தற்கால மனிதன் – 11
( Sapiens தொடர்ச்சி)
கூட்டுக் கற்பனையும், மனிதனால் கட்டமைக்கப்பட்ட கருத்துருக்களும்!
ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என்று கூடி மனிதர்கள் எப்படி ஒத்துழைக்கிறார்கள்? இதன் அடிப்படை என்ன?
கற்பனையும், அதுவும் கூட்டுக் கற்பனையும் (Collective imagination), அந்தக் கற்பனையில் மனிதர்கள் வைக்கும் நம்பிக்கையுமே அவர்களை இணைக்கிறது.
நாம் ஒரே ஊரை/ நகரத்தை/ நாட்டை/ நிறுவனத்தை/ மதத்தை/ கொள்கையைச் சேர்ந்தவர்கள்
என்று பல் வேறுபட்ட நம்பிக்கையின் அடிப்படையில் மனிதன் தனித்தனிக் கூட்டமாக இணைகிறான்.
ஜேர்மனியில் இருக்கும் Stadel Cave இல் 32000 ஆண்டுகளுக்கு முந்தைய சிங்க-மனிதனின் உருவம் (சிங்கத் தலையுடன் உள்ள மனித உருவம்) கண்டெடுக்கப்பட்டது. இது மனிதர்களால் இல்லாத ஒன்றைக் கற்பனையில் கண்டுகொள்ள முடியும் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. மனிதனால் தாம் என்றுமே கண்களால் பார்த்திராத, நுகர்ந்து பார்த்திராத, தொட்டு உணர்ந்திராத விடயங்களை கற்பனையாக உருவாக்கி, அதனடிப்படையில் கருத்துகளை புதிதாகக் கட்டமைத்து, அவற்றை நம்பும் இயல்பும், அதுவும் கூட்டமாக இணைந்து ஏற்றுக் கொள்ளும் இயல்பும் மொழிப் பரிமாற்றம் மூலம் மிகச் சாத்தியமான ஒன்றாகியது.
ஒரு பன்னாட்டு நிறுவனமும் இவ்வாறே தொழிற்படுகிறது. ஒரு நிறுவனம் அல்லது குழுமம் இயற்பொருளாக (physical object) இல்லாதிருந்தாலும், அதனை நிறுவியவர், அதற்காக உழைப்பவர்கள், அதன் பயனீட்டாளர்கள் என அனைவரும் அந்த நிறுவனத்தின் பெயரில் நம்பிக்கை வைக்கிறார்கள். ஒரு limited liability company யில் நிறுவனத்திற்குச் சொந்தக்காரரின் பெயரில் அல்லாது நிறுவனத்தின் பெயரிலேயே கடன் வாங்க முடியும். நட்டமேற்பட்டால், நிறுவனத்தின் பெயரிலேயே அதைக் காட்டவும் முடியும். ஏதாவது தவறு ஏற்பட்டால், நிறுவனத்தின் பெயரிலேயே வழக்குப் பதிவு செய்யலாம். நிறுவனத்தை மூடினாலும், அதில் பணி புரிந்தவர்கள் உயிர் வாழ்வார்கள். ஆனால் அந்த நிறுவனம் உடல், பொருள், ஆவி அற்றது. அப்படி ஒரு நிறுவனம் இயங்குவது மனிதர்களின் கூட்டுக் கற்பனையும் நம்பிக்கையும்.
(பணம் என்பதை எடுத்தால் வெறும் காகிதத் தாளுக்கு பெறுமதி இருப்பதாக, அதுவும் வெவ்வேறு எழுத்துகள் பொறித்தவுடன், ஒரே மாதிரியான தாள்களுக்கு வெவ்வேறு பெறுமதி இருப்பதாக எண்ணி அதை நம்புகிறோம். ஏன் ஒரு கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, கடன் அட்டையை ஒரு இயந்திரத்தின் முன் காட்டிவிட்டதும் வாங்கிய பொருட்களுக்கு நாமும் பணம் செலுத்திவிட்டதாக நம்புகிறோம், கடைக்காரரும் பணம் பெற்றுக் கொண்டதாக நம்புகிறார்.)
