அழிந்துகொண்டு போகும் இனமாக கூறுகின்றது. ஒருவேளை எதிர்காலத்தை கற்பனையில் கண்டு எழுதியிருப்பாரோ? மனிதர்களுக்கு வேர்கள் இல்லாமையால், அவர்கள் காற்றோடு எடுத்துச் சொல்லப்படுவதாகவும், அதனால் அவர்களது வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாய் இருப்பதாகவும் அந்த பூக்கன்று சொல்கின்றது.

பின்னர் ஒரு மலையில் ஏறும் அந்தக் குட்டி இளவரசனுக்கு அவன் சொல்லும் வார்த்தைகளே எதிரொலியாக கேட்கின்றது. அப்போது அந்தக் குட்டி இளவரசன் ‘இந்தப் பூமி மிகவும் வரண்டதாகவும், அங்குள்ளவர்கள் கற்பனையற்றவர்களாகவும் இருக்கிறார்கள்’ என்று நினைத்துக் கொள்கின்றான். பிறகு நெடுந்தூரம் நடந்து சென்று, குட்டி இளவரசன் ஒரு பெரிய ரோசாப்பூத் தோட்டத்தை அடைகின்றான். அப்போது தன்னுடைய கிரகத்தில் தனியாகத் தான் விட்டு வந்த பூவை நினைக்கிறான். அந்தப் பூவோ தான் மட்டுமே இந்த முழு பிரபஞ்சத்திலும் இந்த வகையிலுள்ள ஒரே ஒரு பூ எனக் கூறியிருந்தது. அவனும் தன்னிடம் தனித்துவமான ஒரு ஒரு பொருள் இருப்பதாக பெருமை கொண்டிருந்ததையும், ஆனால் அது ஒரு பொதுவான ரோசாதான் என்றும் எண்ணிக் கொள்கின்றான். அதேவேளை அந்த ரோசாவை தனியே விட்டு வந்ததை எண்ணி கவலையும் கொள்கின்றான்.

