தற்கால மனிதன் – 3

Posted On மார்ச் 17, 2023

Filed under uncategorized

Comments Dropped leave a response

(Sapiens தொடர்ச்சி)

எனது நீண்ட நாளைய கேள்விகளுக்கு இந்த நூலில் விடை கிடைத்தது.

அதி உயர் விருத்தியடைந்த மனித இனத்தில் சிக்கலான குழந்தை பிறப்பு ஏன்?

ஏனைய விலங்குகள் குட்டியை ஈன்று சில மணி நேரத்திற்குள் குட்டிகள் எழுந்து, ஓடியாடி விளையாடித் தானே தன் வேலையைப் பார்க்கத் தொடங்கி விடும்போது மனிதக் குழந்தைகள் மட்டும் சுதந்திரமாக இயங்க ஏன் நீண்ட காலம் எடுக்கிறது?

ஏனைய விலங்குகளிலிருந்து வேறுபட்டு மனித மூளை பெரிதாகவும், விருத்தியடைந்தும் செல்லத் தொடங்கியது. மனிதன் ஒரு சோடிக் கால்களை மட்டும் நகர்வுக்குப் பயன்படுத்திக் கொண்டு, நிமிர்ந்த நிலைக்கு வந்தமையால் கைகள் பல்வேறு மேலதிக பயன்பாடுகளில் ஈடுபடுத்தப்படக் கூடியதாக இருந்ததுடன், பார்வை மட்டம் உயர்ந்து, எதிரிகளை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள உதவியது. முக்கியமாக மேலதிக ஆற்றல் பெற்ற கைகளைக் கொண்டு சிக்கலான செயற்பாடுகளைச் செய்வதுடன், பல நவீன கருவிகளையும் உருவாக்க முடிந்தது.

நிமிர்ந்த நிலையும், பெரிய மூளையும் வெற்றியை நோக்கிய பாதையைத் தந்தாலும், சில இடர்களையும் கூடவே தந்தது.

நிமிர்ந்த நிலைக்கு வந்து பெரிய பாரமான மூளையைத் தாங்க வேண்டி வந்தமையால் முதுகு வலி, கழுத்து வலியும் கூடவே வந்தது. பெண்களுக்கு இன்னும் அதிக இடர் தரக் கூடியதாக, நிமிர்ந்த நிலைக்கு ஏற்ப இடுப்பெலும்பு சிறியதாகி பிறப்புப் பாதை சுருங்கியது. எனவே பெரிய தலை கொண்ட குழந்தை பிறப்பின்போது, பிறப்பு சிக்கலாகி, பெண்களின் இறப்பு வீதம் அதிகரித்தது. அதனை ஈடுகட்ட மனிதக் குழந்தைகள் தமது முழுமையான விருத்தியை அடைவதற்கு முன்பே, சிறிய உருவில் பிறக்க ஆரம்பித்தன. அப்படிப் பிறக்கும் குழந்தைகளின் தாய் தப்பிப் பிழைத்து மேலதிக குழந்தைகளை உருவாக்க முடிந்ததால், அந்த இயல்பு இயற்கைத் தேர்வில் தேர்ச்சி பெற்றது.

மனிதக் குழந்தைகள்
முழு வளர்ச்சியின்றிப் பிறப்பதால் தாயின் உடலை விட்டு வெளியேறிய பின்னரே முழு வளர்ச்சியை நோக்கி நகர்கிறார்கள். அதனாலேயே நீண்ட காலத்திற்கு அவர்களைச் சீராட்டிப் பாராட்டும் தேவை ஏற்பட்டது.

தற்கால மனிதன் – 2

Posted On மார்ச் 11, 2023

Filed under uncategorized

Comments Dropped leave a response

தற்கால மனிதன் – 2 (Sapiens தொடர்ச்சி)

இறுதி மனித இனம்!

2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் உருவாகிய ஒரு மனித இனம் கற்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இவர்கள் பின்னர் உலகின் பல்வேறு இடங்களுக்கு நகர்ந்தார்கள். தவிர பல்வேறு மனித இனங்கள் வெவ்வேறு இடங்களில் உருவாகத் தொடங்கியிருக்கிறது. அப்படி உருவாகிய இனங்களின் பரிணாம வளர்ச்சியில், அவர்களுக்குத் தசைகள் கூர்ப்பு அடைவதற்குப் பதிலாக நரம்பணுக்கள் கூர்ப்படைய ஆரம்பித்தன. அதன்மூலம் பெரிய மூளையையும், தொடர்ந்து அறிவையும் வளர்த்துக் கொண்டார்கள். சிம்பன்சி ஒன்றுடன் நேருக்கு நேர் நின்று மோதும் தசைவலு இந்த மனிதர்களிடம் இல்லாவிட்டாலும், பாதுகாப்பான தூரத்தில் ஒளிந்திருந்து அவற்றைத் தாக்குவதற்கான ஆயுதங்களைத் தயாரிக்கும் அறிவை வளர்த்துக் கொண்டார்கள்.

Neander Valley யில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மனித இனம் Homo neanderthalensis என்ற பெயருடன் ஐரோப்பா, மேற்கு ஆசியாவில் வாழ்ந்திருக்கிறது. நிமிர்ந்த மனிதன் என அழைக்கப்பட்ட Homo erectus கிழக்கு ஆசியாவில் வாழ்ந்திருக்கிறான். இந்தோனேசியாவில் Solo Valley யில் வாழ்ந்த மனிதன் Homo soloensis என்றும், Flores இல் வாழ்ந்த மனிதன் Homo floresiensis என்றும், சைபீரியாவின் Denisova Cave இல் வாழ்ந்த மனிதன் Homo denisova
என்றும் அழைக்கப்படுகிறான். இன்னும் பல மனித இனங்கள் இருந்தன என்பது தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்த புதைபடிமங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது. இன்னும் இப்படி எத்தனை மனித இனங்கள் (அதாவது காணாமல்போன நமது உறவினர்கள்) கண்டுபிடிக்கப்படுவார்களோ தெரியாது என்கிறார் நூலாசிரியர்.