புராணக் கதைகள், கட்டுக் கதைகள், மதங்கள் எல்லாம் இதன் வெளிப்பாடாகவே உருவாகின. ஒரு கதையைத் திறம்பட, அனைவரும் நம்பும்படியாகச் சொல்வது இலகுவானதல்ல. அப்படிச் சொல்வதில் வெற்றியடைந்துவிட்டால், அந்த நம்பிக்கை ஒரு அளவற்ற சக்தியை மனிதருக்குத் தரும். அதனடிப்படையில் மில்லியன் கணக்கில் ஒருவருடன் ஒருவர் எந்த அறிமுகமும் அற்றவர்கள் இணைந்து ஒரு பொது இலக்கை நோக்கித் தொழிற்படுவார்கள்.
பல விலங்குகள், ஏன் வேறு மனித இனங்கள் “கவனம், சிங்கம்” என்று மட்டுமே தனது குழுவுக்கு எச்சரிக்கை சமிக்ஞை கொடுத்துக் கொண்டிருக்க, பழங்குடி மனிதன் “சிங்கம் எமது குழுவைப் பாதுகாக்கும் புனித ஆவி” (Lion is the guardian spirit of our tribe) என்று சொன்னான். இந்தக் கற்பனைத் திறன் மனித இனத்திற்கே கை வந்த கலையாக உள்ளது. எதையெல்லாமோ சொல்லி, மிகப் பெரிய கூட்டத்தை மனிதனால் சேர்க்க முடிகிறது, அதையெல்லாம் கேட்டு நம்பிக்கையுடன் சேரக் கூட்டமும் தயாராக உள்ளது.
இந்தக் கற்பனையைப் பயன்படுத்தி நம் மனித இனம் பெரும் கூட்டமாக இயங்கிப் பல நல்ல காரியங்களை நிறைவேற்றுகிறது. ஆனால், இவ்வாறான கற்பனை சில சமயம் ஆபத்தாகும் அளவுக்கு கவனத்தைச் சிதறடிக்கக் கூடியதாகவும், தவறான பாதைக்கு அழைத்துச் சென்றாலும், இதனை பெரிய குழுக்களாக இணைந்து செய்யும்போது, அதிக எண்ணிக்கையினர் தெரிந்தவர், தெரியாதவர் என்ற வேறுபாடின்றி அனைவருடனும் இணைந்து மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் ஒன்றாக ஒத்துழைக்கும் திறனைக் கொண்டிருக்கிறார்கள்.
அதனாலேயே நமது மனித இனத்தால் இந்த உலகையே ஆள முடிந்தது என்கிறார் நூலாசிரியர்.
தற்கால மனிதன் – 10
(Sapiens தொடர்ச்சி)
புது மொழியும், வெட்டிப்பேச்சும் (gossiping)!
(Gossiping ஐ வெட்டிப்பேச்சு எனலாமா? சரியான தமிழ்ச் சொல் பிடிபடவில்லை).
நமது மனித இனம் தொடர்பாடலை இலகுவாக்க மொழியை உருவாக்கிக் கொண்டார்கள். தேனீக்கள், எறும்புகள் கூட எங்கே உணவு கிடைக்கும் என்பதை ஒரு தொடர்பாடல் முறை மூலம் தெரிவித்துக் கொள்கின்றன. குரங்குகள் மற்றும் பல விலங்குகள் வேறுபட்ட சத்தங்கள் மூலம் வேறுபட்ட செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்றன.
நமது மனித இனத்திடம் அறிவுப் புரட்சி மூலம் ஏற்பட்ட தொடர்பாடல் மொழி, ஏனைய விலங்குகளின் மொழியிலிருந்து வேறுபட்டதாய் இருந்தது.