அதன் பின்னர் அவன் சந்திக்கும் ஒரு நரி அவனுக்கு பெரிய தத்துவத்தையே சொல்லிக் கொடுக்கிறது. நரி அவனை, தன்னுடன் நட்பாகும்படியும், மனிதர்கள் எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையை இழந்து விட்டார்கள் என்றும், தயார் செய்யப்படும் பொருட்களை (ready-made) கடைகளில் வாங்குகின்றார்கள், ஆனால் நட்பை வாங்கும் கடைகள் இல்லாமையால் நட்பை மறந்து விட்டதாகவும் கூறுகின்றது. நட்பாவதற்கு எதையும் பேசாமல் இருப்பதே நல்லது என்றும், வார்த்தைகளே மனவேற்றுமைகளுக்கு காரணம் என்றும் அந்த நரி சொல்கின்றது. ஆனால் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாய் அண்மித்து வருவதனால் நட்பாகலாம் என்று நரி சொல்வது போலவே, குட்டி இளவரசன் நரியுடன் நட்பாகின்றான். ஆனால் குட்டி இளவரசன் போக வேண்டிய நேரம் வரும்போது நரி நட்பை விட்டுப் பிரிவதை எண்ணி கவலை கொள்கின்றது. அப்போது, குட்டி இளவரசன் ”நான் உனக்கு எந்த கெடுதலும் செய்ய நினைக்கவில்லை. ஆனால், நீதான் என்னை நட்பு கொள்ளச் சொன்னாய்” என்று நரியிடம் சொல்கின்றான். நரியோ “ஆம், அது அப்படித்தான். நீ இப்போது அந்த ரோசாத் தோட்டத்துக்கு போய் வா” என்று சொல்கிறது. அங்கே போனபோதுதான் அவனுக்குப் புரிகிறது, ‘அங்கே ஆயிரக் கணக்கில் ரோசாக்கள் இருந்தாலும், அவனது ரோசா தனித்துவமானதுதான். காரணம் அந்த ரோசாமேல் அவன் கொண்டிருக்கும் பாசம். நரியிடம் நட்பு கொண்டதாலேயே, பார்க்கும் எல்லா நரிகளைப் போல அல்லாமல், குறிப்பிட்ட அந்த நரி தனித்துவமானது ஆகியதைப் போல’. அவன் மீண்டும் நரியிடம் வந்தபோது நரி ஒரு இரகசியத்தை சொல்வதாக சொல்கின்றது “இதயத்தால் மட்டுமே சரியாகப் பார்க்க முடியும். கண்களுக்கு முக்கியமானவை தெரியாது. மனிதர்கள் இந்த உண்மையை மறந்து விட்டார்கள். நீ உனது ரோசாவுக்காக செலவு செய்த நேரமே, அந்த ரோசா உனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்லும். உனக்கு அந்த ரோசாவில் உள்ள அன்பினால், நீ அந்த ரோசாவுக்கு பொறுப்புள்ளவனாகின்றாய்”. நாங்கள் யார்மேல் உண்மையான அன்பைச் செலுத்துகிறோமோ, அவர்களே எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்களாகவும், தனித்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பின்னர் ஒரு தொடர்வண்டி நிலையத்தை அடையும் அந்தக் குட்டி இளவரசன், ஒரு தொடர்வண்டியில் ஏராளமான மனிதர்கள் போவதைக் கண்டு ”இவர்கள் எங்கே அவசரமாகப் போகின்றார்கள்?” என்று அங்கிருப்பவரிடம் கேட்க, அவர் ”அது யாருக்கும் தெரியாது” என்று சொல்கின்றார். பின்னர் மறு புறமிருந்து ஒரு தொடர் வண்டி வர, ”போனவர்கள் ஏன் திரும்பி வருகின்றார்கள்?” என்று கேட்க, ”இவர்கள் வேறு மனிதர்கள்” என்று பதில் கிடைக்கிறது. ”ஏனப்படி” என்றதற்கு, “அவர்கள் தாம் இருக்குமிடத்தில் திருப்தி அடைவதில்லை” என்கின்றார். ‘இக்கரை மாட்டுக்கு, அக்கரை பச்சை’ :). அப்போது குட்டி இளவரசன் நினைக்கிறான், ‘குழந்தைகளுக்கு மட்டுமே தமக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும்’.

ஒரு வியாபாரி, தாகம் எடுப்பதைத் தவிர்க்க குழிகைகள் விற்பதைக் காண்கின்றான். ஏனிப்படி என்று கேட்டால், ”தாகம் தீர்க்க எடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி அந்த நேரத்தில் விரும்பியதைச் செய்யலாம்” என்று வியாபாரி சொல்கின்றார். அப்போது அந்த குட்டி இளவரசன் நினைக்கிறான், அப்படி தனக்கு அந்த நேரம் மிச்சப்படுமானால், ‘அந்த நேரத்தில் நன்னீர் கிடைக்கும் இடத்தை நோக்கி அமைதியாக நடந்து செல்லலாம்’ என்று. நாம் சில சமயம் (அல்லது பல சமயம்) நேரத்தை மிச்சம் பிடிப்பதற்கு ஏதேதோ செய்வோம். ஆனால் அந்த மிச்சம் பிடித்த நேரத்தில் உருப்படியாக எதையும் செய்வதில்லை.