இன்றைய கால கட்டத்தில், நம்மைத் தவிர ஏனைய அனைத்து மனித இனங்களும் உலகிலிருந்து அழிந்துவிட்டன அல்லது அழிக்கப்பட்டு விட்டன. அவற்றில் Homo erectus கிட்டத்தட்ட 2 மில்லியன் ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தமையால், நம்மை விடவும் (Homo sapiens ஐ விடவும்) நீண்ட காலம் வாழ்ந்த மனித இனமாக இருக்கும் என்றும் கூறுகிறார். காரணம் கிட்டத்தட்ட 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நமது இனம் (அதாவது Homo sapiens), இன்னும் 1000 ஆண்டுகள் இருப்பதே சந்தேகம் என்பதால் (உலகம் போகும் போக்கைப் பாரு என்று சொல்லாமல் சொல்கிறார்), Homo erectus இன் சாதனையை முறியடிப்பது நினைத்துப் பார்க்க முடியாது என்கிறார். 300000 ஆண்டுகள் எங்கே, 2 மில்லியன் ஆண்டுகள் எங்கே?

2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 10,000 ஆண்டுகள் முன்னர் வரை ஒன்றுக்கு மேற்பட்ட மனித இனங்கள் ஒரே நேரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு இனம் அழிவடைந்திருக்கிறது. ஆனால் எங்களுடன் கூடவே, எங்களை ஒத்த வேறு மனித இனமும் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நம்மை ஒத்த மனித இனங்களை, நாமே அழித்திருந்தால் அதற்குக் காரணம் என்னவாகஇருந்திருக்க முடியும் என்பதற்கு அவருக்குத் தோன்றிய காரணம், அந்த மனிதர்கள் புறக்கணிக்க முடியாத அளவுக்கு நம்மை ஒத்திருந்ததும், பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நம்மில் இருந்து வேறுபட்டிருந்ததுமாக இருக்கலாம் (may be they were too familiar to ignore and too different to tolerate) என்கிறார்.

தற்கால மனிதனால்தான் அந்த இனங்கள் அழிந்தனவா என்ற கேள்வியை மீறி, தற்கால மனிதர்கள் எந்த இடங்களில் எல்லாம் சென்று கால் பதித்தார்களோ, அந்த இடங்களில் எல்லாம் இருந்த ஏனைய மனித இனங்கள் அழிவடைந்தன. அவர்கள் விட்டுச் சென்றவை எலும்புகள், சில கல்லினால் ஆன உபகரணங்கள், எங்களுடைய டீ.என்.ஏ. யில் சில மரபணுக்கள். கூடவே பல பதில் கிடையாக் கேள்விகளையும், இறுதி மனித இனமாக இருக்கும் நம்மையும் விட்டுச் சென்றுள்ளார்கள் என்கிறார்.

தற்கால மனிதன் – 1

Posted On மார்ச் 11, 2023

Filed under uncategorized

Comments Dropped leave a response

தற்கால மனிதன் – 1 Sapiens!

யுவல் நோவா ஹராரி (Yuval Noah Harari) ஒரு இஸ்ரேலிய அறிவுஜீவி. வரலாற்றாசிரியரான இவர் ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் ( Hebrew University, Jerusalem) வரலாற்றுத் துறையில் பேராசிரியராக உள்ளார்.

இவர் எழுதிய Sapiens என்ற நூலை ஒலி வடிவில் கேட்க ஆரம்பித்தேன். அச்சு வடிவிலான நூலைக் கையில் வைத்து வாசித்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றவே நூலை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.

மனித வரலாற்றை அறிவு பூர்வமாக, மிகவும் எளிய நடையில், சுவாரசியம் நிறைத்து தந்திருக்கிறார்.

13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அண்டம் தோன்றிய இயக்கவியல் பற்றியும், அணுக்கள், மூலக்கூறுகள் தோன்றிய வேதியியல் பற்றியும் கூறிவிட்டுப்,
பின்னர் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உலகம் தோன்றியது பற்றியும், 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிரினங்கள் தோன்றிய உயிரியல் பற்றியெல்லாம் கூறிவிட்டு, 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய நமது மூதாதையர் பற்றிக் கூறி, இறுதியாக மனிதன் தோன்றிய 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திற்கு வருகிறார்.

இந்த நூலை வாசிப்பவர் அனைவரும் Homo sapiens என்று கருதுவதாகக் கூறி ஆரம்பிக்கிறார் 😀. தற்கால மனிதர்களின் உயிரியற் பெயர் Homo sapiens (Homo = man and sapiens = wise). தற்போதைய மனித இனத்திற்கு மூதாதையர்களான வேறு மனித இனங்கள் பற்றியும், அவர்களது குணாம்சங்கள் பற்றியும், அவர்களது மூதாதையர்கள் பற்றியும் சொல்கிறார்.

ஆனாலும் அந்த உண்மையை மனித இனம் (அதாவது தற்கால மனித இனம்) ஒத்துக்கொள்ளப் பிரியப்படாமல், இரகசியமாக வைத்துவிட்டுத் தாங்கள் வேறு எந்த ஒரு உயிரியல் குடும்பத்தையும் (biological family) சார்ந்தவர்களல்ல என்றும், தாங்கள் எந்த ஒரு விலங்கு இனத்துடனும் (species) எந்த ஒரு தொடர்பும் அற்றவர்கள் போலவும் காட்டிக் கொள்ளவே விரும்புகிறார்கள் என்றும் கூறுகிறார்.

இதை வாசித்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்னர் (நாமெல்லாம் வலைப்பதிவுகளில் நேரம் செலவளித்த ஒரு கால கட்டத்தில்) ஒருவர் வலைப் பதிவொன்றில் “குரங்கிலிருந்து மனிதன் வந்திருந்தால் இப்ப இருக்கிற குரங்கெல்லாம் ஏன் இன்னும் மனிதனாகவில்லை?” என்று கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது. இந்தக் கேள்விக்குரிய பதிலாக இந்த நூலில் நூலாசிரியர் மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறுவது … 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிம்பன்சிக்கு இரண்டு மகள்கள் பிறந்தார்கள். ஒரு மகள் தற்போதைய சிம்பன்சிகளுடைய மூதாதையராகவே இருக்க, மற்றைய மகள் (சில மரபணுப் பிறழ்வுகளால்) நமது மூதாதையராக மாற்றம் பெற்று விட்டார்.

அந்த மூதாதையர்கள் மனிதர்கள் என்ற சாதியைச் (Genus Homo), சேர்ந்தவர்களாயினும், வேறு இனத்தைச் (species) சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அப்படி நம்மை விடவும் வேறு மனித இனங்களும் (species) இருந்த காரணத்தால், Homo என்ற சாதியில் உள்ளடக்கப்படும் அனைத்து உயிரினங்களும் (தற்கால மனிதன் உட்பட) மனிதர்கள் என்பதால் அவர்களையெல்லாம் human என்றும், தற்கால மனிதனை sapiens என்றும் நூலில் குறிப்பிடப் போவதாகச் சொல்கிறார். அதனால்தான் நூலின் பெயர் Sapiens.