- இந்த மொழி பல விடயங்களைத் தெளிவாகவும், விரிவாகவும் பகிர்ந்து கொள்ள உதவியிருக்கிறது. எ.கா. ஒரு குரங்கு தனது குழுவினருக்கு ஒரு சிங்கம் வருகிறது அல்லது கழுகு வருகிறது என்பதை வேறுபட்ட சத்தங்கள் மூலம் சொல்லும். கழுகு என்ற சத்தத்திற்கு ஏனைய குரங்குகள் மேலே அண்ணாந்து பார்க்கும். சிங்கம் என்ற சத்தத்திற்கு அவை தாவி ஓடி மரங்களில் ஏறிக்கொள்ளும். ஆனால் மனிதனோ எந்தத் திசையில், குறிப்பாக எந்த இடத்தில் சிங்கம் இருக்கிறது, என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைச் சொல்வான். குழுவினர் தமக்குள் உரையாடி எந்தெந்த வழிகளால் அந்த இடத்திற்குப் போகலாம், சிங்கத்தை எப்படித் துரத்தலாம், துரத்திவிட்டு சிங்கம் துரத்திக் கொண்டு செல்லும் காட்டெருமையை எப்படி மடக்கிப் பிடித்து, வேட்டையாடி, தமக்கு உணவாக்கலாம் என்பதை முடிவு செய்வான்.
- மனிதர்கள் பயன்படுத்தும் மொழி மனிதனிடம் காணப்பட்ட, காணப்படுகின்ற gossiping இயல்பை அடிப்படையாகக் கொண்டு தொடர்பாடல் திறனைக் கூட்டியிருக்கும் என்கிறார் நூலாசிரியர். Gossiping என்பது அன்று தொட்டு இன்றுவரை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. தற்போதும் ஈமெயில்கள், செய்தித்தாள் பத்திகள், தொலைபேசி அழைப்புகள் என்று பலவற்றிலும் இந்த வெட்டிப்பேச்சைப் பார்க்கிறோம்தானே? (ஏன் நல்ல பல விடயங்கள் இருந்தாலும் முகநூல், வாட்சப் எல்லாவற்றிலும் சிலசமயம் நாம் வெட்டிப் பேச்சில் மும்முரமாக இருக்கிறோமல்லவா? 😅) நம் இன மனிதனுக்கு இந்த இயல்பு ஆரம்பத்திலிருந்து மிகவும் இயல்பாக வந்திருக்கிறது.
மதிய உணவு இடைவேளையில் சந்தித்துக் கொள்ளும் இரு வரலாற்றுப் பேராசிரியர்கள் உலகப் போர் பற்றியோ, அறிவியல் மாநாட்டின் சிறு இடைவேளையில் (a coffee break) சந்தித்துக்கொள்ளும் இரு அணு இயற்பியலாளர்கள் (nuclear physicists) குவார்க்கு (quark) பற்றியோதான் பேசிக் கொள்வார்களா என்று கேட்கிறார் நூலாசிரியர். சில சமயம் பேசிக் கொண்டாலும், (அதைவிட முக்கியமான 😜) ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்ட பணத்தை Lexus வாங்கப் பயன்படுத்திய சக ஊழியர் பற்றியோ, கணவன் தன்னை ஏமாற்றியதைக் கண்டு பிடித்த பேராசிரியை பற்றியோ, பீடாதிபதிக்கும், துறைத் தலைவருக்கும் இடையிலான சச்சரவு பற்றியோ மிகவும் சுவாரசியமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்கிறார். இந்த gossiping சக மனிதர்களிடையேயான பிணைப்பைக் கூட்டி, அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை உள்வாங்கி, அவர்களை வெற்றிகரமான பெரிய குழுவாக இயங்க உதவுகிறது என்கிறார். (Gossiping இற்கு இப்படியொரு நேர்மறை விளக்கத்தை இப்போதுதான் பார்க்கிறேன் 😀).
