உலகமும், சுற்றுச் சூழல் மாசடைதலும்!
பதிந்தவர் கலை மேல் ஜூன் 18, 2007
உலக சுற்றுச் சூழல் தினமன்று, சுற்றுச் சூழல் பாதுகாப்பு சம்பந்தமாக பல்கலைக் கழக வளாகத்தில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளைப் பார்ப்பதற்கும், அது தொடர்பான ஒரு செமினாருக்கு போகவும், சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்தை விளக்கும் ஒரு விவரணப்படத்தை பார்வையிடவும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அந்தப் படம், ‘An inconvenient truth’ . அமெரிக்க அரசியலில் மிக முக்கிய பங்கெடுத்த Al.Gore உலக வெப்பமயமாதல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய இந்த விவரணப் படத்தை தயாரித்து வழங்கியிருக்கின்றார். அதில் நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் சேர்த்து, இந்த உலகம் பாதிப்பட்டுக் கொண்டிருப்பது பற்றி கவலைப்படாமல் இருக்கும் அறியாமை பற்றியும், அதை தடுத்து நிறுத்த நம்மாலான முயற்சியை எடுக்க வேண்டும் என்ற உண்மையும் கூறப்படுகின்றது. நம்மைத் தொடர்ந்து வரும் சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட உலகத்தை விட்டுச் செல்லப் போகின்றோம். நச்சு வாயுக்களால் நிரப்பப்பட்டு, அவர்களை அழிக்க கூடிய சூழலையா? சலசலத்தோடும் நீரோடை, காற்றில் அலையும் இலைகளின் சத்தம், பறவைகளின் இனிமையான குரல் இப்படியெல்லாம், நாம் அனுபவித்த இனிமைகளை நமது சந்ததிக்கு தெரியாமலே ஆக்கி விடப் போகின்றோமா என்ற கேள்வியை படம் பார்த்த பின்னர் நமக்குள் ஏற்படுத்துகின்றார் Al.Gore. படம் பார்த்து முடிக்கையில், மனதில் பாரமாய் உணர வேண்டியிருந்தது.
சூழல் மாசினால் முதலில் வெப்பநிலை அதிகரிப்பும், அதனைத் தொடர்ந்த பாதிப்புக்களும் ஏற்படும் நாடுகள் வட துருவத்தை அண்டியிருக்கும் நாடுகள் (நோர்வேயும்தான்
). வெப்பநிலை அதிகரிப்பால் கடல்மட்டம் உயரும்போது நெதர்லாந்து இலகுவாக பாதிப்படையும் (ஏற்கனவே கடல் மட்டத்திற்கு கீழே நிலப் பகுதியை கொண்டிருக்கு). இப்படி பல தகவல்கள் படத்தில் தரப்பட்டிருக்கின்றது.
Al.Gore யின் குடும்பத்துக்கு சொந்தமான விவசாயப் பண்ணையில் புகையிலை வளர்த்து வந்தார்களாம். புகையிலை புற்று நோயை ஏற்படுத்தும் வலிமை கொண்டது என்பது தெரிந்தும், அவர்கள் அதை தொடர்ந்து செய்திருக்கின்றார்கள். Al.Gore யின் அக்கா சிறு வயதிலேயே புகைப்பிடிக்க ஆரம்பித்து, இறுதியில் நுரையீரல் புற்று நோயால் இறந்த போதுதான், அந்த தாக்கம் தமக்கு ஏற்பட்டதாகவும், அன்றிலிருந்து புகையிலை பயிரிடுவதை அவரது அப்பா கை விட்டதாகவும் குறிப்பிட்டார்.
தமக்கென்று பாதிப்பு வரும்வரை, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்புக்களை நாம் அலட்சியம் செய்து விடுகின்றோம். சுற்றுச் சூழல் மாசடைவது, வெளிப் பார்வைக்கு, வெட்ட வெளிச்சமாகத் தெரிவதாகவோ, அல்லது குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுவதாகவோ இல்லாமல் போவதாலும், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமலே நம்மை பாதிப்பதாலும், அதற்கு தரப் படவேண்டிய முக்கியத்துவம் தரப்படாமலே போய்க் கொண்டிருக்கின்றது. பயங்கரவாதிகளின் பாதிப்பை விடக் கொடூரமானதாக சுற்றுச் சூழல் மாசு வந்து கொண்டிருக்கின்றது என்று குறிப்பிடுகின்றார் Al.Gore.