பி.கு.: இந்தப் பதிவை முழுமையாக வாசிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். வாசித்துவிட்டால், ஏதாவது வகையில் எனக்குத் தெரியப்படுத்தி விடுங்கள். ஒரு சின்ன புள்ளிவிபரத் தேவைக்காக இந்த வேண்டுகோள் 😀 .

ஒரு நல்ல மனிதரை இழந்தோம்!

Posted On ஜூன் 21, 2020

Filed under uncategorized

Comments Dropped leave a response

இந்தப் பழைய பதிவை என்னுடன் பகிர்ந்தமைக்கு முதலில் நன்றி ஜெயகுமார்!

https://m.facebook.com/story.php?story_fbid=1530599960289175&id=100000175560903

அருமையான, இனிமையான, அன்பான இரவீந்திரநாத் sir ஐப் பற்றியும், அவரது குடும்பம் பற்றியதுமான நினைவுகளை உங்கள் பதிவு மீண்டும் கிளறிச் சென்றுள்ளது.

பேராதனையிலிருந்து வேலைக்காக கிழக்கிலங்கைப் பல்கலைக்கு வந்தபோது, என்னை நேர்காணல் செய்தவர்களில் முக்கியமானவர். நேர்காணலின்போதும், அதன் பின்னர் அவர் தலைவராக இருந்த துறையில் வேலையில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர், துறைத் தலைவராக அவருடனான சந்திப்பிலும், அதன் பின்னர் அவருடைய துறையில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியபோதும் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.

பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், எளிமையானவர். வேலை தொடர்பான விடயங்களாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட விடயங்களாக இருந்தாலும் சரி, தயங்காமல் ஆலோசனை பெற அவரை அணுகுவது மிகவும் இலகுவாக இருந்தது. வேலைத் தளத்தில், தான் துறைத் தலைவர் என்ற எந்தவித ஆடம்பரமுமின்றி மிகவும் எளிமையாக பல விடயங்களையும் பகிர்ந்து கொள்வார். திறமைகளை அடையாளம் கண்டு கொள்வதில், பாராட்டுக்களைத் தாராளமாக வழங்குவதில், நகைச்சுவையாக உரையாடலை இனிமையாகச் நகர்த்திச் செல்வதில் வல்லவர்.

அவர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினர் அனைவருமே அன்பானவர்கள்தான். நான் அங்கேயிருந்த காலத்தில், மிக நெருங்கிப் பழகிய நண்பிகள் மூவரும் (ஜெயரதி, சொர்ணா, சீதா), எனக்கு முன்னரே கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் இருந்து போய்விட்டார்கள். அப்போது நான் தனித்து விடப்பட்டதான ஒரு உணர்வு எனக்கும் இருந்தது. நாங்கள் ஒன்றாக சென்று வருவதைப் பார்த்திருந்த இரவீந்திரநாத் sir இன் அருமை மகள்கள், நான் தனியாக இருப்பதாக உணர்ந்து அவரிடம் சென்று “அவ இப்ப தனியா இருக்கிறா. நாங்கள் அவவோட friends ஆக இருக்கலாமா? அவவோட போய் உடன் இருக்கலாமா?” என்று கேட்டதாகவும், தான் “தாராளமாகப் போய் இருங்கோ” என்று சொன்னதாகவும் என்னிடம் கூறினார். அவர்கள் இருவரும் மாலை நேரங்களில் வந்து என்னையும் கூட்டிக்கொண்டு, நான் முன்னர் எனது நண்பிகளுடன் மாலை வேளைகளில் நடந்து செல்லும் இடங்களெல்லாம் நடப்பார்கள். தங்கள் வீட்டிற்கும் அடிக்கடி கூட்டிப் போவார்கள்.
நான் முன்னர் நண்பிகளுடன் இருந்து கதைத்த இடங்களில் என்னுடன் இருந்து கதைப்பார்கள் / பாடுவோம். அப்போது (1988-89) அவர்கள் இருவரும் குழந்தைகள். நாம் என்ன கதைத்தோம் என்பது நினைவில் இல்லை. ஆனால் அவர்களது அன்பு என்னைக் கட்டிப் போட்டது என்னவோ உண்மை. இப்போது நினைத்தாலும், கண்கள் பனிக்கின்றன. அவர்கள் மிகச் சிறியவர்களாக இருந்தமையால் என்னை நினைவிருக்காது என்றே நினைக்கிறேன். ஒரு சில மாதங்களில் நானும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தை விட்டு, வவுனியா விவசாயக் கல்லூரியில் விரிவுரையாளராகப் போய்விட்டேன். நான் வேலை விட்டு நீங்கும்போது, அவர் எனக்கு எழுதித் தந்த சான்றிதழ் சிறந்ததாகவும், இன்னொருவரின் முன்னேற்றத்திற்காக அடி மனதிலிருந்து எழும் வார்த்தைகளாகவும் அமைந்திருந்தது. விரிவுரையாளர் பணியுடன் மட்டும் நின்றுவிடாமல், ஆராய்ச்சித் தளத்திலும் காலூன்றுவது நல்லது என்று எடுத்துக்கூறி, என்னை உற்சாகப்படுத்தி, தானே ஓர் ஆய்வுக்கான திட்டத்தையும் தொடக்கித் தந்தார்.

பின்னர் 1993 இறுதியில் நோர்வேக்கு இடம் பெயர்ந்து விட்டேன். நான் இங்கு வந்த பின்னர் அவர் இரு தடவைகள் நோர்வேக்கு தொழில் நிமித்தமாக வந்து போனார். ஒவ்வொரு தடவையும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைக்க மறக்கவில்லை. அவர் வந்திருந்த இடமும், நாம் வசிக்கும் இடமும் தூரமாக இருந்தமையாலும், மிகக் குறுகிய நாட்களே அவர் நோர்வேயில் இருந்தமையாலும் அவர் எங்களை வந்து சந்திக்க முடியாமல் போயிற்று. அப்போது அவர் என்னிடம் கூறிய “அடுத்த தடவை நோர்வே வரும்போது, உங்களிடம் வருவேன்” என்று கூறிய வார்த்தைகளே இறுதியாகப் போனது வேதனை ☹.