ஆனாலும் இந்த மொழித் தொடர்பாடல் அல்லது gossiping மூலம் கூடும் கூட்டத்துக்கும் ஒரு வரையறை உண்டு. இந்த முறையில், ஒருவரிடம் ஒருவர் நேரடியாகப் பரிச்சயம் ஏற்பட்டு 150 பேரளவில் இணையலாம்.
ஏனைய மனித இனங்கள் உட்பட விலங்குகள் அனைத்தும் இந்த 150 எண்ணுக்குள்ளேயே கூட்டமாக இணைந்திருந்தன/ இணைந்திருக்கின்றன.
அப்படியிருக்க நமது இனம் மட்டும் எப்படி இந்த குறிப்பிட்ட வரம்பைத் தாண்டி, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என்று கூடி ஒத்துழைக்கிறார்கள்? இதன் அடிப்படை என்ன? ஒரே நாட்டைச் சேர்ந்தோர், ஒரே மதத்தைச் சேர்ந்தோர், ஒரே கொள்கையைச் சேர்ந்தோர், ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தோர் என்று பல வகையில், எத்தனையோ அறிந்த, அறியாத முகங்களுடன் கூட இணைந்து தொழிற்படுகிறார்கள், பயணிக்கிறார்கள். ஒரு பன்னாட்டு நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், உலகளவில் இலட்சக்கணக்கில் மனிதர்கள் இணைந்து தொழிற்படுகிறார்கள்.
மிக மிக அதிகமான எண்ணிக்கையில் கூட்டமாக மனித இனம் எப்படி இயங்குகிறது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.
தற்கால மனிதன் – 9
(Sapiens தொடர்ச்சி)
அறிவுப் புரட்சி (Cognitive revolution)!
நமது இனத்தவர் 300,000 ஆண்டுகளுக்கு முன்னரே உலக அரங்கில் தோன்றியிருந்தாலும், மிக நீண்ட காலத்திற்கு பெரிய மாற்றங்கள் எதுவுமின்றியே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் அந்தத் தொன்மையான நம் மூதாதையர்களின் மூளை அமைப்பு நமது மூளை அமைப்பை விட வேறுபட்டதாக இருந்திருக்கலாம். தற்போதைய மனிதர்களிடம் இருக்கும் கற்கும் திறன் (learning), நினைவாற்றல் (remembering), தொடர்பாடும் ஆற்றல் (communicating) அந்தத் தொன்மையான மனிதர்களிடம் இல்லாது இருந்திருக்கலாம். அதனால் , நீண்ட காலமாக நமது மனித இனம் ஏனைய மனித இனங்களைவிட மேலதிகமாக எந்த அனுகூலங்களையும் கொண்டிருக்கவில்லை.
பின்னர் 70000-30000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திலேயே அறிவுப் புரட்சி ஏற்பட்டது. படகு, விளக்கு, அம்பு-வில், ஊசி போன்ற புதிய கண்டு பிடிப்புகள் ஏற்பட்டன. சிங்க-மனிதனின் உருவச் சிலை போன்ற கலை வடிவங்கள் உருவாக்கப்பட்டன. மதங்கள் உருவாகின. “நீ எனக்கு இரண்டு கடற் சிப்பிகள் தந்தால் நான் உனக்கு ஒரு பாசிமணி மாலை தருவேன்” என்பது போன்று வணிகம் ஆரம்பித்தது. ஒரு குழுவுக்கு ஒருவன் தலைவன், ஏனையோர் அவனுக்குக் கட்டுப்பட்டவர்கள் போன்ற
சமூக அடுக்கு உருவாகியது. அந்தக்கால மனிதர்களிடம் நவீன மனிதர்களிடம் இருக்கும் அறிவாற்றல், படைப்பாற்றல் இருந்திருக்கிறது. அப்போதிருந்த சூழ்நிலைக்கேற்ப அந்த ஆற்றல் வெளிப்பட்டிருக்கிறது.