இந்த அனுபவங்களைக் கேட்ட விமான ஓட்டி (கதையை சொல்ல ஆரம்பித்தவர்), குட்டி இளவரசனின் அனுபவங்கள் சுவாரசியமானவை என்கிறார். அந்த அனுபவங்கள் மூலம் நிறைய உண்மைகளை அந்த குட்டி இளவரசன் அவருக்குப் புரிய வைக்கிறான். சில சமயம் எல்லோரையும் ஒரே விதமாகப் பார்த்து, ஒரே விதமாக நட்புகொள்வது நல்லதுதான். இந்த கருத்து வந்த இடத்தை வாசித்தபோது என் செல்ல குட்டி மகள் ஒருநாள் என்னிடம் வந்து “அம்மா, ஒரு best friend இருக்கிறது நல்லதா? அல்லது எல்லாரோடயும் ஒரே மாதிரி friends ஆ இருக்கிறது நல்லதா?” என்று கேட்டது நினைவில் வந்தது. நான் அதற்கு பல விதமாய் யோசித்தேன். அதற்கு அவளே சொன்னாள் “நான் நினைக்கிறன் எல்லாரோடயும் friends ஆ ஒரே மாதிரி இருக்கிறதுதான் நல்லது. ஏனெண்டா நாங்கள் ஒராளோட மட்டும் best friend ஆ இருந்தால், அவ எங்கயாவது போய்டால், கவலையா இருக்கும்தானே?”. நல்ல ஆழமாத்தான் யோசிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் எல்லோரிடமும், எல்லாத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாதே? அதனால் இரண்டும்தான் சரியாகத் தெரிகிறது. என்னுடைய ஒரு நெருங்கிய தோழியை விட்டுப் பிரிந்து கவலைப்பட வேண்டி வந்த ஒரு தருணத்தில் நான் எடுத்த முடிவும் எனது மகளுடையதுதான் என்பதும் கூடவே நினைவு வந்தது. அதற்குப் பின்னர் எவருடனும் நெருங்கி அன்பு செலுத்துவதில்லை என்பதுதான் அந்த முடிவு. ஆனால் அதை என்னால் சரி வர செய்ய முடியவில்லை என்பதும் உண்மையே.

[சரி என்ரை கதையை விட்டுட்டு குட்டி இளவரசனின் கதையின் முடிவுக்கு வாறன் :).]

அந்தக் குட்டி இளவரசனை காண முடியாமல் போன ஒரு காலைப் பொழுதில் அந்த விமான ஓட்டி, அவன் தனது கோளுக்கு திரும்பிப் போய், தனது ரோசாவை கவனமாகப் பார்த்துக் கொள்வான் என்று நம்புவதாக கதையை முடிக்கிறார்.

Matters of importance must be given the priority over the matters of consequence.

எனக்கு கதை மிகவும் பிடித்தது. கதை இணையத்தில் கிடைக்கிறது. The Little Prince (pdf file) ஐத் தரவிறக்கிப் படித்துப் பாருங்களேன்!

குழந்தை வளர்ப்பு!

Posted On ஒக்ரோபர் 7, 2009

Filed under குழந்தை, சமூகம்

Comments Dropped 3 responses

இன்றைக்கு குழந்தை வளர்ப்புபற்றி ஒரு பேச்சு வந்தது.

ஒவ்வொரு குழந்தையும் வளர வளர பிரச்சனை கூடிக் கொண்டே போவதாக ஒருவர் குறைப்பட்டார். உண்மையில் பிள்ளைகளால் பிரச்சனை என்பதை விட, நாமே அதை பிரச்சனையாக உருவாக்கிக் கொள்கிறோமோ என்றுதான் எனக்குத் தோன்றியது.

”நாமெல்லாம் இப்படியா இருந்தோம். அப்பா, அம்மா சொல்வதெல்லாம் கேட்டு அப்படியே இருக்கவில்லையா” என்றார். நாம் வாழ்ந்த காலம், இடம், சூழ்நிலை எல்லாவற்றையும், தற்போதைய காலம், சூழல், இடத்துடன் எப்படி ஒப்பிட்டுப் பேச முடிகிறது. எத்தனை வேறுபாடுகள் இருக்கும்போது, குழந்தைகளில் இயற்கையாக இருக்கக் கூடிய வேறுபட்டை எப்படி உணர முடியாமல், ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது.