எனக்கு மட்டுமல்ல எல்லோரிடமும் அவர் இதே அன்புடனும், அக்கறையுடனும்தான் நடந்து கொண்டிருப்பார் என்பது தெரியும். அவரின் இயல்பே அதுதானே. மேலும் நான் திருமணம் முடித்து வந்த பின்னர் எனது மாமனார், மாமியார் இவரைத் தெரியும் என்றும், அவர் ஆராய்ச்சிப் பிரிவில் பணி புரிந்த காலத்தில் தங்கள் வீட்டிற்கு ஒவ்வொரு நாளும் வருவது பற்றியும், அவரது நல் இயல்புகள் பற்றியும் கூறக் கேட்டிருக்கிறேன். நல்ல ஒரு மனிதரை இழந்து விட்டோம்.

‘ஆறிப்போன காயங்களின் வலி’ – நூல்

Posted On ஏப்ரல் 20, 2018

Filed under uncategorized

Comments Dropped leave a response

வெற்றிச் செல்வியின் தடுப்பு முகாம் / புனர்வாழ்வு நிலைய வாழ்க்கையின் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ வாசித்து முடித்தேன். எதையும் அனுபவித்தால்தான் உண்மையான வலி புரியும். இருந்தாலும் வாசிப்பினூடே, தொடரும் வலியும், ஏதோவொரு இனம்புரியாத குற்றவுணர்வும் இருந்துகொண்டே இருந்தது. பல இடங்கள் (அல்லது முழுமையுமே) ஒரு கலக்கத்தைத் தருவதாய் இருந்தது.

மனதை மிகவும் பாதித்த சில வரிகள்:

  • “அவங்கள் யாருக்குப் பதில் சொல்லணும் எண்டு தேவை கிடக்குது இங்க. விட்டாச்சுது எண்டு சொல்லியாச்சுது. பத்துப்பேரை விட்டிட்டு, இருபதுபேரைக் கொன்று போட்டாலும் இங்க உலகமும் கேக்காது. ஊராக்களும் கேக்க மாட்டாங்க.” எத்தனை விரக்தியான வார்த்தைகள்.
  • “போர் அவளது மேல் கையொன்றில் தன் பதிவைச் செய்வதற்காக அக் கையின் உணர்வைப் பறித்திருந்தது. சூம்பிய கையில் விரல்கள் தம் பாட்டில் விரிந்து வேலை செய்வதில்லை. ஆனால் அந்தக் கையால் நாளொன்றுக்கு எத்தனை பேருக்கு அந்த ஆழக் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்துக் கொடுக்கிறாள்! இயலாமை என்பது எல்லாம் உடலில் இல்லை என்பதற்கு அவள் ஒரு உதாரணம்.”
  • “மனிதம். புனர்வாழ்வு என்றால் என்ன? யாராவதுஎதற்காவது பயிற்றுவிக்கப்படவுமில்லை. தொழில்துறைகள்பற்றி அறிமுகங்களைத் தரவுமில்லை. பின்பென்ன புனர்வாழ்வும் கத்தரிக்காயும்?”

அலை அழித்த தமிழ்!

Posted On நவம்பர் 13, 2016

Filed under uncategorized

Comments Dropped leave a response

அலை அழித்த தமிழ்!

இரு பல்கலை மாணவர்கள், அதுவும் அறிவியல் கல்விப் பிரிவில் இருக்கும் மாணவர்கள் ஆழமான அழகு தமிழில் இப்படி ஒரு நூலை எழுதியது உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தியது.

20161113_110403

அலை அழித்த தமிழ் – சுஜீந்தன் பரமேஸ், நீதுஜன் பாலா

கல்வி பயிலும் காலத்தில் வரலாறு எனக்குப் பிடிக்காத பாடமாகவே இருந்தது. அதற்கு, அதனைக் கற்பித்த ஆசிரியரும் ஒரு முக்கியமான காரணம். ஆனால் வரலாற்றை எப்படி ஆர்வமுடன் கேட்கும்படி (வாசிக்கும்படி) செய்வது என்று இந்த இருவரும் நன்கே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். மிகவும் விறுவிறுப்பாக, ஆர்வத்தைத் தூண்டும்படியாக எழுத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.

புனைவும், கற்பனையும் கலந்திருப்பதாக அவர்கள் சொல்லியிருப்பதால், வாசிப்பினூடே (முக்கியமாக இறந்த காலம் பற்றிய பக்கங்களில்) எது கற்பனை என்றும் சேர்த்தே ஆராய்ந்து கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இன்னும் சில முக்கியமான வரலாற்று விடயங்களையும் எழுதியிருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றியது. அவர்களுக்கே இன்னமும் மேலதிகமாக எழுதும் உத்வேகம் இருப்பதையும் கூறிவிட்டார்கள். எனவே அவர்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கலாம்.

எதிர்காலம் பற்றிய கற்பனை (அல்லது எதிர்வுகூறல் என்றும் கொள்ளலாமோ), கவலைக்குரியதாக இருந்தாலும், வித்தியாசமாக எழுதப்பட்டிருந்க்கிறது. எதிர்காலம் மட்டுமன்றி, எழுத்தின் போக்கே வித்தியாசமாக இருந்ததால், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

எனது வாசிப்பு!

Posted On நவம்பர் 13, 2016

Filed under நூல், ரசித்தவை, uncategorized

Comments Dropped leave a response

மலாவியில் இருந்து மீண்டும் நோர்வே வந்தாயிற்று. இந்த குளிரும், இருட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், நோர்வேயில் மீண்டும் இருப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.

norway norway1 norway2 norway3 norway4 norway5 norway6

மலாவியில் இருந்த மெதுவான இணைய இணைப்பு வேகம், என்னை வாசிப்பின் பக்கம் மீண்டும் இழுத்து வந்தது. வாசித்த நூல்கள்:

1. Long walk to freedom – Nelson Mandela

2. நினைவாற்றல் – அகணி, சி.அ.சுரேஷ்

3. வெகுளாமை – அகணி, சி.அ.சுரேஷ்

4. ஒரு கூர் வாளின் நிழலில் – தமிழினி (மின்னூல்)

5. ஆதிரை – சயந்தன்

6. ஆறிப்போன காயங்களின் வலி – வெற்றிச் செல்வி

7. அலை அழித்த தமிழ் – சுஜீந்தன் பரமேஸ், நீதுஜன் பாலா

எல்லா நூல்களுமே நன்றாக இருந்தன. அனைத்தையும்பற்றி எழுத நினைத்திருந்தாலும் எழுத முடியவில்லை. இறுதியாக வாசித்தது அலை அழித்த தமிழ். அதைப் பற்றியாவது எழுதிவிடும் எண்ணம்.