இம்மனித இனத்தில், இப்படியான அறிவுப் புரட்சி ஏற்படக் காரணம் தற்செயலாக ஏற்பட்ட மரபணுப் பிறழ்ச்சியினால் மனித மூளையில் ஏற்பட்ட மின்பிணைப்பு மாற்றங்களாக இருக்கும். இதனை Tree of knowledge mutation என்கிறார்கள். இந்த மாறுதல் மூலமாக மனித இனம் ஒரு புது வகை மொழியை தம்மிடையே பயன்படுத்தி தமது தொடர்பாடல் முறையை முன்னேற்றிக் கொண்டது.
முன்பிருந்த வேறு மனித இனங்களில் ஏற்படாமல் தற்கால மனித இனத்தில் இந்த மரபணுப் பிறழ்ச்சி ஏன் ஏற்பட்டது? நமது இனத்திற்கு யோகமடித்துக் கிடைத்த ஒரு வாய்ப்புத்தான் 😀.
தற்கால மனிதன் – 8
(Sapiens தொடர்ச்சி)
உணவுச் சங்கிலியில் நமது இனம்!
நமது இனத்தவர் உணவுச் சங்கிலியில் ஒரு நடுநிலையிலேயே பல்லாண்டு காலம் வாழ்ந்தார்கள். 300000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவில் கூர்ப்படைந்த தற்கால மனிதர்கள் ஆப்பிரிக்க – ஆசியப் பகுதிகளில் தோன்றினார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழல் தொகுதியிலேயே வாழ்ந்தார்கள்.
இப்போதிலிருந்து 70000 – 30000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் மனிதர்கள் படகு, விளக்கு, அம்பு-வில், சூடான ஆடைகளைத் தைத்துக்கொள்ளத் தேவையான ஊசி போன்றவற்றைக் கண்டு பிடித்தார்கள். இந்தக் காலகட்டமே அறிவுப் புரட்சிக்கான காலமாக அமைந்தது.
கிட்டத்தட்ட 45000 ஆண்டுக்கு முற்பட்ட காலம் வரையில், அவுஸ்திரேலியா போன்ற கடலினால் சூழப்பட்ட உலகின் பல பகுதிகள் மனித இனத்தினது காலடி படாமல் இருந்தன. மனித இனத்தின் காலடி மட்டுமல்லாமல், மனித இனத்துடன் கூடவே சூழலைப் பங்கிட்டு வந்த வேறு விலங்கினங்களோ, தாவர இனங்களோ அந்த இடங்களில் இருக்கவில்லை. அந்த இடங்கள் தமக்கென ஒரு தனித்துவமான சூழல் தொகுதிகளைக் கொண்டிருந்தன. எப்போது மனித இனம் தனது அறிவினைப் பயன்படுத்தி, கடலைக் கடந்து சென்று, முற்றிலும் புதிய சூழல் தொகுதிகளுக்குத் தம்மை இசைவாக்கப்படுத்தித் தம்மைத் தக்க வைத்துக் கொண்டதோ, அப்போதே மனித இனம் உணவுச் சங்கிலியின் உச்சியை நோக்கி நகர்ந்து மிக விரைவான வளர்ச்சியை அடைந்தது.
இன்னும் சரியாகச் சொன்னால் அவுஸ்திரேலியாவில் தம் காலடித் தடங்களைப் பதித்த மனித இனம் சூழலுக்குத் தம்மை இசைவாக்கம் செய்ததுடன், சூழலைத் தமக்கேற்றபடி மாற்றியமைக்க ஆரம்பித்தார்கள். அந்த இடங்களில் ஏற்கனவே இருந்த பல விலங்கினங்கள், தாவர இனங்கள் அழிவடைய நேரிட்டது. தற்கால மனித இனம் தம்மைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத் தம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள், சூழல் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆரம்பித்தது.