வளர்ந்து வரும் குழந்தைகளை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை என்றும், அவர்களை இப்படிச் செய்யாதே, அப்படிச் செய்யாதே என்றால் கேட்கிறார்கள் இல்லை என்றும், அவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். நான் சொன்னேன், “இந்த புலம்பெயர் சூழலில், இது பெற்றோருக்கு மட்டுமே பிரச்சனையில்லை. பிள்ளைகளுக்கு அதை விட பிரச்சனை உண்டு. பெற்றோரை அனுசரித்துப் போவதா, அல்லது வேறு கலாச்சாரம் கொண்ட நண்பர்களை அனுசரித்துப் போவதா என்று அவர்கள் நிலையும் கடினம்தான், சிலவற்றை செய்தால் பெற்றோர் வெறுக்கிறார்கள், செய்யாவிட்டாலோ நண்பர்கள் ஒதுக்கி விடுகிறார்கள், எல்லாவற்றையும் சமநிலைப்படுத்தி செய்ய வேண்டிய கட்டாய சூழல் பிள்ளைகளுக்கு” என்று.

இப்போது வந்து Google Reader ஐ திறந்தால், முதலில் கண்ணில் பட்ட இடுகை ‘பெற்றோர்களுக்கான விதிகள்’ – புதிய நோக்கு. அங்கே ஒரு அறிமுகம் மட்டுமே கிடைத்தது. எனவே Google இல் தேடி, Richard Templar எழுதிய, அந்த 100 எளிய விதிகளையும் (விளக்கமாக இல்லாவிட்டாலும்) பார்த்துவிட்டேன். விளக்கமாக பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது. புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும்.

இன்று பேசியபோது குறைப்பட்டுக் கொண்ட அந்த நபர், குழந்தைகளை எந்தவொரு வேலையும் வீட்டில் தான் செய்ய விடுவதில்லை என்றும், அவர்கள் தங்களுடன் இருக்கும்வரை எதுவும் செய்து சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்றும் நினைப்பதுடன், அதை பெருமையாகவும் எண்ணுபவர். அப்படி செய்வதால் பிள்ளைகள் தமது சுயசார்பு (வெங்கடேஷ் க்கு நன்றி 🙂 தமிழ்ச் சொல்லுக்கு), நிலையை விரைவில் பெறுவதற்கான வழியை அடைத்து விடுகிறோம் என்றுதான் எனக்குத் தோன்றியது. இதுபற்றி பல தடவைகள் அவருக்கு எடுத்துக் கூறியும் அவர் புரிந்து கொள்ள மறுக்கிறார்.

அன்றொருநாள் அவரது மகளிடம் (வயது 18 ஆகி விட்டது), பேசிக் கொண்டிருந்தபோது, ”அம்மா எதுக்கு இருக்கிறா செய்து தரத்தானே. இதெல்லாம் செய்வது அம்மாவின் கடமை” என்று சொல்கிறார். எனக்கென்னவோ அப்படி சொன்னது மகளின் குற்றமல்ல. அப்படி நினைக்கும்படி செய்யும் பெற்றோரின் தவறுதான் என்றே தோன்றியது. நான் அவருக்கு சில விடயங்களை சொல்லி புரிய வைக்க முயன்றேன்.

இன்னொருவர் கூறினார், சில குழந்தைகள் நமக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு, தனது (வெளிநாட்டு) நண்பர்கள் வீட்டில் இப்படித்தான் என்று கூறி தமது பொறுப்பை தட்டிக்கழிக்கப் பார்க்கிறார்கள் என்று. அதுவும் உண்மைதான். சில பிள்ளைகளும் புத்திசாலிகள்தான் :). சில விசயங்களுக்கு தமது வெளிநாட்டு நண்பர்களை உதாரணம் காட்டி, அவர்கள் மாதிரி தாமும் செய்ய வேண்டும் என்பவர்கள், தமக்கு சாதகமாக வரக் கூடிய வேறு விடயங்களில் இது நமது கலாச்சாரம், அதன்படி செய்யலாம் என்கிறார்கள். பெற்றோரின் உதவியுடன் வாழ்வது அவர்களுக்கு இலகுவான முறையாக இருக்கிறது.