அடுத்து வாசிக்க இருப்பது> The Monk who sold his Ferrari By Robin Sharma

மலாவியில் ஓராண்டு!

Posted On பிப்ரவரி 21, 2016

Filed under மலாவி

Comments Dropped leave a response

மலாவியில் வாழும் ஒராண்டு வாழ்க்கை பற்றி எழுத, ஒரு புதிய பக்கத்தை எழுத ஆரம்பித்தேன்.

அதன் இணைப்பு Life in Malawi

ஆப்பிரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு சிறிய நாடு மலாவி. இது ‘The warm Heart of Africa’ என அழைக்கப்படுகின்றது.

Location of  Malawi  (dark blue)– in Africa  (light blue & dark grey)– in the African Union  (light blue)                                        Location of Nsanje District in Malawi

ஆப்பிரிக்காவில் மலாவி                            மலாவியின் தோற்றம் (மலாவி ஏரியுடன்)

437px-Un-malawi

எமது வாழ்க்கை மலாவியின் மத்திய பிரதேசத்தில் இருக்கும் தலைநகரமான லிலொங்வேயில். மலாவியின் மிகப் பெரிய மருத்துவமனையான Kamuzu Central Hospital (KCH) இல் வேலை.

இடம், கூடப் பணிபுரிபவர்கள், வேலை எல்லாமே பிடித்துள்ளது. மகளுக்கும் பாடசாலை, இடம், நண்பர்கள் என எல்லாமே பிடித்துள்ளது. இலங்கையர்கள், இந்தியர்கள் என பலரும் உள்ளனர். மகளது பாடசாலை நண்பிகள் மூலம் எனக்கும் நண்பர்கள் கிடைத்துள்ளனர். எனவே வாழ்க்கை சுமுகமாகப் போகின்றது.

அடிக்கடி எனது Life in Malawi பக்கத்தை இற்றைப்படுத்த வேண்டும் என நினைத்தாலும் முடிவதில்லை. இணைய இணைப்பு இருந்தாலும், மிக மெதுவாக இருப்பதுபோல் தோன்றுவதால், அடிக்கடி எழுதத் தோன்றுவதில்லை. அத்துடன் நேரமும் எப்படி விரைவாக ஓடிவிடுகின்றதோ தெரியவில்லை 🙂

குருவி சொன்ன கதை!

Posted On ஜனவரி 26, 2016

Filed under எனது கதை

Comments Dropped leave a response

இதனை ஒரு மீள்பதிவு என்று சொல்லலாம். இதனை எப்போதோ பதிவு செய்திருந்தேன். ஆனாலும் எனது வலைப்பதிவிலிருந்து காணாமல் போனது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், தள நிருவாகத்தில் போய்ப் பார்த்தால், பதிவு Published என்றே காட்டுகின்றது. ஆனால் பதிவை வலைப்பதிவில் பார்க்க முடியவில்லை. எனவே இதனை மீள்பதிவு செய்து பார்க்கிறேன்.

குருவி சொன்ன கதை!!

சுவரிலே மாட்டியிருந்த குருவி ஒன்றை உள்ளே வைத்திருக்கும் குடிசை அமைப்புடைய கடிகாரத்தில், சின்ன குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த அழகான குருவி ஒன்று, நேரம் ஒரு மணி என்பதை கூ கூஎன்று அறிவித்துவிட்டு மீண்டும் குடிசைக்குள் போய் உட்கார்ந்து கொண்டது.அட, அதற்குள் மணி ஒன்று ஆகி விட்டதா?’ என்று அகல்யா தனக்குள் கேட்டுக் கொண்டாள். காலை எழுந்து முற்றம் கூட்டி முடிக்கவே ஒரு மணித்தியாலம் எடுத்தது அகல்யாவுக்கு. அவர்கள் வீட்டிற்கு முன்னால் பெரிய முற்றம். வெள்ளை வெளேரென்று, மிகவும் அழகாக இருக்கும் வெண்மணல் முற்றம். அந்த வீட்டை அப்பா கட்ட நினைத்த போது அந்த வளவு வெறும் பள்ளக் காணியாகத்தான் இருந்தது. அதற்கு செம்மண் வாங்கி கொட்டி நிரப்பி விட்டு, அதன் மேலாக, கடற்கரை மணலும் வாங்கி கொட்டியிருந்தார் அப்பா. பூங்கன்றுகள் வைப்பதற்கு இடம் ஒதுக்கி, அந்த இடத்தில் மட்டும் செம்மண் நிரப்பியபடி விட்டிருந்தார்கள். அகல்யாவும், அம்மாவுமாக இணைந்து அங்கே விதம் விதமான பூக்கன்றுகளை வைத்து, அதற்கு நீர் இறைத்து பராமரித்த நாட்கள் அவளது நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது.

அகல்யா வாசலுக்கு வந்து முற்றத்தில் இறங்கிப் பார்த்தாள். உச்சி வெயில் அகோரமாக எரித்தது. வெள்ளை மணல் நெருப்பாய் காலில் சுட்டது. அம்மா நெல் அவித்து, முற்றத்திலே பாயில் பரவி இருந்தார். நெல் மணிகளை உண்ண காகம் வந்து விடுமே என்று, நீண்ட தடி ஒன்று காகம் கலைப்பதற்காக சுவரில் சாத்தப்பட்டு இருந்தது. காகம் கலைப்பதே சில சமயம் பெரிய வேலையாக இருக்கும். ஆனால் என்ன அதிசயம்! ஒரு காகமும் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அவற்றிற்கும் இந்த வெயிலைக் கண்டு பயம் வந்து விட்டது போலும் என்று அகல்யா எண்ணிக் கொண்டாள்.

