ஈழத்து முற்றத்தில் நானும்!
முற்றம் என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இடம். ஈழத்தில், எமது வீட்டு முற்றத்தை நினைக்கும்போது, எத்தனையோ இனிய நினைவுகள். அவற்றையெல்லாம் மீண்டும் எமது வாழ்வில் கொண்டு வர முடியுமா, முடியாமலே போய் விடுமா என்பதுதான் வருத்தம்.
முற்றத்து மாமரம், அதன் நிழலில் மதிய உணவுக்குப் பின்னரான ஓய்வெடுப்பு, முற்றத்தில் விளையாட்டு, இரவு நேரத்தில் முற்றத்தில் படுத்தபடி, வானத்து நட்சத்திரங்களை இரசித்தது, நிலா வெளிச்சத்தில் அமர்ந்து பேசிச் சிரித்தது, அதே வெளிச்சத்தில் விளையாடியது, இரவு உணவை அம்மாவின் கையிலிருந்து பெற்று உண்டது. அது மட்டுமா, மதிய நேரத்தில் முற்றத்து கொதிக்கும் வெண்மணலில் சூடு தாங்காமல் வெறும் காலுடன் ஓடுவது….. இப்படி எத்தனை எத்தனை நினைவுகள், ம்ம்ம்ம்
அதுசரி, நான் என்னவோ சொல்ல வந்து, எதை எதையோ சொல்லிக் கொண்டு போறேன். நான் சொல்ல வந்தது ஈழத்து முற்றம் வலைப் பதிவுபற்றி :).
ஈழத்தின் பிரதேசவழக்குகள், பேச்சு வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள், சரித்திரம் சம்பந்தமான விடயங்கள் போன்ற பலவற்றைப் பகிரும் குழும வலைப்பதிவாக, ஈழத்துமுற்றம் வலைப்பதிவு வந்திருக்கிறது.
ஈழத்து முற்றத்தில் 51 பதிவர்கள் (தற்போதைக்கு. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என நம்புகின்றேன்) பங்களித்து வருகிறார்கள். அந்த பங்களிப்பாளர்களில் நானும் ஒருத்தி. நான் எழுதுவதென்னவோ மிகக் குறைவுதான் என்றாலும், ஒரு கூட்டு வலைப் பதிவில் நானும் எழுதுவதில் (ஏதொ ஒப்புக்கு சப்பாணியாக) மகிழ்ச்சி. அங்கே நானெழுதிய பதிவுகளை இங்கேயும் சேமித்து வைக்கும் எண்ணத்தில் இந்த பதிவு. 🙂 (ஏதோ பெரிசா எழுதிக் கிளிச்ச மாதிரி, இங்க சேமிப்பு வேறயா???
மறுமொழியொன்றை இடுங்கள்