நான் அறிந்த அளவில், நோர்வே நாட்டினர் அதிகமானோர் (வேறு எதைச் சரியாக செய்கிறார்களோ, இல்லையோ 🙂 ) தமது பிள்ளைகளை சுயசார்பு நிலையில் வளர்ப்பதில் வெற்றியே கண்டிருக்கிறார்கள். பொதுவாக 18 வயதில், பிள்ளைகள் தாமாகவோ, சில சமயம் பெற்றோரின் ஊக்கப்படுத்துதலாலோ, தனியாக சென்று வாழத் தொடங்குகிறார்கள். என்னுடன் வேலைபார்க்கும் ஒருவரின் மகன், அவர்களுடைய வீட்டிலேயே, basement apartment இல், பெற்றோருக்கு வாடகை கொடுத்து வாழ்கிறார். அதனால் பெற்றோருக்கு அவர்மேல் அக்கறையில்லை, அல்லது சரியான அன்பில்லை என்று சொல்லவும் முடியாது. அந்த அம்மாவும் நானும் ஒரே அறையில் வேலை செய்வதால் அவரை என்னால் நன்றாக கவனிக்க முடிகிறது.  அடிக்கடி பிள்ளைகளுக்கு தொலைபேசி கதைப்பதும், அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் காட்டும் அக்கறையும், அவரது அன்பை சொல்கிறது. ஏதோ ஒரு பிரச்சனையில் அன்று மகள் தொலைபேசியில் எடுத்துச் சொன்னபோது, அதற்கு தன்னால் முடிந்த புத்திமதியையெல்லாம் பொறுமையுடன் கூறிவிட்டு, அவர் இறுதியில் சொன்னது இன்னும் நினைவில் நிற்கிறது. அவர் சொல்கிறார் ”இது நான் உனக்கு கூறக் கூடிய புத்திமதி மட்டுமே. ஆனால் பிரச்சனைக்கேற்றவாறு, உன் மனநிலைக்கு ஏற்றவாறு முடிவெடுத்து, செயலாற்ற வேண்டியது நீதான்.” என்று.

இப்படி நம்மில் எத்தனைபேர் நினைக்கிறோம். ‘நாங்கள் சொல்கிறோம், பிள்ளைகள் கேட்கத்தான் வேண்டும். நாம் அவர்களுக்கு நன்மைக்குத்தானே சொல்வோம். இத்தனை அன்பு வைத்திருக்கிறோம், அவர்களுக்காக என்னவெல்லாம் செய்கிறோம். இதிலும் நாம் சொல்வதைக் கேட்டால் என்ன?” இதுதான் நம்மில் பலரின் மனநிலை. அவர்களுக்கு எது நன்மை என்பதை அவர்களே உணர்ந்து செய்யும் மனநிலையில் அவர்களை விடுவதுதானே நல்லது.

பிள்ளையிடமே வாடகை வாங்குவதெல்லாம் சரியா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கெல்லாம் என்னால் போக முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் தன்காலில் தானே நிற்பதற்கான ஒரு நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதில் இதுவும் ஒரு முறையே என்பதை ஏற்காமலும் இருக்க முடியவில்லை. சில விசயங்கள் நமக்கு மிகவும் குழப்பமாகத்தான் இருக்கிறது. நாம் வளர்ந்த சூழல் நம்மை இப்படி குழப்புகிறது என நினைக்கிறேன்.

தற்போதைய போட்டிகள் நிறைந்த அவசர யுகத்தில், எவ்வளவுக்கெவ்வளவு பிள்ளைகள் தாமே சுயமாக முடிவெடுக்கவும், தன் சொந்தக் காலில் நிற்கவும் பழக்கி விடுகிறோமே, அவ்வளவுக்கவ்வளவு பிள்ளைக்கு நல்லது என்றே நானும் நம்புகிறேன்.