அப்பா வேலை முடிந்து வருவதற்கு இன்று இரவாகி விடும் என்று கூறிச் சென்றிருந்தார். எனவே அம்மாவும், அகல்யாவுமாக நிதானமாக பல கதைகளும் பேசியபடியே வீட்டு வேலைகளை முடித்து, மதிய சமையலையும் முடித்து, சாப்பிட்டும் ஆயிற்று. அகல்யாவால் நாட்டு சூழ்நிலை காரணமாக ஆறு மாதமளவில் வீட்டுக்கு வர முடியவில்லை. அதனால் அவளுக்கு அம்மாவிடம் சொல்ல நிறைய விடயங்கள் இருந்தது. அவளுக்கு வீட்டுக்கு வந்ததுமே அம்மாவிடம் பல்கலைக்கழகத்தில் நடந்த எல்லா விடயங்களையும் சொல்லி ஆக வேண்டும். அப்பா கூட அவர்களை கேலி செய்வார், “சினேகிதிகளிடம் கூட இப்படி வாய் ஓயாமல்தான் பேசுவாயா?” என்று. அம்மாதான் அவளுக்கு மிக நெருங்கிய சினேகிதி. அதற்குப் பிறகுதான் மற்ற சினேகிதிகள்.

முற்றத்திலே வீட்டில் இருந்து பத்தடிகள் தள்ளி அடர்ந்து படர்ந்த மாமரம். அநேகமாக மதிய உணவை முடித்த பின்னர் அனைவரும் அந்த மாமர நிழலில் வந்து அமர்ந்து கொள்வார்கள். வீட்டுக்குள் இருப்பதை விட இந்த மாமர நிழலில் வந்து அமர்ந்து கொள்ளும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது. இன்று அவள் வந்து மாமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த சாய்மனைக் கதிரையில் அமர்ந்தாள். சிறிது நேரத்தில் அம்மாவும் அங்கே வந்து, அருகிலிருந்த வாங்கு ஒன்றில் அமர்ந்து கொண்டார். இருவரும் மீண்டும் அவள் ஊரில் இல்லாதபோது, ஊரில் நடந்த புதினங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார்கள். அம்மா அப்படியே சரிந்து வாங்கில் படுத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்.

அப்போது சின்னஞ் சிறிய குருவி ஒன்று அடிக்கடி தங்கள் தலைக்கு மேலாக அந்த மாமரத்திற்கு வந்து வந்து போவதை அகல்யா அவதானித்தாள். எதற்கு அந்த இத் குருவி வந்து வந்து போகிறது என்று குறிப்பாகப் பார்த்தபோதுதான், அங்கே ஒரு குருவிக் கூடு இருப்பதைக் கண்டாள். அதற்குள் குருவிக் குஞ்சுகள் இருக்கிறதா என்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டது அவளுக்கு. ஆனால் எப்படி பார்ப்பது, அவள்தான் அவ்வளவாய் உயரம் கிடையாதே. கொஞ்சம் தூரமாகப் போய் நின்று எம்பிப் பார்த்த போது, அந்த கூட்டுக்குள் இருந்து வெளிப்பக்கமாக அந்தக் குருவிக் குஞ்சுகள் சின்னஞ்சிறிய அலகுகளை அகலத் திறப்பதைப் பார்க்க கூடியதாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் போகத்தான் அவளுக்குத் தெரிந்தது, அங்கே வந்து போவது ஒரு குருவி அல்ல, இரண்டு குருவிகள் என்று.

ஒரு குருவி வந்து விட்டுப் போய்க்கொண்டிருக்கும்போதே, அடுத்த குருவி உணவுடன் வந்து குஞ்சுகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தது. “அடடே, இவை அந்தக் குஞ்சுகளின் அம்மாவும், அப்பாவுமாகத்தான் இருக்கும்” என்று அம்மாவிடம் சொன்னாள்.

எத்தனை சிறிய குருவிகள், அவைகள்தான் எத்தனை பொறுப்புடன், குழந்தைகளுக்குஉணவூட்டுகின்றன. அம்மா சொன்னார், “அந்த குருவிக்குப் பெயர் பிலாக்கொட்டை குருவி” என்று. பலாக்கொட்டை போலிருப்பதால் பலாக்கொட்டைக் குருவி எனப் பெயர்வந்திருக்கலாம். பலாக்கொட்டை பேச்சுவழக்கில் பிலாக்கொட்டையாகிவிட்டது.அந்தக் குருவிகள், வந்து வந்து உணவூட்டுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பதிலேயே, நேரம் கடந்து கொண்டிருந்தது. அப்போது, அகல்யாவின் பெரியம்மாவின் மகன், ரூபன் சைக்கிளில் வந்தான். அகல்யா அக்கா பல்கலைக்கழகத்தில் இருந்து லீவில் வந்திருக்கிறார் என்றால், அவனும் முக்கால்வாசி நேரம், சித்தி வீட்டிலேயேதான் இருப்பான். சகல கதையும் பேசி அரட்டை அடிப்பதில் அவர்களுக்கு நன்றாகப் பொழுது போகும்.

இன்றைக்கு அந்தக் குருவிகளைச் சுற்றிச் சுற்றியே அவர்களது சம்பாஷணை அமைந்திருந்தது. ரூபன் நல்ல உயரம். ஆறு அடிக்கும் மேலே, மெல்லிய ஒடிந்துவிடுவது போன்ற உடல் அமைப்பு. அகல்யா கூட அவனைக் கேலி செய்வாள், “எலும்புக்கு மேல் தோலைப் போர்த்தி வைத்திருக்கிறாயா?” என்று. பதிலுக்கு அவனும் அகல்யாவை, “குண்டுப் பூசணிக்காய்” என்று கேலி செய்வான். கொஞ்சம் எட்டிப் பிடித்தால், அவனுக்கு அந்தக் குருவிக்கூடு எட்டும் உயரத்திலேயே இருக்கிறது. அவனும் அந்தக் குஞ்சுகளைப் பார்ப்பதற்காக, அந்தக் கூடு இருந்த கிளையைப் பிடித்து, மெதுவாக கீழ் நோக்கி இழுத்து உள்ளே எட்டிப்பார்க்க முயன்றான்.