தற்கால மனிதன் – 7
(Sapiens தொடர்ச்சி)
மற்ற மனித இனங்களுக்கு என்ன நடந்தது?
நமது இனம் உலகின் வேறு பகுதிகளுக்கு நகரத் தொடங்கியதும் வேறு இனத்தவருடன் வேட்டையாடல், உணவு சேகரித்தல் என்பவற்றில் போட்டி ஏற்பட்டது. நமது இனத்திடம் மற்ற இனங்களிடம் இருந்ததை விடவும் சிறந்த தொழில் நுட்பமும், சமூகமாக இயங்கும் திறமையும் இருந்ததால் ஏனைய இனங்களால் ஈடுகொடுக்க முடியாமல் அழிந்து போயினர். நியாண்டதால் என்ற மனித இனம் நம்மவர்களைவிட உடல் வலிமை கூடியவர்களாக இருந்தமையால் முதல் தடவை நம்மவர்கள் தோற்றுப் போனார்கள். ஆனாலும் நம்மவர்கள் மிகப் பெரிய கூட்டமாக, சமூகமாக ஒருங்கிணைந்து, திட்டமிட்டு, புதிய வியூகம் வகுப்பதில் வல்லவர்களாக இருந்தமையால் அவர்களால் நியாண்டதால் மனிதர்களைப் பின்னர் வெற்றிகொள்ள முடிந்தது.
மற்ற மனித இனங்களிலிருந்து ஒரு சிலர் மட்டும் நம் இனத்துடன் கலந்து விட்டனர்.
சகிப்புத் தன்மை என்றால் என்ன என்று கேட்கக் கூடிய நமது இனம் வாழ்வுக்குத் தேவையான வளங்களுக்கான போட்டியில், ஏனைய மனித இனங்களை வன்முறை மூலம் அழித்து ஒழித்திருக்கலாம் என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையாக உள்ளது. நமது இனத்துக்குள்ளேயே வெறும் தோல் நிறத்தை வைத்து, மதத்தை வைத்து, நாட்டை வைத்து இன்னும் எதையெல்லாமோ காரணம் காட்டி இன்றைய காலகட்டத்தில் வன்முறையில் நம் மக்கள் ஈடுபடும்போது, எமது முன்னோர்கள் மட்டும் சும்மா இருந்திருப்பார்களா? அதுவும் வேறொரு இனத்திடம் பரிதாபம் காட்டியிருப்பார்களா? அவர்களிடம் மட்டும் சகிப்புத்தன்மை இருந்திருக்கவா போகிறது?
கடந்த 10000 ஆண்டுகளில் நமது இனம் மட்டுமே இவ்வுலகில் வாழும் மனித இனமாக இருக்கிறது. ஏனைய இனங்களும் இப்போது இருந்திருந்தால், என்ன மாதிரியான சமூகம், பண்பாடு, அரசியல் இப்போது இருந்திருக்கும்?
அவர்கள் அழிந்து போனதால், நமது இனமே படைப்பின் உருவகம் போலவும், நமக்கும் விலங்கு இராச்சியத்தின் ஏனைய உயிரினங்களுக்கும் இடையில் பென்னாம் பெரிய இடைவெளி இருப்பது போலவும் கற்பித்துக் கொள்வது நமக்கு இலகுவாகி விட்டது.
சில படங்கள்!
‘அயலி’ பார்த்தாச்சு. பின் பகுதியில் சில இடங்கள் யதார்த்தத்தை கொஞ்சம் மீறியதாகத் தோன்றினாலும், சொல்லப்பட வேண்டிய பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளது 👌🏻.
எனக்கு ஒரு விடயம் புரிவதில்லை… 🤔. ஒரு பெண் தெய்வமாகவே இருந்தாலும் பெண்களின் பிரச்சனைகளை அந்தத் தெய்வம் புரிந்து கொள்வதில்லை என்று பெண்களே எப்படி நம்புகிறார்கள் அல்லது நம்ப வைக்கப்படுகிறார்கள்? இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இன்னமும் சில விடயங்கள் நம்ப வைக்கப்படுவதுதான் ஆச்சரியம்.