குழந்தையின் பெயர்!

Posted On ஒக்ரோபர் 17, 2008

Filed under குழந்தை, நோர்வே

Comments Dropped one response

ஒரு இடுகை  போடலாமே என்ற எண்ணம் வந்தது. நானும்தான் எத்தனை நாளுக்கு என்னுடைய  வலைப்பதிவில எதுவுமே எழுதாமல் இருக்கிறது :).  

குழந்தைக்குப் பெயர் வைத்த கதை :).

குழந்தை கிடைப்பதற்கு 4 வருடத்திற்கு முதலே பிறக்கப் போகும் குழந்தைக்கு ஒரு பெயர் நினைத்தாயிற்று. ஆசைப்பட்டது பெண் குழந்தை. பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்காமலே, பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஆசையிலும், பெண்தான் பிறக்கும் என்ற ஏதோ ஒரு  நம்பிக்கையிலும்  குழந்தைக்கு அதே பெயரை வைப்பது என்று குழந்தை 3 மாதக்கருவாக இருக்கும்போதே முடிவாகி மற்றவர்களிடம் சொல்லியுமாச்சு.

என்ன குழந்தை என்று அறிய வேண்டுமா என்று வைத்தியர் கேட்டதற்கு, வேண்டாம் என்றும் சொல்லியாச்சு. நாள் செல்ல செல்ல, என்ன குழந்தை என்று பார்த்திருக்கலாமோ, கடைசி நேரத்தில் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால், அது ஏமாற்றமாகப் போய் விடுமோ என்று சின்னதாய் ஒரு தவிப்பும் வந்தது. அப்படி என்னதான் பெயர்? அந்தப் பெயர் “அஞ்சலி“.

ஆனால், நல்ல வேளையாக ஆசைப்பட்டபடியே பிறந்தது பெண் குழந்தை. குழந்தை பிறந்தபோது நான் மயக்கத்தில். கண்விழித்த முதல் கணத்தில், அரைகுறை மயக்கத்தில் நான் கேட்ட முதல்கேள்வி, “அஞ்சலிதானே?”. “ஆம்” என்ற பதில் தந்த ஆனந்தத்திற்கு அழவேயில்லை :).  

கண்விழித்தபோது குழந்தையை என்னிடம் காட்டினார்கள். தலை நிறைந்த தலை முடியுடன் இருந்த மகளுக்கு தாதிமார், ribbon எல்லாம் கட்டி, அலங்காரம் செய்திருந்தார்கள். மகளை முதன்முதல் பார்த்த அந்த நேர உணர்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

குழந்தை பிறந்தபோது மற்றவர்களிடம் அறிவித்தபோது, “அஞ்சலி பிறந்திட்டாள்”, என்று சொல்ல முடிந்தது. அதைவிட குழந்தை பிறந்ததுபற்றி அறிந்த ஒருவர் தொலைபேசியில், “என்ன, அஞ்சலி பிறந்தாச்சா?” என்று கேட்டது மிகுந்த மகிழ்ச்சி.

மகளுக்கு, தனக்கு பெயர் வைத்த விதம்பற்றி கேட்கும்போது பெருமையும், மகிழ்ச்சியும். அவளுக்கு தான் பிறந்த கதையை மீண்டும் மீண்டும் கேட்பதில் இப்போதும் தணியாத ஆர்வம். நல்ல வேளையாய் அவளுக்கும் அந்தப் பெயர் மிகவும் பிடிச்சிருக்கு :).  மற்றவர்கள் அவளது பெயரைக் கேட்டுவிட்டு, “அழகான பெயர்” என்று சொன்னால் அவள் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை வரும். தமிழ் தெரியாதவர்கள்கூட, ஒரு தடவை பெயரை மீண்டும் சொல்லிப் பார்த்து ‘அழகான பெயர்’ என்று சொல்லும்போது மகிழ்ச்சி. தவிரவும் ஒரு சிலர் “It sounds like ‘angel'” என்று சொல்வார்கள். அதில் அவளுக்கு இன்னும் பெருமை கூடிவிடும்.