எங்குதான் இருந்தனவோ அந்தக் குருவிகள். இரண்டும் விரைவாகப் பறந்து வந்து ரூபனைச் சுற்றிச் சுற்றி பறந்த படி கீ கீ கீஎன்று கத்தின. கிளையைவிட்டு விட்டு ரூபன் பதறினான். அகல்யாவும், அம்மாவும் கூடப் பதறித்தான் போனார்கள். அந்தக் குருவிகள் இரண்டும் பறந்த வேகமும், கத்திய கத்தலும், அவை எத்தனை கோபமாக இருக்கின்றன என்பதை காட்டின. அவை ரூபனைக் கொத்திவிடுவன போல இருந்தன. அந்தக் கத்தலுக்கு அகல்யா பயந்தே போனாள். தங்களது குஞ்சுகளைப் பிடிக்கப் போகின்றான் என்று நினைத்துத்தான் அவை அத்தனை கத்தல் போட்டன. நல்ல வேளையாக, சிறிது நேரம் கத்தி விட்டு, அவை ரூபனை விட்டு அகன்றன.”குருவிகள் அகன்று விட்டனவே என்றுவிட்டு, மீண்டும், அவை என்ன செய்கின்றன என்று மூவருமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் அந்தக் குருவிகள் இரண்டும் உணவு கொண்டு வருவதை நிறுத்தி விட்டு, சுற்றிச் சுற்றி வந்து கத்திக் கொண்டிருந்தன. கூட்டுக்கு அருகில் சென்று அமர்வதும், கத்துவதும், மீண்டும் தூரமாகச் சென்று வேலியுடன் இருந்த நாவல் மரத்தில் அமர்வதுமாக இருந்தன.

இவை ஏன் குஞ்சுகளுக்கு உணவு கொண்டு வருவதை நிறுத்திவிட்டன, ஏன் சுற்றிச்சுற்றி கத்திக் கொண்டே இருக்கின்றனஎன்று அகல்யாவும், ரூபனும் திகைத்துப் போயிருந்தார்கள். மிகவும் கவலையுடன் அந்தக் குருவிகளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரூபனுக்கு, ‘தன்னால்தானே இப்போ அந்தக் குருவிக் குஞ்சுகளுக்கு உணவு கிடைக்கவில்லைஎன்று ஆதங்கமாக இருந்தது. என்ன செய்வது என்றே புரியவில்லை. அம்மா மட்டும் எதையோ உணர்ந்தவராக, எதுவும் பேசாமல் மெளனமாகவே இருந்தார்.

இப்படியே சில நிமிடங்கள் கரைந்தது. அந்தக் குருவிக் குஞ்சுகளும் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தன. அவற்றுக்கு பசியாகவும் இருக்கலாம். என்ன செய்வது என்று புரியாத நிலையில், குருவிக்குஞ்சுகளுடன் சேர்ந்து அகல்யாவும் ரூபனும் கூட துடித்துக் கொண்டிருந்தார்கள்.

என்ன ஆச்சரியம் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் கடந்த பின்னர் ஒரு குருவிக் குஞ்சு மெதுவாக வெளியே பறந்து வந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக அந்த மாமரக் கிளைகளில் பறந்து பறந்து உட்கார்ந்தது. அப்போது, அந்த குருவிகள் நாவல் மரத்துக்கு தூரமாக போக, குஞ்சும் அங்கேயே பறந்து, அவர்களுடன் இணைந்து உட்கார்ந்து கொண்டது. அதற்குப் பிறகு ஒரு குருவி, அந்தக் குஞ்சைக் கூட்டிக் கொண்டு பறந்து பறந்து தூரமாகச் செல்ல ஆரம்பித்தது. மற்ற குருவி, தொடர்ந்தும், மற்ற இரு குஞ்சுகளையும் வெளியே பறக்கச் செய்யும் முயற்சியில் இருந்தது.

அதுதான் அம்மாக் குருவியோ?’ என்று அகல்யா நினைத்துக் கொண்டாள்.இப்படியே மேலும் ஒரிரு மணி நேரம் ஓடி முடியும்போது, மற்ற இரு குஞ்சுகளும் கூட மெதுவாக கிளம்பிப் பறக்க ஆரம்பித்தன.

ஆபத்து என்று உணர்ந்த பின்னர், அந்தக் குருவிகள் எத்தனை சாமர்த்தியமாக அந்த குஞ்சுகளை தம்முடன் அழைத்துச் சென்று விட்டன என்று நினைக்கையில் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது அகல்யாவுக்கு. குஞ்சுகளுக்கு உணவைக் கொடுக்காமல் ஏன் இந்தக் குருவிகள் குஞ்சுகளைத் தண்டிக்கின்றன?’ என்று எண்ணி நொந்து கொண்டிருந்த அகல்யாவுக்கு, இப்போதுதான் அந்தக் குருவிகளின் சாதுர்யம் புரிந்தது. இந்தச் சிறிய குருவிகளுக்கு இத்தனை புத்திசாலித்தனமா? வியப்பாகத்தான் இருந்தது அவளுக்கு.

உணவு கொடுக்காமல் குஞ்சுகளைப் பட்டினி போட்டாலும், அவை ஆபத்து என்று உணர்ந்த இடத்தில் இருந்து, குஞ்சுகளை எப்படியோ கூட்டிச் சென்றுவிட்டனவே? ”நமது பெற்றோர்கள்கூட நமக்கு கஷ்டமாக இருக்கும் சில விடயங்களைச் செய்யச்சொல்லி வற்புறுத்துவது நமது நன்மைக்காகத்தானே?’ என்று அகல்யா தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

அம்மா மட்டும், மெதுவாக புன்னகை புரிந்தபடியே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படித்தான் நடக்கப் போகிறது என்பது முதலிலேயே அம்மாவுக்குப் புரிந்திருந்ததோ? இதுதான் அனுபவம் அம்மாவுக்கு தந்திருக்கும் முதிர்ச்சி போலும்என்று அகல்யா தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

நேரம் போனதே தெரியவில்லை. இனியாவது எழுந்து வீட்டு வேலைகளைப் பார்ப்போம்என்று சொன்னபடியே அம்மாவீட்டினுள் சென்றார். அகல்யாவும், ரூபனும் பிரமிப்பிலிருந்து மீளாமல் குருவிகள் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு, எதுவும் பேசத் தோன்றாமல் அமர்ந்திருந்தார்கள்.

வன்முறைக்கு எதிர்ப்பு!

Posted On ஜனவரி 10, 2016

Filed under சமூகம்

Comments Dropped leave a response

எப்பொழுதோ எழுதப்பட்ட இந்தப் பதிவு draft இல் இருந்தது. அதனை தற்போது பதிவிடுகின்றேன்.