அண்மையில் பார்த்த இரு படங்கள் மிகவும் பிடித்தது.
- செம்பி:
கோவை சரளா நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் இருந்து விலகி, இங்கே வேறுபட்ட ஒரு உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதில் நடிக்கும் குழந்தையும் கூட மிகை நடிப்பில்லாமல், இயல்பாக நடித்திருக்கிறாள். சில காட்சிகள் யதார்த்தத்திற்கு மீறியதாகத் தோன்றினும் படத்தின் கதையும், முடிவும் பிடித்தது. 🙂 - நண்பகல் நேரத்து மயக்கம்:
மலையாளப் படம் என்று எண்ணிப் பார்க்கத் தொடங்கினாலும், தமிழ்ப் படம் என்று நினைக்க வைக்குமளவு தமிழ் வாசனை. மம்முட்டியினதும், சில பார்த்த முகங்களினதும், பல முகமறிந்திராத கதாபாத்திரங்களினதும் இயல்பான நடிப்புடன் படம் நகர்கிறது.
நீண்ட கதை எதுவுமில்லை. ஒவ்வொரு பாத்திரத்தினதும் உணர்வுகளை இலகுவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
காதை அடைக்கும் பின்னணி இசை இல்லை, பதற வைக்கும் வன்முறை இல்லை.
பின்னணியில் போகும் தமிழ்ப் பட வசனங்கள் சில இடங்களில் சத்தமாக இருப்பதால் காட்சியை மனம் முழுமையாக உள் வாங்க முடியாமல் செய்தது. அதே வேளை சில இடங்களில் சத்தம் மிகக் குறைவாக இருப்பதால் text மட்டும் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. அதனால் இரண்டு தடவை படம் பார்த்தேன் 😀.
படத்தின் முடிவில் எல்லோரும் நடந்து பேருந்தை நோக்கிப் போகிறார்கள். அடுத்த காட்சியில் பேருந்து புறப்பட முன் மம்முட்டி மட்டுமே விளித்திருக்க மற்ற அனைவரும் தூக்கத்தில். அப்படியானால், அனைத்துமே மம்முட்டியின் ஒரு நண்பகல் மயக்கத்தில், அல்லது கனவில் நடந்ததுதானா? 🤔
எப்படியோ… கதையில் யதார்த்தம் உண்டா என்று ஆராயாமல் பார்த்தால், அங்கு வரும் மனிதர்களின் உணர்வுகளுடன் ஒன்றிப் போக முடிகிறது.
தற்கால மனிதன் – 6
தற்கால மனிதன் – 6
(Sapiens தொடர்ச்சி)
நாம் இனக்கலப்பில் (interbreeding) உருவானவர்களா?
150000 ஆண்டுகளுக்கு முன்னர்வரை மனிதர்கள் (Homo) ஒரு விளிம்புநிலை உயிரினமாகவே இருந்தனர். எல்லா மனித இனங்களும் சேர்த்தே உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 மில்லியன் வரையிலேயே இருந்தனர். இதில் நமது இனமும் (sapiens) உலகின் ஒரு மூலையில் தானுண்டு, தன் வேலையுண்டு என்றுதான் வாழ்ந்து வந்தது.
70000 ஆண்டுகளுக்கு முன்னர் நம் இனத்தவர் ஆப்பிரிக்காவில் இருந்து அரேபியாவை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். (அவர்களுக்கு வேறு இடம் பார்க்கும் ஆசை தோன்றியதோ…. அல்லது குறிப்பிட்ட இடத்தில் சனத்தொகை கூடியதும் தேவைகளை நிறைவு செய்வதில் இடைஞ்சல் ஏற்பட்டதோ… ஏதோ ஒரு காரணம்.) பின்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக ஏற்பட்ட நகர்வினால் நமது இனம் உலகம் முழுவதும் பரந்துவிட்டது.