சங்கடமான கேள்வி!

அண்மையில் ஒருவர் என்னிடம் சொன்னார் “உங்கட மகள் உங்களை மாதிரியே இருக்கிறா. உங்களை மாதிரியே புன்னகைக்கிறார்”. நான் சிரித்தேன். அவர் மேலும் கேட்டார் “இப்படி நிறையப் பேர் உங்களிடம் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன், இல்லையா?” என்று. நானும் சொல்லியிருக்கின்றார்கள் என்று சொன்னேன். இந்த கதையை நான் மகளிடம் பேசும்போது சொன்னேன். அவளுக்கு 9 வயது ஆகப் போகின்றது. அங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. 🙂

அவள் வேறு யாரெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள், எப்படி சொன்னார்கள் என்று பெரிய விளக்கங்கள் கேட்டாள். நானும் சொல்லிக் கொண்டு வந்தேன். முன்னொரு தடவை அவளையும் என்னையும் ஒன்றாகச் சந்தித்த, என்னுடன் வேலை செய்யும் ஒருவர் “மகளை குளோனிங் செய்து எடுத்திருக்கிறாயா?” என்று கேட்டதை நினைவு கூர்ந்தேன். இப்படியே கதை போனபோது, குழந்தைகள் அப்பா மாதிரியோ, அம்மா மாதிரியோ இருப்பார்கள் என்று சொன்னேன் (தேவையா எனக்கு??). அவள் உடனே கேட்டாள், “நான் உங்கட வயித்தில இருந்துதானே வந்தேன். நான் எப்படி அப்பா மாதிரி இருக்க முடியும்?”. அதுக்கு நான் “அப்பாவுடைய cell இல இருக்கிற DNA யும், அம்மாவுடைய cell இல இருக்கிற DNA யும் சேர்ந்துதான் குழந்தையுடைய cell and DNA வரும். பிறகு அந்த cells பிரிந்து பிரிந்துதான் குழந்தை உருவாகின்றது” என்று சொன்னேன். ஏதோ மாட்டிக் கொள்ளாமல் குழந்தைக்கு சொல்லிவிட்டேன் என்ற இறுமாப்பு வேறு. விடுவாளா அவள், கேட்டாள் அடுத்த கேள்வியை. “நான் உங்கட வயித்துக்குள்ளே இருந்துதானே வந்தேன். பிறகெப்படி அப்பாடை cell and DNA வரும்.” தேவையா எனக்கு என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

எனக்கு ஒரு சின்ன idea வந்தது. “உங்களுக்கு DNA என்றால் என்ன என்று தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கு “அது ஒரு blood என்று பதில் வந்தது.” அது blood இல்லை என்று சொல்லி, DNA என்றால் என்ன என்று எளிமையாக விளக்க ஆரம்பித்தேன். பல இடங்களில் அவள் ‘விளங்கேல்லை’ என்று சொன்னாள். “இப்ப உங்களுக்கு விளங்குறது கொஞ்சம் கஷ்டம். நீங்க இன்னும் கொஞ்சம் வளர்ந்தால், அடுத்தடுத்த வகுப்புக்கு போனால் கொஞ்சம் easy யா விளங்கப்படுத்தலாம். அதால நான் பிறகு உங்களுக்கு விளங்கப்படுத்துறேனே” என்று கேட்க அவளும் சரியென்று விட்டாள். அப்பாடா, இப்போதைக்கு தப்பியாச்சு. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு இல்லையென்றே தோன்றுகின்றது.

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் என்கின்றோம். அதை செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போதுதான் அதிலுள்ள பிரச்சனை புரிகின்றது. 😦

அடுத்த பக்கம் »