வன்முறைக்கு எதிர்ப்பு

வன்முறைக்கு எதிராக மகாத்மா காந்தியின் பேரனான டாக்டர் அருண் காந்தியும், அவரது மனவியாரும் இணைந்து எம்.கே.காந்தி நிறுவனத்தை (M.K.Gandhi Institute for nonviolence) 1991 இலிருந்து நடாத்தி வருகிறார்கள். அவர்கள் இருவரும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, வன்முறைக்கு எதிராக விரிவுரைகள் ஆற்றி வருகிறார்கள். இந் நிறுவனத்தின் கல்வித்திட்டமானது அபிப்பிராய பேதங்களை தடுத்தல், கோபத்தை அடக்கியாளல், நல்ல உறவுகளை, சமூகத்தை கட்டியெழுப்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டது. உள்ளூர் மட்டத்திலும், தேச மட்டத்திலும், உலக மட்டத்திலும் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும், நடைமுறைப்படுத்துவதுமே இந் நிறுவனத்தின் முக்கியமான நோக்கமாகும். Puerto Rico பல்கலைக்கழகத்தில் டாக்டர் அருண் காந்தி வழங்கிய விரிவுரை ஒன்றில் வன்முறையற்ற, முரட்டுத்தனமற்ற, கொடூரமற்ற, பலாத்காரமற்ற பிள்ளை பராமரிப்பு (non-violent parenting) பற்றி பேசும்போது, அவர் குறிப்பிட்டிருந்த விடயமொன்றை அண்மையில் நண்பரொருவர் மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தார். அதை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். டாக்டர் அருண் காந்தி அவர்கள் அவரது பதினாறாவது வயதில், தனது பெற்றோருடனும், இரு சகோதரிகளுடனும் தென்னாபிரிக்காவில் Durban என்ற இடத்தில் வசித்து வந்தபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை அந்த விரிவுரையில் நினைவு கூர்ந்துள்ளார். அந்த Durban என்ற இடம் ஒரு கிராமப்புறமாகவும், அக்கம்பக்கத்தார் என்று சொல்லிக் கொள்ள அதிகமானோர் இல்லாத ஒரு இடமாகவும் இருந்ததால், தானும், தனது சகோதரிகளும், 18 மைல் தொலைவிலுள்ள நகரத்திற்கு செல்ல ஏற்படும் சந்தர்ப்பங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தபடி இருப்பார்களாம். ஒரு முறை அவரது தந்தையார் ஒரு முழுநாள் கூட்டத்திற்காக நகரத்திற்கு செல்ல வேண்டி இருந்தபோது, அவரிடம் தன்னை காரில் நகரத்திற்கு அழைத்துச் செல்லும்படி கேட்டாராம். அத்துடன் தாயாரும் அங்கு வாங்கி வர வேண்டிய மளிகைபொருட்களுக்கு ஒரு துண்டை கொடுத்தாராம். அத்துடன் நகரத்தில் முடிக்க வேண்டிய சிறு சிறு வேலைகள் பற்றியும் சொன்னார்களாம். அதில் ஒன்று காரை பழுது பார்த்தலுமாகும். அவரும் நண்பர்களை சந்திக்கலாம் என்ற ஆவலிலும், நகரத்திற்கு செல்லும் உற்சாகத்திலும் சென்றுள்ளார். தந்தையார் கூட்டம் நடக்குமிடத்தில் இறங்கிக் கொண்டு, தன்னை 5 மணிக்கு வந்து ஏற்றிச் செல்லும்படி கூறி இருக்கிறார். பின்னர் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு இவர் நண்பர்களுடன், ஒரு ஆங்கிலப்படத்திற்கு சென்றிருக்கிறார். படத்தில் மூழ்கிப்போய் விட்டதால் நேரத்தை தவற விட்டுவிட்டாராம். அவர் நினைவுக்கு வந்து கார் திருத்துமிடம் போய் காரை எடுத்துக் கொண்டு தந்தையாரிடம் சென்றபோது நேரம் 6 மணி ஆகி விட்டதாம். அப்போது தகப்பனார் தாமதமாக வந்ததற்கு காரணம் கேட்டபோது, மேலைநாட்டு படம் பார்த்து வருகிறேன் என்ற சொல்லத் தயக்கமாக இருந்ததால், கார் திருத்துமிடத்தில் அவர்கள் தாமதமாகத்தான் தந்தார்கள் என்று கூறி இருக்கின்றார். தகப்பனார் கார் திருத்துமிடத்திற்கு ஏற்கனவே தொலைபேசியில் அழைத்துப் பார்த்திருந்த விடயம் இவர் அறிந்திருக்கவில்லையாம். அப்போது தகப்பனார் சொன்னாராம், உண்மையில் தாமதத்திற்கு காரணத்தை என்னிடம் சொல்ல நீ தயங்கும்படி, அல்லது அதற்காக ஒரு பொய்யை சொல்லும்படி நான் உன்னை வளர்த்து விட்டேன். அப்படியானால் நான் உன்னை வளர்த்த முறையில் எங்கோ தவறு நடந்துள்ளது. அதற்காக, இன்று இந்த 18 மைலும் அதை யோசித்த படியே நடந்து வருகிறேன். நீ காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போ என்று சொல்லி விட்டாராம். அந்த இருட்டிலும், அந்த பாதையிலும் அவர் ஐந்தரை மணித்தியாலம் நடந்து வர விட்டுவிட்டு போக முடியாமல் இருந்ததால் அவருக்குப் பின்னால் காரை மெதுவாக ஓட்டியபடி, தான் சொன்ன அவசியமற்ற பொய்யை நினைத்த படியே போனாராம். அன்றே எந்த பொய்யும் சொல்லக் கூடாது என்று அவர் முடிவு எடுத்தாராம். வேறு விதமான வன்முறையுடன் கூடிய தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அந்த தண்டனையை ஏற்றுக் கொண்டு, அதன் வலி மறைந்ததும், அந்த நிகழ்ச்சியையும் மறந்திருக்கக் கூடும், தொடர்ந்தும் அதே மாதிரியான பொய்களும் சொல்லி இருக்கவும் கூடும். ஆனால் இந்த தனித்தன்மையுடைய, சக்தி மிக்க, வன்முறையற்ற முறை தன்னை ஒரு நல்ல வழிக்கு திருப்ப முடிந்தது என்று கூறியுள்ளார். இதுவே வன்முறையற்ற ஒரு செயற்பாட்டின் பலம் பொருந்திய சக்தி என்கிறார் டாக்டர் அருண் காந்தி அவர்கள்.

அடுத்த பக்கம் »