அப்படி அவர்கள் நகர்ந்தபோது, அங்கங்கே ஏற்கனவே இருந்த ஏனைய மனித இனங்கள் இல்லாது போயின. காரணம் என்ன? இரண்டு விதமான கொள்கைகள் முன் வைக்கப்படுகின்றன.
முதலாவது கொள்கை சொல்வது: அங்கிருந்த இனங்களுடன் நமது இனம் கலந்து, பிணைந்து இனப்பெருக்கம் செய்து (interbreeding) இரண்டறக் கலந்து விட்டார்கள். இது உண்மையாக இருந்தால், நமக்கும் வேறு ஒரு மனித இனத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்.
இரண்டாவது கொள்கை சொல்வது: நமது இனத்திற்கும், ஏனைய இனங்களுக்கும் இருந்த மரபியல் இடைவெளி, பாலம் போட முடியாத அளவுக்கு இருந்தமையால் இனப்பெருக்கம் சாத்தியமில்லை. அவர்களுக்கும் நம்மினத்தவருக்கும் இடையில் இருந்த ஒவ்வாமை, மற்றும் வெறுப்பு இன அழிப்புவரை போயிருக்கலாம். அதனால் முன்னர் இருந்த இனம் அழிந்துபோய் நமது இனத்தால் மாற்றீடு (replacement) செய்யப்பட்டுவிட்டது.
இரண்டாவது கொள்கையே பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாகவாவது இனங்களுக்கிடையிலும் இனப்பெருக்கம் (interbreeding) நடந்திருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
புதைபடிவங்களில் பெறப்பட்ட ஐரோப்பாவில் வாழ்ந்த நியண்டர்தால் மனித இனத்தின் 1- 4% டீ.என்.ஏ நமது இனத்தின் டீ.என்.ஏ யுடன் ஒத்திருந்ததைக் காட்டி ஆய்வறிக்கை 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினரின் டீ.என்.ஏ யானது, சைபீரியாவின் டெனிசோவா குகையில் வாழ்ந்த ஒரு மனித இனத்தின் டீ.என்.ஏ யுடன் 6% ஒத்திருந்தது.
எனவே நாம் முழுமையாக பழைய இனங்களுடன் இரண்டறக் கலக்காவிட்டாலும், வேறு இனத்துடன் குறைந்த வீதத்திலாவது கலந்து கொண்டவர்கள்தான். பழைய மனித இனங்களின் ஒரு சில அதிர்ஷ்ட மரபணுக்கள், தற்கால மனித இனமான sapiens எனும் விரைவு வண்டியில் சவாரி எடுத்துக் கொண்டன.
(வேறு இனத்துடனான (species) கலப்பில் உருவான நாம், இப்போது நமது இனத்திற்கு உள்ளேயே கலந்து கொள்ள விரும்பாமல் சாதி, மதம், நிறம் என்று எத்தனை வேறுபாடுகளை உருவாக்கி வைத்து அட்டகாசம், ஆர்ப்பாட்டமெல்லாம் பண்ணுகின்றோம்.)
Artificial Intelligence’s poem on Sapiens!
What a positive view that the AI has 👏🏻
I asked chatGPT to give a poem on Sapiens!
(My request originated by the influence of the book I’m reading 😜)
ChatGPT’s poem below:
Sapiens, wise beyond measure
Our minds so vast, so full of pleasure
We walk upright, we use our hands
To build great things across the lands
Our language skills are honed and sharp
We communicate from heart to heart
Our thoughts and dreams are deep and grand
As we explore this wondrous land
From ancient times to modern day
We’ve carved our path along the way
We’ve made our mark on history
Advancing with each mystery
Sapiens, we’ve come so far
Our future bright just like a star
With knowledge, hope, and empathy
We’ll build a better world, you’ll see.