ஐரோப்பிய நாடுகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அதி முன்னணியில் இருக்கின்றன. ஐரோப்பாவை பொறுத்த அளவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு உதவக் கூடிய வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சூழல் மாசடைதலை தவிர்க்க நான் ஏதாவது பங்களிப்பு செய்ய முடியுமா? ஆம் என்கின்றார்கள். நாம் மேற்கொள்ளக் கூடிய 10 இலகுவான காரியங்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றும் வீட்டில், வெளியில், அலுவலகத்தில் நாம் எவ்வாறு நடந்து கொண்டால், நமது பங்களிப்பை பயனுள்ளதாக்கலாம் என்று இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. நாமும் ஏன் நமது பங்களிப்பை இன்றே ஆரம்பிக்க கூடாது?







Friendly Fire சொன்னார்
சுற்றுச் சூழல் பற்றிய உங்களுடை இந்த பதிவிற்கும், நீங்கள் அளித்த சுட்டிகளுக்கும் நன்றி. ஒட்டுமொத்த மனித சமுதாயமும் ஒற்றுமையுடன் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நேரத்தில் இன்னமும் நாம் அற்பமான இனச்சண்டை, மதச்சண்டை, சாதிச்சண்டை போட்டுக்கொண்டிருப்பது தான் பரிதாபம். சுற்றுச்சூழல் மாசுபடுதல் பற்றிய விழிப்புணர்வு வளர வேண்டும். ‘An inconvenient truth’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது பார்க்க வேண்டும்.
ரவிசங்கர் சொன்னார்
இதில உலக வெப்பமாதல்னால நெதர்லாந்து எப்படி டக்குன்னு தண்ணில முங்கும்னு graphicsல காமிப்பாங்க..அத நெதர்லாந்துல உக்கார்ந்தே திகிலோட பார்த்தவங்கள்ல நானும் ஒருத்தன். தனக்கு வந்தா தான் பிரச்சினையைத் தீர்க்க செயல்படுவாங்கங்கிறது உண்மை தான். ஆனா, ஏற்கனவே வளர்ந்த நாடுகள் செஞ்ச தப்பால இதில அதிகம் பாதிக்கப்படுறது வளர்ச்சி அடையாத நாடுகள் தான். ஆக, அவங்களுக்கு பாதிப்பு வந்தாலும் அவங்களால ஒன்னும் செய்ய முடியாது. இப்ப, ஐரோப்பிய நாடுகள் இதில ஆக்கப்பூர்வமா செயல்படுற மாதிரி இருக்கலாம். ஆனா, செய்யுற தப்ப எல்லாம் அவங்க முன்னாடியே செஞ்சு முடிச்சு இப்ப நல்ல பிள்ளை மாதிரி ஆகிக்கிட்டாங்க. தங்கள் நாடுகள்ல சூழல் மாசு உண்டு பண்ணுற பல தொழில்களுக்கும் அவர்கள் வளரும் நாடுகளில் தொழில்சாலைகளை நிறுவிக்கிறாங்க..நாமும் அந்நிய முதலீடு வருதுன்னு ஏத்துக்கிறோம். பின்னாடி இதோட விளைவுகள் பூதாகரமா இருக்கும்
கலை சொன்னார்
உண்மைதான் friendly fire. இன்னும் கொஞ்சம் விளக்கமா, நாம இந்த சுற்றுச் சூழல் மாசை குறைக்க செய்யக் கூடிய எளிமையான வழிகளையும் கொடுக்கலாம்னு இருந்தேன். ஆனால் நேரக் குறைபாடு காரணமா, அதை செய்ய முடியலை.
ரவி! நீங்க சொல்வதும் சரிதான். வளர்ந்த நாடுகள் செய்த தப்புத்தான். ஆனா இப்போவாவது அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு, கொஞ்சமாவது அதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறது பத்தி திருப்தி அடைய வேண்டியதுதான். அது மட்டுமல்லாம, நம்மால செய்யக் கூடியதை நாமும் செய்ய ஆரம்பிக்க வேண்டியதுதான்.